பேங்கில இருந்து பேசுறோம்; ஏ.டி.எம் கார்டு நம்பர் சொல்லுங்க - 50 லட்சம் அபேஸ் செய்தவர் கைது!
வங்கி ஊழியர் போல மக்களிடம் பேசி, அவர்களின் ஏ.டி.எம் கார்டு லாக் செய்யப்பட்டுள்ளது, அதைச் சரி செய்து தருகிறோம் என்று போலியான தகவலைக் கூறி அவர்களின் ஏ.டி.எம் கார்டு விபரங்களைச் சேகரித்து, சுமார் 50 லட்சம் வரை ஆன்லைன் மூலம் பணத்தைக் கொள்ளையடித்து வந்த இளைஞரை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஏ.டி.எம் கார்டு மோசடி
கடந்த சில வருடங்களாகத் தமிழகத்தில் இந்த ஏ.டி.எம் கார்டு மோசடி நடந்தேறி வருகிறது. ஏ.டி.எம் கார்டு பயனர்களுக்கு வங்கி ஊழியர் போல போனில் அழைத்து, உங்கள் ஏ.டி.எம் கார்டு 'லாக்' செய்யப்பட்டுள்ளது, அதைச் சரி செய்து தருகிறோம் என்று கூறி அவர்களின் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை ஒரு கும்பல் சூறையாடி வந்தது. இது தொடர்பாகப் பல புகார்கள் சைபர் கிரைம் போலீசாருக்கு வந்து குவிந்தது.

ஆன்லைன் மூலம் பணம் பணம் திருட்டு
ஆன்லைன் மூலம் பணத்தைக் கொள்ளையடிக்கும் கும்பலை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். சைபர் கிரைம் போலீசாரின் தீவிரமான விசாரணையில் நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன், ராஜ்குமார் என்பவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இவர் அதே பகுதியில் ஆன்லைன் பிசினஸ் செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லையை சேர்ந்த ராஜ்குமார்
சைபர் கிரைம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராஜ்குமார், மக்களிடம் போனில் வங்கி ஊழியர் போலப் பேசி அவர்களின் ஏ.டி.எம் கார்டு விபரங்களைச் சேகரித்து, அதை வைத்து அவர்கள் கணக்கில் இருக்கும் பணத்தை ஆன்லைன் மூலம் திருடி வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை இவர் எப்படிச் செய்தார் என்று சைபர் கிரைம் போலீசார் நடத்திய கிடுக்கு பிடி விசாரணையில் பல உண்மைகள் வெளியாகியுள்ளது.

வங்கி ஊழியர் போல் போனில் ஏமாற்றி பணம் கொள்ளை
இவர் வங்கி ஊழியர் போல் போனில் மக்களை அழைத்து, அவர்களின் ஏ.டி.எம் கார்டு விபரங்களைச் சேகரித்துள்ளார், பணம் எடுப்பதற்கான OTP எண்களையும் ஏ.டி.எம் கார்டு உரிமையாளரிடம் இருந்து திருடி, அவர்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை ஒட்டுமொத்தமாகச் சூறையாடி மோசடி செய்து வந்துள்ளார். இதுவரை இப்படி இவர் சுமார் 50 லட்சம் வரை பணத்தைத் திருடியுள்ளது தெரியவந்துள்ளது.

SBI வங்கி கணக்கு முடக்கம்
சில நேரங்களில் பெண் வங்கி ஊழியர் போலவும் இவர் குரலை மாற்றி, ஆண்களிடம் பேசி, அவர்களை நம்ப வைத்து, அவர்களின் ஏ.டி.எம் கார்டு விபரங்களை எளிதாகச் சேகரித்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இவரின் SBI வங்கி கணக்கை சைபர் கிரைம் போலீசார் முடக்கம் செய்துள்ளனர். இதில் சுமார் 8 லட்சம் ரூபாய் இருந்ததாகத் தெரிகிறது. இவருடன் சேர்ந்து, இந்த வேலையைச் செய்த சில கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








