எச்சரிக்கை! எஸ்பிஐ பயனர்களை குறிவைக்கும் சீன ஹேக்கர்கள்: மோசடியில் சிக்காமல் இருக்க உடனே இதை செய்யவும்!
சீன ஹேக்கர்கள் எஸ்பிஐ பயனர்களை குறிவைத்து மோசடி வேலையில் ஈடுபடுகின்றனர். கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும் என மெசேஜ் அனுப்பி அதில் ஒரு மர்மமான வெப்சைட் லிங்கையும் அனுப்புகின்றனர், இந்த மர்ம வெப்சைட் லிங்க் அதிகாரப்பூர்வ வங்கி லிங்க் போன்றே உள்ளது என கூறப்படுகிறது. ஃபிஷிங் மோசடி மூலம் ஹேக்கர்கள் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பயனர்களை குறிவைக்கின்றனர்.

கேஒய்சி அப்டேட் செய்யும்படி மெசேஜ்
கேஒய்சி அப்டேட் செய்யும்படி வங்கி மெசேஜ் போன்று ஒரு லிங்கை அனுப்புகின்றனர். இதில் சந்தேகத்திற்கு இடமான லிங்க் ஒன்றை அதிகாரப்பூர்வ வங்கி வெப்சைட் போன்றே வடிவமைத்து அனுப்புகின்றனர். மேலும் பயனர்களுக்கு இதுபோன்று வாட்ஸ்அப் செய்தி அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது.

ரூ.50 லட்சம் மதிப்புள்ள பரிசுகள்
அதேபோல் வெளியான தகவலின்படி வாட்ஸ் அப்-ல் எஸ்பிஐ வங்கி ரூ.50 லட்சம் மதிப்புள்ள பரிசுகளை வழங்குவதாக போலி மெசேஜ்கள் பரவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த அனைத்து தகவல்களும் மோசடி செயல்கள் என்பதால் இதை நம்ப வேண்டாம் என இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். இந்தியாவில் இணைய பயனர்களில் கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர் கடந்த 1 ஆண்டில் மட்டும் ஹேக்கிங்கிற்கு பலியாகி இருக்கின்றனர் என தகவல்கள் தெரிவிக்கிறது.

டொமைன் பெயர்கள் பதிவு செய்த நாடு சீனா
டெல்லியை தளமாகக் கொண்ட சைபர்பீஸ் அறக்கட்டளை மற்றும் ஆட்டோபோட் இன்ஃபோசெக் பிரைவேட் லிமிடெட் ஆகியவை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் பரவிய மெசேஜ்கள் குறித்து ஆய்வு செய்தனர். இதை ஆய்வு செய்ததில் டொமைன் பெயர்கள் பதிவு செய்த நாடு சீனாவாக இருக்கிறது.

அதிகாரப்பூர்வ வலைதளம் போன்ற போலி வலைதளம்
கேஒய்சி சரிபார்ப்பு என்ற பெயரில் ஹேக்கர்கள் குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். அதில் ஒரு லிங்க் வழங்கப்படுகிறது. இந்த லிங்க்கை கிளிக் செய்யும் போது ஓபன் செய்யப்படும் தளம் அதிகாரப்பூர்வ ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வலைதளம் போன்றே இருப்பதாக கூறப்படுகிறது. உள்நுழைவதற்கு தொடரவும் என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் kyc.php பக்கத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

கிளிக் செய்யவோ பூர்த்தி செய்யவோ வேண்டாம்
அதன்பின் நெட்பேங்கில் உள்நுழைய பயனர் பெயர், கடவுச்சொல், கேப்ட்சா உள்ள ரகசிய தகவலை பதிவிட இந்த பக்கம் கேட்கப்படுவதாக கூறப்படுகிறது. இது எதையும் கிளிக் செய்யவோ பூர்த்தி செய்யவோ வேண்டாம் என எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.

மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி எண்
இதன்பிறகு பயனரிடன் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி எண் கேட்கப்படுகிறது. இதை உள்ளிட்டவுடன் பயனரை மற்றொரு பக்கத்திற்கு எடுத்துச் செல்கிறது. அதன்பின் மீண்டும் பயனர் பெயர், மொபைல் எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிடும்படி கேட்கிறது. தரவு உள்ளிட்டப்பிறகு பயனரின் ஓடிபி பக்கத்திற்கு திருப்பி விடுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கவரச்சிகரமான இலவச பரிசுகள்
இதேபோல் கவரச்சிகரமான இலவச பரிசுகள் மற்றும் பலவற்றை வழங்குவதாக கூறி ஏமாற்றி வருகின்றனர். இந்த தகவல் வாட்ஸ்அப் உள்ளிட்ட தளங்களில் பரவி வருகிறது. இதுபோன்ற தகவல்களை நம்பவும் வேண்டாம் பகிரவும் வேண்டாம். இந்த லிங்க்கை கிளிக் செய்யும் போது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் கவர்ச்சிகரமான புகைப்படத்துடன் வாழ்த்து செய்தி வருகிறது. ரூ.50 லட்சம் பரிசு தொகை கணக்கில் வரவு வைக்கப்படும் என கூறி தகவல்களை திருட முயல்கின்றனர். இதுபோன்ற தகவல்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.


Click it and Unblock the Notifications