எல்லாமே மாறுது.. Jio முதல் BSNL வரை.. எல்லா மொபைல் நம்பர்களுக்கும் புது CNAP செயல்முறை.. 2026 இல் அமல்!
2026 ஆம் ஆண்டில் அமலுக்கு வரவுள்ள மிகவும் முக்கியமான மாற்றங்களில் ஒன்று - சிஎன்ஏபி செயல்முறை. இந்த செயல்முறையை - தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ஆன ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா மட்டுமின்றி, அரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனமும் கூட பின்பற்றவுள்ளது.
சிஎன்ஏபி (CNAP) என்றால் என்ன? சிஎன்ஏபி என்றால் காலர் நேம் பிரசன்டேஷன் (Caller Name Presentation) என்பதின் சுருக்கம் ஆகும். இது - நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஸ்பேம் கால்கள், ஃபிஷிங் கால்கள் மற்றும் ஆள்மாறாட்ட அழைப்புகள் போன்ற நிகழ்வுகளால் ஏற்படும் பாதிப்புகளை நிவர்த்தி செய்யப்போகும் ஒரு செயல்முறை ஆகும்.

பெயர் குறிப்பிடுவது போலவே சிஎன்ஏபி என்பது - உங்களுக்கு தெரியாத மொபைல் நம்பரில் இருந்து ஒரு அழைப்பு வரும் போது, அந்த அழைப்பாளரின் சரிபார்க்கப்பட்ட பெயரையும் (Verified name), அவருடைய மொபைல் நம்பரையும் உங்களுக்கு காண்பிக்கும் ஒரு நெட்வொர்க்-நிலை அம்சம் (Network-level feature) ஆகும்.
2026 இல் முழுமையாக அமல்: கடந்த அக்டோபர் 2025 இல், டிராய் (TRAI) என்கிற இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் (Telecom Regulatory Authority of India) அங்கீகரிக்கப்பட்ட சிஎன்ஏபி இப்போது படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் (ஜியோ முதல் பிஎஸ்என்எல்) சிஎன்ஏபி அம்சத்தை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இது 2026 மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் பெரும்பாலான பயனர்களை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிஎன்ஏபி ஏன் முக்கியம்? நவீனகால மோசடி அழைப்புகள் (ஸ்பேம் கால்ஸ்) ஆனது வெறுமனே மார்க்கெட்டிங் சம்பந்தப்பட்ட அழைப்புகளாக மட்டுமே இருப்பதில்லை. மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் வங்கி அதிகாரிகள், டெலிவரி முகவர்கள் அல்லது அரசாங்க பிரதிநிதிகள் போல் காட்டிக்கொள்கிறார்கள், தனிப்பட்ட தகவல்களை பகிரும்படி சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள்.
சிஎன்ஏபி அம்சம் ஆனது தொலைத்தொடர்பு ஆபரேட்டரிடம் பதிவுசெய்யப்பட்ட அதிகாரப்பூர்வ பெயரை பயனர்கள் பார்ப்பதை உறுதி செய்கிறது. இது ட்ரூகாலர் (Truecaller) போன்ற காலர் ஐடி ஆப்களால உருவாக்கப்படும் "குத்து மதிப்பான" காலர் ஐடிகளை விட மிகவும் நம்பகமானதாக இருக்கும். இது பயனர்கள் அழைப்பாளரின் அடையாளத்தை உடனடியாகச் சரிபார்த்து பதிலளிக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்க உதவும்.
சிஎன்ஏபி எவ்வாறு செயல்படுகிறது? ஆப் அடிப்படையிலான சொல்யூஷன்களை போல் இல்லாமல் சிஎன்ஏபி ஆனது நேரடியாக நெட்வொர்க் மட்டத்தில் செயல்படுகிறது. ஒரு அழைப்பு செய்யப்படும்போது, பெறுநரின் தொலைத்தொடர்பு வழங்குநர் அழைப்பாளரின் சிம் பதிவுடன் இணைக்கப்பட்ட பாதுகாப்பான தரவுத்தளத்தை சரிபார்க்கிறார்.
சரிபார்க்கப்பட்ட பெயர் பெறுநரின் ஸ்க்ரீனில் நிகழ்நேரத்தில் காட்டப்படும். இந்த தகவல் - அதிகாரப்பூர்வ தொலைத்தொடர்பு பதிவுகளிலிருந்து வருவதால், மோசடி செய்பவர்களால் இதை கையாளுவதோ, மாற்றுவதோ அல்லது பொய்யாக்குவதோ மிகவும் கடினம், இது மூன்றாம் தரப்பு ஆப்களை விட அதிக துல்லியத்தை வழங்குகிறது.
சிஎன்ஏபி அறிமுகம் தொடர்பான விஷயத்தில் எந்தெந்த டெலிகாம் ஆபரேட்டர்கள் என்னென்ன நிலையில் உள்ளன? ரிலையன்ஸ் ஜியோ - இப்போது மேற்கு வங்கம், கேரளா, பீகார், உ.பி. கிழக்கு, ராஜஸ்தான், பஞ்சாப், அசாம், உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவில் இதை அறிமுகம் செய்துள்ளது
ஏர்டெல் - மேற்கு வங்கம், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீரில் அறிமுகம் செய்துள்ளது. வோடபோன் ஐடியா (வி): மகாராஷ்டிராவில் முழுமையாக அறிமுகம் செய்துள்ளது; தமிழ்நாட்டில் ஓரளவு கிடைக்கிறது. பிஎஸ்என்எல் - தற்போது மேற்கு வங்கத்தில் சிஎன்ஏபி அம்சத்தை சோதனை செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications








