புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்: வதந்திய கிளப்பிவிட்டு இப்போ 250 கோடி நஷ்டம்- முதலமைச்சரிடம் கோரிக்கை
சமூகவலைதளங்களில் வதந்தியை கிளப்பி விடுவதால் தற்போது 250 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், வதந்திகளை கிளப்பி விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளுக்கும் பரவும் கொரோனா
சீனாவைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவி கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து வருகிறது. சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா, இந்த வைரஸ் நாடு முழுவதிலும் பரவி பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது.

இறப்பு விகிதமும் படிப்படியாக குறைகிறது
சீனாவில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸால் பாதிப்படைந்து வருவதாக தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வைரஸ் பரவுவது குறைந்து கொண்டே வருவதாக தற்போது தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் இறப்பு விகிதமும் படிப்படியாக குறைந்து வருகிறது.

பலியானோரின் எண்ணிக்கை 2,744
இந்த நிலைியல் சீனாவில் நேற்று மேலும் 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகியுள்ளனர். இதையடுத்து சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 2,744 ஆக உயர்ந்திருப்பதாக தேசிய சுகாதார ஆணையம் கூறி உள்ளது.

78 ஆயிரத்து 500 பேர் வைரஸால் பாதிப்பு
ஒட்டு மொத்தமாக கிட்டத்தட்ட 78 ஆயிரத்து 500 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர். நேற்று புதிதாக 433 பேர் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சம் பல்வேறு நாடுகளிலும் பரவி கிடக்கிறது.

கோழிக் கறி மூலம் கொரோனா என வதந்தி
இந்த நிலையில் சமூகவலைதளங்களில் வழக்கம் போல் பல்வேறு வகையான வதந்திகளும் பரவி வருகிறது. கோழிக் கறி மூலம் கொரோனா பரவுகிறது எனவும் சாலையில் திரியும் நாய்கள் மூலம் கொரோனா பரவுகிறது என பல்வேறு வதந்திகள் பரவிக் கொண்டே இருக்கிறது.

நாமக்கல் வந்த முதலமைச்சரிடம் கோரிக்கை
இந்த நிலையில் நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கரின் தாயார் பழனியம்மாள் கடந்த வாரம் உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து கேபிபி பாஸ்கரின் குடும்பதாருக்கு ஆறுதல் தெரிவிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நாமக்கல் வந்து, அவர்களது குடும்பத்தாரை சந்தித்தார்.

தமிழக முட்டைக்கோழி பண்ணையாளர்கள்
அப்போது நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல தலைவர் டாக்டர் செல்வராஜ், தமிழக முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் இணைந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு ஒன்றை அளித்து தங்களது கோரிக்கையை முன்வைத்தனர்.

சுமார் 250 கோடி ரூபாய் நஷ்டம்
அதில் கோழிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக சமூகவலைதளங்களில் பரவிய வதந்தியால் இதுவரை சுமார் 250 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

சிக்கன் மேளா நடத்த திட்டம்
அதேபோல் இந்த நஷ்டத்தினை ஈடுகட்டும் வகையில் விரைவில் சிக்கன் மேளா ஒன்று நடத்த திட்டமிட்டுருப்பதாக தமிழக முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம் மற்றும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு சார்பாக தெரிவிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications