ஒரே ஒரு 'வைரஸ்' டோட்டல் பிஸினஸும் க்ளோஸ்! கொரோனாவால் அதிகரிக்கும் விலை!
கொரோனா வைரஸின் தாக்கத்தினால் உலகளவில் பொருளாதாரத்தில் பெரியளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வைரஸின் முக்கிய மையமான சீனாவில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவைத் தளமாக கொண்டு விநியோகிக்கப்படும் தொழில்நுட்ப மூலப்பொருட்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் போன்ற சாதனங்களின் விலையில் ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணத்தினால் விலை உயர்வு பெற்ற பொருட்களின் விபரங்களைப் பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் கேட்ஜெட் விலைகள் அதிகரிப்பு
சீனாவில் தொழிற்சாலைகள் மூடப்பட்டத்தினால் உற்பத்தியும், விநியோகச் சங்கிலியும் பேரழிவைச் சந்தித்துள்ளது. குறிப்பாக இது ஸ்மார்ட்போன்கள் மற்றும் கேட்ஜெட் உபகரணங்கள் போன்ற சில பொருட்களின் விலையில் அதிரடி அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக என்ன விலை மாற்றங்கள் மாறியுள்ளது என்று தெரிந்துகொள்ளுங்கள். ஆன்லைனில் கிடைக்கும் பொருட்களுக்கும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

விலை அதிகரித்த ஸ்மார்ட்போன்கள்
சியோமி நிறுவனம் அதன் பிரபலமான நோட் 8 ஸ்மார்ட்போனின் விலையை கொரோனா வைரஸ் தாக்கத்திற்குப் பின் அதிகரித்துள்ளது. சியோமி நோட் 8 இன் 8 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட்டின் விலை தற்பொழுது ரூ.500 உயர்த்தப்பட்டு, முன்பு வழங்கப்பட விலையான ரூ.9,999-ல் இருந்து புதிய விலையான ரூ.10,499 என்ற விலைக்கு இப்பொழுது விற்பனைக்குக் கிடைக்கிறது. இதே போல் சீனாவில் தயாராகி வெளிவரும் பல தொழில்நுட்ப பொருள்களுக்கும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

விலை உயர்விற்கான காரணம் என்ன?
சீனாவில் நீட்டிக்கப்படும் பணிநிறுத்தம் மற்றும் விநியோகச் சங்கிலியின் தாக்கம் தான் இந்த மாறுதலுக்கு முக்கிய காரணம் என்றும், இதனால் தான் தற்காலிகமாக உற்பத்தியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் சியோமி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

நுகர்வோர் சாதனங்கள்
நுகர்வோர் தயாரிப்பு சாதனங்களான ஏர் கண்டிஷனர்கள், குளிர்சாதனப் பெட்டிகள், மைக்ரோவேவ் மற்றும் வாஷிங் மெஷின் இயந்திரங்கள் ஆகியவை கொரோனா வைரஸ் காரணமாக 3-5 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. நுகர்வோர் சாதனங்கள் பெரும்பாலும் சீனாவிலிருந்தே அதிகம் இறக்குமதி செய்யப்படுகிறது.

45 சதவிகித இறக்குமதி சீனாவில் இருந்து தான்
இந்தியா சுமார் 45 சதவிகித நுகர்வோர் சாதனங்களை சீனாவிலிருந்து தான் இறக்குமதி செய்கிறது. சீனாவில் நிலவும் பணிநிறுத்தம் காரணமாக இவற்றின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தயாரியப்பு பொருட்களை இறக்குமதி செய்து வந்த சீனா தற்பொழுது கொரோனா வைரஸை உலகம் முழுதும் இறக்குமதி செய்து வருகிறது.

விலை அதிகரிக்கும் முகமூடிகள்
முதல் நிலை பாதுகாப்பை வழங்கும் முகமூடிகள் மற்றும் சானிடைசர்களுக்கான தேவை கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு பின் அதிகரித்துள்ளது. அதிகரித்துள்ள தேவையினால் இந்த பொருட்களின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நொய்டாவில், ரூ.10 க்கு விற்கப்படும் சாதாரண முகமூடிகள் இப்பொழுது 300 சதவீத அதிகரிப்புடன் ரூ.40 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், N-95 முகமூடிகள் ரூ.150 என்ற அசல் விலையிலிருந்து ரூ.500 வரை விற்கப்படுகின்றது.

சானிடைசருக்கு இவ்வளவு தட்டுபாடா?
சானிடைசர்களுக்கான தேவையும் தற்பொழுது அதிகரித்துள்ளது. முக்கியமாக அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகளில் இதன் தேவை அதிகரித்துள்ளது. சில மருந்தகங்களில் சானிடைசர்கள் கையிருப்பில் இல்லை என்று கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர். ஆன்லைன் பிளிப்கார்ட் தளத்தில், விற்பனையாளர்களில் ஒருவர் 30 மில்லி சானிடைசரை ரூ.999 என்ற விலைக்குப் பட்டியலிட்டுள்ளார். இதன் பொதுவான அசல் விலை ரூ.35 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களின் அச்சம்
அதிகரித்துள்ள விலை காரணமாக மக்கள் இந்த பொருட்களை வாங்கத் தயக்கம் காட்டிவருகின்றனர். முகமூடிகள் மற்றும் சானிடைசர்களை அதிக விலை கொடுத்து வாங்க மக்கள் தயாராக இருந்தாலும், தட்டுப்பாடு நிலவி வரும் காரணத்தினால் பல இடங்களில் இருப்பு இல்லை. அதேபோல் சீனாவிலிருந்து வரும் பொருட்களையும் வாங்க மக்கள் அச்சம் காட்டி வருகின்றனர். இதனால் ஒட்டுமொத்த பிஸினஸும் க்ளோஸ் ஆகும் நிலை உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications