தயாரா?- தீவிர வெப்பம், வறட்சி, சூறாவளியை சந்திக்கப்போகும் இந்தியா- ஐபிசிசி அறிக்கை சொல்லும் உண்மை?
காலநிலை மாற்றம் குறித்து ஐக்கிய நாடுகளின் அரசுகளுக்கிடையிலான குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் அடங்கும் 195 உறுப்பினர்களில் இந்தியாவும் ஒன்று. இந்த குழுவின் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதிக வெப்ப அலைகள், வறட்சிகள், சூறாவளி
ஐபிசிசி காலநிலை மாற்றம் குறித்து அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை காணலாம். உலகம் வேகமாக வெப்பமடைகிறது. உலகளாவிய வெப்பம் 2030 ஆம் ஆண்டில் 1.5 டிகிரி செல்சியஸை எட்டும் பாதையில் உள்ளது. இது 2018-ல் திட்டமிடப்பட்டதைவிட ஒரு தசாப்தம் முன்னதாக இருக்கிறது. அதேபோல் கடல் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நிலப்பகுதிகளில் வெப்ப உச்சநிலை
1950-களில் இருந்து பெரும்பாலான நிலப்பகுதிகளில் வெப்ப உச்சநிலைகள் தொடர்ந்து தீவிமடைந்து வருகின்றன. மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றம் என்பது இந்த மாற்றங்களில் முக்கிய உந்துதலாகக் காணப்படுகிறது. புவி வெப்பமடைதலின் ஹாட்ஸ்பாட்களாக நகரங்கள் இருக்கின்றன. 10 வருடங்களுக்கு ஒருமுறை மற்றும் 50 வருடங்களுக்கு ஒருமுறை கடுமையான வெப்பம், கனமழை மற்றும் வறட்சி போன்ற நிகழ்வுகள் தீவிரமடைகிறது.

ஈரப்பதமான வெப்ப அழுத்தம் மிகவும் தீவிரமாகும்
ஐபிசிசி காலநிலை மாற்றத்தில் இந்தியா குறித்து வெளியான தகவல்களை பார்க்கலாம். இந்தியாவில் 21 ஆம் நூற்றாண்டில் வெப்ப அலைகள் மற்றும் ஈரப்பதமான வெப்ப அழுத்தம் மிகவும் தீவிரமாகும் எனவும் இது அடிக்கடி நிகழும் எனவும் அறிக்கை தெரிவிக்கிறது. பருவமழையில் மாற்றங்கள் ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் வருடாந்திர மற்றும் கோடை பருவ மழைப்பொழிவு அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மழை நிகழ்வுகளை பாதித்துள்ளது என அறிக்கை
குளிரின் தீவிரம் குறையும்போது வெப்பத்தின் தீவிரம் அதிகரித்துள்ளது, மேலும் இந்த சூழ்நிலைகள் வரும் தசாப்தங்களில் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை செயல்பாடு காரணமாக ஏரோசோல்கள் மற்றும் துகள்களின் இருப்பு இந்திய துணைக் கண்டத்தில் மழை நிகழ்வுகளை பாதித்துள்ளது என அறிக்கை கூறுகிறது.

வெப்பமடைதல் என்பது மனித நடவடிக்கைகளால் ஏற்படுகிறது
20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பருவ மழை வீழ்ச்சியின் முக்கிய காரணம் மனித செயல்பாடுகளால் அதிகரிக்கப்பட்ட ஏரோசோல்கள் மற்றும் துகள்களின் அதிகரிப்பே ஆகும் என அறிக்கை தெரிவிக்கிறது. புவி வெப்பமடைதல் என்பது மனித நடவடிக்கைகளால் ஏற்படுகிறது என்பது சந்தேகத்திற்கு இடமில்லாத ஆதாரம் எனவும் அறிக்கை குறிப்பிடுகிறது.

வெப்ப அலைகளின் அதிகரிப்பு
இந்தியாவைப் பொறுத்தவரை வெப்ப அலைகளின் அதிகரிப்பு என்பது ஏரோசல் உமிழ்வு உட்பட பிற உமிழ்வுகளின் காரணமாகவே நடக்கிறது என குறிக்கப்படுகிறது. இதுகுறித்து புனேவைச் சேர்ந்த இந்திய வெப்பமண்டல வானிலை நிறுவனத்தின் டாக்டர் ஸ்வப்னா பணிக்கல் அறிக்கையில் இந்தியா நீர் சுழற்சி தீவிரத்தை அனுபவித்து வருவதாக தெரிவித்தார். இது பருவமழை அதிகரிப்பை பாதிக்கும் என குறிப்பிட்டார்.

அதிக வேகத்தில் வெப்பமடையும் இந்தியப் பெருங்கடல்
இந்தியப் பெருங்கடலின் கடல் வெப்பநிலை மற்ற பகுதிகளைவிட அதிக வேகத்தில் வெப்பமடைகிறது எனவே இது மற்ற பகுதிகளை பாதிக்கலாம். கடந்த சில தசாப்தங்களாகவே ஏரோசல்கள் அதிகரிப்பால் தென்மேற்கு பருவமழை குறைந்துவிட்டது என அவர் குறிப்பிட்டார். இந்தியப் பெருங்கடலில் உலகளாவிய சராசரி கடல் மட்டம் ஆண்டுதோறும் 3.7 மிமீ உயர்ந்து வருகிறது. இதுபோன்ற தீவிர கடல் மட்ட நிகழ்வுகள் முன்னதாக 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்ந்தது, தற்போது கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் நிகழ்கிறது என அவர் குறிப்பிட்டார்.

மாற்றத்தின் விளைவுகளை சந்திக்கநேரிடும்
வரவிருக்கும் தசாப்தங்களின் அனைத்து பகுதிகளும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை சந்திக்கநேரிடும் என அறிக்கை தெரிவிக்கிறது. கடல்மட்ட உயர்வு என்பதன் விளைவாக கடலோர அரிப்பு மற்றும் தாழ்வான பகுதிகளில் அடிக்கடி கடுமையான வெள்ளம் ஏற்படும். இந்தியா மிகவும் பருவநிலை பாதிக்கக்கூடிய நாடுகளில் ஒன்றாக இருப்பதால், புவியியல் ரீதியாக தொலைதூர காலநிலை மாற்றங்கள் கூட நமது பருவமழை உள்ளிட்ட நிகழ்வுகளில் தீவிரநிலையை ஏற்படுத்தும் என டாக்டர் அருணபா கோஷ் குறிப்பிட்டுள்ளார்.
File Images
Source: indianexpress.com


Click it and Unblock the Notifications