ரூ.12,000 க்குள் வாங்க கிடைக்கும் சீன போன்கள் மீது தடை? இந்திய அரசு அதிரடி!
தகவல் திருட்டு வேலைகளில் ஈடுபட்டதாக கூறி பல எண்ணிக்கையிலான சீன ஆப்களை தடை செய்ததை தொடர்ந்து, இந்திய அரசாங்கம் சீன ஸ்மார்ட்போன்கள் மீது குறி வைப்பது போல் தெரிகிறது.
குறிப்பாக பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் மீது, இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரூ.12,000 க்குள் என்கிற விலைப்பிரிவின் கீழ் வாங்க கிடைக்கும் சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் மீது!

என்ன காரணம்? சீன ஸ்மார்ட்போன்களும் கூட தகவல்களை திருடுகிறதா?
இல்லை! இந்திய அரசாங்கம் ஆனது ரூ.12,000 க்குள் வாங்க கிடைக்கும் சீன ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் தடை செய்யும் பட்சத்தில், அதற்கு முக்கிய காரணம் தகவல் திருட்டாக இருக்காது. அதற்கு காரணம் இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்காகவே இருக்கும்!

சீன கம்பெனிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த திட்டமிடும் இந்தியா!
மைக்ரோமேக்ஸ், லாவா, கார்பன் மற்றும் பிற உள்நாட்டு பிராண்டுகளுக்கு "ஊக்கம் அளிக்கும்" நோக்கத்தின் கீழ், குறைந்த விலை நிர்ணயம் கொண்ட சீன ஸ்மார்ட்போன்களை (ரூ.12,000 க்கும் குறைவான விலை கொண்ட சீன ஸ்மார்ட்போன்களை) நாட்டில் விற்பனை செய்வதை தடை விதிக்க, இந்திய அரசு திட்டமிட்டு வருவது போல் தெரிகிறது.
இதன் வழியாக இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை "ஆட்சி செய்யும்" சீனாவை தளமாக கொண்ட ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் "கட்டுக்குள் வரும்" என்று இந்திய அரசாங்கம் நம்புவது போலும் தெரிகிறது.

இனிமேல் சீனா.. தானாக கீழே இறங்கும்!
கடந்த திங்களன்று வெளிவந்த ஆதாரங்களை மேற்கோள்காட்டி ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின்படி, "இந்திய அரசாங்கம் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் பட்ஜெட் (ரூ.12,000 க்கும் குறைவான விலை நிர்ணயம் கொண்ட) ஸ்மார்ட்போன்களை நாட்டில் விற்பதை தடுக்க முயல்கிறது!"
இந்த நடவடிக்கை, உலகின் இரண்டாவது பெரிய மொபைல் சந்தையில் (இந்தியா) இருந்து சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களை கீழே தள்ளக்கூடும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

Xiaomi, Realme -க்கு விழப்போகும் பெரிய அடி!
(நாம் மேற்கண்டது போல) இந்திய அரசாங்கத்தின் "தடை" நோக்கங்கள் உண்மையாக இருந்தால், ரூ.12,000 க்குள் என்கிற விலை பிரிவின் கீழ், 50 சதவீத சந்தைப் பங்கை கொண்டுள்ள Xiaomi மற்றும் Realme போன்ற நிறுவனங்களுக்கு "பெரிய அடி" விழலாம் மற்றும் கடும் சிக்கல்கள் ஏற்படலாம் என்றும் கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே வரி ஏய்ப்பில் சிக்கிய OPPO, Vivo மற்றும் Xiaomi!
சீன மொபைல் போன் உற்பத்தியாளர்களுக்கு எதிராக, இந்திய அரசாங்கம் ஏற்கனவே கடுமையான நிலைப்பாட்டை கையில் எடுத்துள்ளது. OPPO, Vivo மற்றும் Xiaomi போன்ற சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் நடந்த சமீபத்திய சோதனைகளே அதற்கு சாட்சி!
நினைவூட்டும் வண்ணம் ஒப்போ, விவோ இந்தியா மற்றும் சியோமி ஆகிய மூன்று சீன மொபைல் நிறுவனங்களும் வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படும் வழக்குகளை இந்திய அரசு விசாரித்து வருகிறது.

"எல்லோருக்கும்" நோட்டீஸ்!
வரி ஏய்ப்பு செய்ததற்காக, ஒப்போ இந்தியா, சியோமி இந்தியா மற்றும் விவோ இந்தியா ஆகிய நிறுவனங்களுக்கு, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வாரம் ராஜ்ய சபாவில் தெரிவித்தார்.

சியோமி மீது ஐந்து வழக்குகள்!
டிஆர்ஐ நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஒப்போ மொபைல்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.4,403.88 கோடிகளை கோரும் ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சியோமி டெக்னாலஜி இந்தியா மீது ஐந்து சுங்க வரி ஏய்ப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதே போல விவோ மொபைல் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆனது சுமார் ரூ. 2,217 கோடி சுங்க வரி ஏய்ப்பு செய்ததையும் டிஆர்ஐ கண்டறிந்தது. சுங்கச் சட்டத்தின் விதிகளின் கீழ், விவோ இந்தியா நிறுவனத்திற்கு ரூ.2,217 கோடி சுங்க வரி விதிக்கக் கோரி ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்திய அரசின் இந்த நடவடிக்கைகள் வேலைக்கு ஆகுமா?
மைக்ரோமேக்ஸ், லாவா, கார்பன் போன்ற உள்நாட்டு மொபைல் பிராண்டுகளிடம் இருந்து வரும் ஸ்மார்ட்போன்கள் பெரிதும் விற்பனை ஆகாததற்கு, மக்களின் கவனத்தை ஈர்க்காததற்கு அதன் விலை நிர்ணயமும், அம்சங்களும் தான் முக்கிய காரணங்கள்!
இப்போதெல்லாம், பெரும்பாலான மக்கள் விலையை மட்டுமே கவனத்தில் கொண்டு ஒரு ஸ்மார்ட்போனை வாங்குவது இல்லை. அது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? குறிப்பாக எந்த சிப்செட் உடன் வருகிறது? அதன் பெர்ஃபார்மென்ஸ் எப்படி இருக்கும் என்றெல்லாம் கூட சரிபார்க்கிறார்கள்!

ஒப்பிடும் போது.. அதற்கு.. இதுவே மேல்!
ஒரு சமோசா வாங்கினால் கூட, எந்த கடையில் சுவை அதிகமாக, அதே சமயம் விலை குறைவாகவும் இருக்கும் என்று தேடித்தேடி வாங்கி சாப்பிடும் இந்தியர்கள் சீன ஸ்மார்ட்போன்களையும், இந்திய ஸ்மார்ட்போன்களை ஒப்பிட்டு பார்ப்பதில் எந்த தவறும் இல்லை!
அதனால் தான் முன்னரே குறிப்பிட்டபடி, ரூ.12,000 க்கள் என்கிற ஸ்மார்ட்போன் பிரிவில் 50 சதவீத பங்குகளுடன் Realme மற்றும் Xiaomi ஆதிக்கம் செலுத்துகின்றன. டெக்னோ, இன்பினிக்ஸ் மற்றும் ஐடெல் போன்ற பிராண்டுகளும் கூட பட்ஜெட் விலை பிரிவில் வலிமையான இடங்களில் உள்ளன. இந்திய பிராண்டுகள் மோசமான நிலையில் உள்ளன!
Photo Courtesy: Xiaomi, Realme


Click it and Unblock the Notifications