முடியல, ஒரு போன் வாங்குனது குற்றமா?- ஆன்லைனில் இப்படியெல்லாம் கூட மோசடி., குறிப்பாக பெண்கள் கவனம்!
பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைதளங்களின் மூலம் நட்பாக பேசிப்பழகி பண மோசடி செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதுகுறித்து பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், ஏமாற்றுபவர்கள் நூதன முறையை கையாண்டு ஏமாற்றிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வேலை
குறிப்பாக மின்னஞ்சல், செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி அதற்கு முதற்கட்ட பணத்தையும் வாங்கி ஏமாற்றிய நிகழ்வையும் நாம் கேட்டிருப்போம். அதேபோல் பேஸ்புக்கில், வாட்ஸ் ஆப்பில் தொடர்புகொண்டு ஆசை வார்த்தைகள் கூறி பண மோசடி செய்தது குறித்த செய்திகளை நாம் கடந்து வந்திருக்கிறோம்.

கோடிக்கணக்கான பணம் பரிசு
அதுமட்டுமின்றி சில சமயங்களில் ஒரு பிரபல நிறுவனத்தில் இருந்து உங்கள் மெயில் ஐடிக்கு கோடிக்கணக்கான பணம் பரிசாக கிடைத்திருக்கிறது என ஒரு மின்னஞ்சல் வரும். ஓரிரு நாளில் விமான நிலையத்தில் இருந்து சுங்க அதிகாரி பேசுவதாக கூறி ஒருவர் போன் செய்து உங்களது பரிசுத் தொகை விமான நிலையத்திற்கு வந்துள்ளது. அதை பெறுவதற்கு வரி செலுத்த வேண்டும் போன்ற காரணங்களை கூறி நம்மிடம் முன்பணம் கேட்பார்கள். இதுபோல் மோசடி செய்பவர்கள் குறித்தும் கேள்விப்பட்டிருப்போம்.

பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு
இந்தநிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக பலரது பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடி சூழலை பயன்படுத்தி ஆன்லைனில் பல்வேறு வழிமுறைகளில் பண மோசடி நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோவை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீஸார் பெண்கள், வங்கி வாடிக்கையாளர்கள் உட்பட பலருக்கு எச்சரிக்கை வழங்கி இருக்கிறது.

பணம் கேட்டு மோசடி
ஊரடங்கை பயன்படுத்தி ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக பணம் கேட்டு மோசடி நடக்கலாம், இதுபோல் உங்களுக்கு ஏதேனும் அழைப்பு வந்தால் இந்த அழைப்பை உடனே துண்டித்துவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெண்கள் தங்களது புகைப்படத்தை பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் வலைதளத்தில் பதிவிடுவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பல்வேறு வகையில் நடக்கும் மோசடி செயல்
ஏடிஎம் கார்ட் நம்பர், ஓடிபி எண் வங்கி கணக்கு எண், பான் எண் உள்ளிட்டவை கேட்டு இது தொடர்பாக யாரேனும் அழைப்பு விடுத்தால் தயவு செய்து துண்டித்துவிடவும். வங்கி அதிகாரிகள் உட்பட யாரும் இதை அழைப்பில் கேட்கமாட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதேபோல் வாட்ஸ்அப் மூலம் வர்த்தகர் என தங்களை அறிமுகம் செய்து உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறினால் அதை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

லிங்க்கை கிளிக் செய்து ஓபன் செய்ய வேண்டாம்
தங்களது செல்போனுக்கும் வரும் எந்த லிங்க்கையும் கிளிக் செய்து ஓபன் செய்ய வேண்டாம். இந்த லிங்க்கை கிளிக் செய்வது பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல் தங்களது குடும்பம் சார்ந்த பெண்கள் உட்பட குடும்பத்தார் புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டி பணம் கேட்டால் உடனடியாக சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் தெரிவிக்கவும்.

உடனே பிளாக் செய்யவும்
செல்போன் தொலைந்துவிட்டால் உடனே பிளாக் செய்யவும், ஆப் டவுன்லோட் செய்து அதில் உங்கள் கைரேகை பதிவு செய்வதில் கவனம் தேவை, வாட்ஸ்அப் மெசேஜ், பேஸ்புக் மெசேஜ் மூலம் தங்களை தொடர்பு கொண்டு தங்களுக்கு தெரிந்த நபர் கணக்கு போல் உருவாக்கி அவசரம் என பணம் கேட்பார்கள் அதில் கவனமாக இருக்க வேண்டும். ஏடிஎம் கார்ட் மூலம் பரிவர்த்தனை செய்யும் போது கவனம் தேவை.

தள்ளுபடி விலையில் பைக் உள்ளிட்ட சாதனங்கள்
பழைய கார், பைக் தள்ளுபடி விலையில் உள்ளது என கூறி முன்பணம் கேட்டால் செலுத்த வேண்டாம். நிலத்தில் மொபைல் டவர் அமைப்பதாக கூறி பணம் கேட்பார்கள், ஏடிஎமில் பணம் எடுக்கும்போது யாரேனும் உடனே நுழைந்து பின் நம்பர் கவனித்தால் கவனம் தேவை. அறிமுகம் இல்லாத நபர்களுடன் வீடியோ கால் செய்யும் போது ஸ்க்ரீன் ஷாட் எடுத்து மிரட்டல் விடுக்கலாம். அதேபோல் பயன்படுத்தாத பழைய வங்கி கணக்குகளை முடிக்க வைக்க வேண்டும் போன்ற பல்வேறு வகையில் கோவை சைபர் பிரிவு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
File Images


Click it and Unblock the Notifications