என் அப்பா தினக்கூலி.. கல்லூரி மாணவிக்கு ரூ.21 கோடி வருமான வரித்துறை நோட்டீஸ்.. ஆதார், PAN-ஆல் வந்த வினை!
உத்தரப் பிரதேச மாநிலத்தின் உன்னாவோ என்கிற பகுதியை சேர்ந்த ஒரு இளங்கலை மாணவிக்கு ரூ.20.98 கோடி மதிப்பிலான வருமானம் மற்றும் வணிக பரிவர்த்தனைகள் (Income and business transaction) தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் வருமான வரித்துறையில் (Income Tax Department) இருந்து சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
டெல்லியை சேர்ந்த ஒரு போலி நிறுவனம் தனது ஆதார் (Aadhaar) மற்றும் பான் (PAN) அட்டைகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக அந்த மாணவி கூறியதை அடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. ரஷ்மி சவிதா என்கிற மாணவி, சண்டிகரில் உள்ள வருமான வரித்துறை, வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 131(1A)-ன் கீழ் தனக்கு சம்மன் அனுப்பியதாகவும், மே 5 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு கேட்டு கொண்டதாகவும் அந்த மாணவி கூறினார்.

பின்னர், ஆர்.எஸ். எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் தனது ஆவணங்களை பயன்படுத்தி டெல்லியின் புராரி பகுதியில் செயல்பட்டு வந்ததை அவர் கண்டறிந்ததாகவும் கூறினார். சவிதாவின் கூற்றுப்படி, அந்த நிறுவனம் ஜனவரி 15, 2025 அன்று தனது செயல்பாடுகளை தொடங்கி, மே 9, 2025 அன்று மூடப்பட்டது. அந்த நிறுவனம் குறித்தோ அல்லது அதனுடன் தொடர்புடைய எந்தவொரு வணிகம் குறித்தோ தனக்கு எதுவும் தெரியாது என்றும் மாணவி கூறினார்.
சவிதாவின் தந்தை அஜய் சங்கர், ஒரு தினக்கூலி தொழிலாளி ஆவார். தாங்கள் எந்தவொரு நிறுவனத்தையும் அமைக்கவில்லை அல்லது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வணிகத்தை நடத்தவில்லை என்றும் அந்த குடும்பத்தினர் தெரிவித்தனர். யாரோ ஒருவர் தங்களது ஆவணங்களை பயன்படுத்தி மோசடியாக ஒரு நிறுவனத்தை உருவாக்கி, நிதிப் பரிவர்த்தனைகளை நடத்தியிருக்கலாம் என அவர்கள் சந்தேகிக்கின்றனர்.
சவிதா, தனது பதிலை வருமான வரித் துறைக்கு சமர்ப்பித்துள்ளதாக கூறினார். மேலும், தனது ஆதார் மற்றும் பான் அட்டைகள் தவறாக பயன்படுத்தப்பட்டதாக கூறி, பொதுக் குறைதீர்ப்பு இணையதளத்திலும் அவர் புகார் அளித்துள்ளார். கூடுதலாக, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தவும், இதற்கு பொறுப்பானவர்கள் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யவும் கோரி, அவர் காவல்துறைக்கு முறைப்படியான கோரிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
தனது அடையாள ஆவணங்கள், தனக்கு தெரியாமல் பயன்படுத்தப்பட்டு, ரூ.20.98 கோடி மதிப்புள்ள பரிவர்த்தனைகள் தொடர்பான ஒரு நிறுவனம் நடத்தப்பட்டதாக அவர் கூறும் குற்றச்சாட்டை மையமாக கொண்டே இந்த வழக்கு அமைந்துள்ளது. இதுபோன்ற மோசடிகளை தவிர்க்கவே, யுஐடிஏஐ ஆனது புதிய ஆதார் ஆப்பை அறிமுகம் செய்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
யுஐடிஏஐ கூற்றுப்படி, புதிய ஆதார் ஆப்பில் உள்ள மிகப்பெரிய அம்சங்களில் ஒன்று, க்யூஆர் கோட் அடிப்படையிலான ஆதார் பகிர்வு மற்றும் ஆஃப்லைன் அடையாள சரிபார்ப்புக்கான ஆதரவாகும். இது, 'தேர்ந்தெடுத்த பகிர்வு' (Selective Share) எனப்படும் ஒரு அம்சத்தின் மூலம், பயனர்கள் தங்கள் ஆதார் எண்ணை வெளிப்படுத்தாமல் தங்கள் அடையாளத்தை சரிபார்க்க அனுமதிக்கிறது.
இதன் மூலம், அவர்கள் தங்கள் புகைப்படம், பெயர், வயது, பாலினம், மொபைல் எண், முகவரி அல்லது ஆதார் ஸ்டேட்டஸ் உட்பட, தாங்கள் பகிர விரும்பும் தகவல்களை துல்லியமாக தேர்ந்தெடுக்க முடியும். அடையாள சரிபார்ப்புக்காக அங்கீகரிக்கப்பட்ட முனையங்களில் ஸ்கேன் செய்யக்கூடிய ஒரு க்யூஆர் கோட்-ஐயும் இந்த ஆப் உருவாக்குகிறது.
ஏற்கனவே, ஏறக்குறைய 4 மில்லியன் மக்கள் இந்த ஆப்பை பயன்படுத்தி தங்கள் மொபைல் நம்பர்களை புதுப்பித்து (Mobile Number Update) உள்ளனர், மேலும் சுமார் 850,000 பேர் தங்கள் முகவரியை புதுப்பிக்க (Address Update) இந்த ஆப்பை பயன்படுத்தி உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications