எனக்கு நடந்தது நாட்டில் மறுபடியும் யாருக்கும் நடக்க கூடாது.! எதிர்பார்ப்பை உருவாக்கும் ராக்கெட்ரி.!
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்கள் தனது துறையில் தனி முத்திரை பதித்தவர். குறிப்பாக இஸ்ரோவில் கிரயோஜெனிக் இன்ஜின் வடிவமைப்புக் குழுவின் தலைவராக இருந்தார். பின்பு கிரயோஜெனிக் இன்ஜினுக்கான திரவ எரிபொருள் தயாரிப்பு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுவந்தார்.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்கள் நெல்லை மாவட்டதை சேர்ந்தவர் ஆவார். மேலும் மதுரை தியாகராஜர் கல்லூரியில் பொறியியல் படித்த அவர், இஸ்ரோவில் 1966ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். குறிப்பாக இவர் விண்வெளித்துறையில் இந்தியா அடியெடுத்து வைத்த ஆரம்ப காலகட்டத்தில் முக்கிய பங்காற்றியவர்.

மேலும் விக்ரம் சாராபாய், அப்துல்கலாம், சதீஷ் ராவ் போன்ற புகழ்பெற்ற விஞ்ஞானிகளுடன் பணியாற்றியவர் இந்த நம்பி நாராயணன் அவர்கள். அதிலும் இஸ்ரோவில் அப்துல் கலாம் திடப்பொருட்களை எரிபொருளாக கொண்டு ராக்கெட் செலுத்துவது குறித்து ஆய்வு செய்த போது, நம்பி நாராயணன் திரவ எரிபொருட்கள் பயன்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக திரவ எரிபொருள் தேவையை முன்கூட்டியே கணித்த நம்பி நாராயணன் முதல் திரவ உந்து மோட்டரை 1970-களின் தொடக்கத்தில் உருவாக்கினர். ஆனால் கிரயோஜெனிக் தொழில்நுட்பத்தை வெளிநாடுகளுக்கு வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர் கைதுசெய்யப்பட்டு, 50நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்பு வழக்கை விசாரித்த சி.பி.ஐ, ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு' என உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை அளித்ததால், நம்பி நாராயணன் விடுதலை செய்யப்பட்டார். குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டதால், இஸ்ரோவில் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார். இருந்தபோதிலும் இஸ்ரோவில் இவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்பட்டதால் 1999-ம் ஆண்டு மனித உரிமை ஆணையம் மூலமாக கேரள அரசிடம் இழப்பீடு கோரினார். இதனையடுத்து 2001-ம் ஆண்டு கேரள அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கியது. ஆனாலும் இஸ்ரோவில் பல முக்கியமான சாதனைகளை படைத்துள்ளார் நம்பி நாராயணன்.

இந்நிலையில் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக் கொண்டு உருவாகும் ராக்கெட்ரி படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடித்துள்ளார். அதோடு இந்த படத்தை எழுதி தயாரிக்கவும் செய்துள்ளார் மாதவன். கண்டிப்பாக இந்த படம் இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

நேற்று இந்த படத்தின் டிரெய்லர் வெளியானது. அதில் ஒரு நாயை அழிக்க அதற்கு வெறிநாய்னு பட்டம் கட்டினாலே போதும், அது போல ஒரு மனுஷனை தலை தூக்க முடியாத அளவுக்கு அடிச்சி கொல்லணும்னா, அவனுக்கு தேச துரோகின்னு பட்டம் கொடுத்தா போதும்' என சூர்யா பேசும் வசனங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றுபெறும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications