அடுத்த அடி: ஆபாசம் மற்றும் அவதூறான கமெண்ட் பட்டியலை தயார் செய்யும் சைபர் கிரைம்!
ஆபாசமாகவும், அவதூறாகவும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தவர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்று சைபர் கிரைம் டிஜிபிக்கு நீதிபதி தண்டபானி புதிய ஆணையைப் பிறப்பித்துள்ளார். இந்த பட்டியலை வைத்து ஆபாசமாகவும், அவதூறாகவும் கமெண்ட் செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகவலைத்தளத்தில் அவதூறாக கமெண்ட்
சமூக வலைத்தளங்களில் யார் வேண்டுமானாலும் தங்களின் கருத்துகளை பொதுவெளியில் முன்வைக்கலாம் என்ற நிலை தற்பொழுது பின்பற்றப்பட்டு வருகிறது. பொதுவாக எந்த ஒரு சம்பவம் அல்லது ஏதேனும் நிகழ்வுகள் நிகழ்ந்தால் சாமானியர்கள் கூட தங்களின் கருத்துகளை கமெண்டாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அவதூறான கமெண்ட் மற்றும் ஆபாச கமெண்ட்
சிலரின் பொதுவான கருத்து அல்லது கமெண்டிற்கு மற்றவர்களின் எதிர்ப்புகளும் கமெண்ட்டாக அந்த பதிவின் கீழ் சமர்ப்பிக்கப்படுகிறது. இது ஒரு விவாதப் பொருளாக மாறி சாதாரண கமெண்ட்களுக்கு நடுவில் சில அவதூறான கமெண்ட் மற்றும் ஆபாச கமெண்ட்களை பயனர்கள் எளிதாகப் பதிவிடும் சூழலே இங்கு உருவாகியுள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் கைது
எளிதாக ஒருவரை அவதூறாகவும், ஆபாசமாகவும் திட்டி சமூக வலைத்தளத்தில் கமெண்ட் செய்யும் பழக்கம் மக்களிடையே பரவி வரும் நிலையில், சென்னையைச் சேர்ந்த மருதாச்சலம் என்பவர் நீதிபதி ஒருவர் குறித்து சமூகவலைத்தளத்தில் அவதூறாகவும், ஆபாசமாகவும் கருத்து தெரிவித்திருந்தார். இதனால் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுபோன்ற சம்பவங்களில் யார் யார் ஈடுபடுகிறார்கள்?
சிறையில் அடைக்கப்பட்ட நபர் தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி தண்டபானி தலைமையில் நடைபெற்றது. அவதூறு மற்றும் ஆபாச வழக்குகள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? இதுபோன்ற செயல்களில் யார் யார் ஈடுபடுகிறார்கள் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

சைபர் கிரைம் டிஜிபியிடம் பட்டியல் தயார் செய்ய உத்தரவு
நீதித்துறை, அரசுப் பணிகளில் இருப்பவர்கள் குறித்தும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குறித்தும் அவதூறாகவும் ஆபாசமாகவும் கருத்து தெரிவித்தவர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி சைபர் கிரைம் டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தார். இதுகுறித்து காவல்துறையினர் தாக்கல் செய்த அறிக்கை திருப்திகரமாக இல்லை என்று கூறி வழக்கை மீண்டும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
மருதாச்சலம் தான் கருத்து தெரிவித்ததற்கு மன்னிப்பு தெரிவித்தால் மட்டுமே ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்து, காவல்துறையினரிடம் மீண்டும் ஆபாசமாகவும், அவதூறாகவும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தவர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications