நாசாவுக்கே டஃப் கொடுத்த சீனா: சந்திர மண்ணிலிருந்து ஆக்சிஜன்/எரிபொருள் எடுக்கலாம்.. சீனா சொன்ன பலே ஐடியா..
மனிதர்களை நிலவில் வாழ வைப்பதற்கான சாத்தியக் கூறுகளை நாசா போன்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் பல காலமாக ஆராய்ச்சி செய்து திட்டமிட்டு வருகின்றன. இந்த முயற்சியில், உலக நாடுகளின் பல முன்னணி நாடுகளின் தனிப்பட்ட திட்டங்களும், முயற்சிகளும் வெகு வேகமாக மேம்பட்டு வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. சந்திரனில், மனிதர்களுக்கான முதல் காலனியை உருவாக்கும் திட்டத்தில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கிறது. அதிலும் குறிப்பாக, நிலவில் மனிதர்கள் நீண்ட நாள் உயிர் வாழத் தேவையான வளங்களைக் கண்டறிய நாசா போராடி வந்தது.

நிலவில் 800 கோடி மக்கள் வாழத்தேவையான ஆக்சிஜன் இருக்கிறதா?
இந்த பிரச்சினைக்கான ஒரு தீர்வை கடந்த ஆண்டு நவம்பர் மாதம், நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததாகத் தெரிகிறது. சந்திரனின் பாறை அடுக்கு ரெகோலித் என்று அழைக்கப்படுகிறது. இது மனித உயிர்களைத் தக்கவைக்க போதுமான ஆக்ஸிஜனைக் கொண்டுள்ளது என்று விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன்படி, சந்திரனின் மேற்பரப்பில் 8 பில்லியன் அல்லது 800 கோடி மக்களை சுமார் 1,00,000 ஆண்டுகளுக்கு உயிருடன் வைத்திருக்க போதுமான ஆக்ஸிஜன் உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

நிலவில் நீர் இருப்பது உறுதி.. இப்போது ஆக்சிஜன் இருப்பதும் உறுதி..
நமக்கு முன்பே தெரிந்தது போல், நிலவில் நீர் இருப்பது சில காலங்களுக்கு முன் உறுதியானது. அதேபோல், இப்போது நிலவில் ஆக்சிஜன் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. ஆனால், இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது, நிலவின் மேற்பரப்பில் உள்ள ஆக்சிஜன் மற்றும் நிலவினுள் இருக்கும் நீர்களைப் பிரித்தெடுக்க நமக்கு ஏகப்பட்ட ஆற்றல் தேவைப்படுகிறது. இதை நாம் பூமியில் இருந்து எடுத்துச் செல்லலாம், ஆனால், அதற்கான விண்வெளி பயனச் செலவு, ராக்கெட் வேகத்தில் எகிறிவிடும். இதனால், பல விஞ்ஞானிகள் நிலவில் உள்ள வளங்களைப் பிரித்தெடுக்கப் பல யோசனைகளைச் சமர்ப்பித்து வருகின்றன.

சந்திர மண்ணிலிருந்து ஆக்சிஜன் மற்றும் எரிபொருள் எடுக்கலாமா?
உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் நிலவில் நிலையான மனித இருப்பை பராமரிக்க வழிகளைக் கண்டறியும் போது, சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சந்திர மண்ணிலிருந்து நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை பிரித்தெடுக்கும் ஒரு புத்திசாலித் தனமான வழியைக் கண்டுபிடித்துள்ளனர். இதில் உள்ள சிறப்பே, நிலவில் மனிதனுக்குத் தேவையான ஆக்சிஜனை பிரித்தெடுக்கும் போது, நிலவில் இருந்து நமக்குத் தேவையான எரிபொருளையும் உருவாக்க முடியும் என்று ஒரு பலே ஐடியாவை இப்போது முன்வைத்துள்ளனர்.

எப்படி நிலவில் இருந்து எரிபொருள் எடுக்க முடியும்? இது சாத்தியமா?
நிலவு மண்ணில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடை, நாம் ஆக்ஸிஜன் மற்றும் எரிபொருளாக மாற்றக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாகச் சீனா ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த கலவைகள், நிலவில் மனிதர்கள் வாழத்தேவையான சாத்தியங்களைப் பன்மடங்கு அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளனர். இந்த கண்டுபிடிப்புகள் மூலம், நிலவின் மேற்பரப்பில் உள்ள மண்ணிலிருந்து ஹைட்ரஜன் மற்றும் மீத்தேனை உருவாக்கிப் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இது சந்திரனில் உபகரணங்கள் மற்றும் வசிப்பிடத்தை உருவாக்கும். இவை நமது அருகிலுள்ள வான அண்டை நாடுகளில் சுவாசிக்கக்கூடிய சூழலுக்கும் வழிவகுக்கும்.

செவ்வாய் கிரகத்திற்கான நுழைவாயிலா நம்முடைய நிலவு?
ஏற்கனவே சந்திரனை ஆராய்வதில் ஒரு புதுப்பிக்கப்பட்ட ஆர்வம் உள்ளது. அதன்படி, வரும் ஆண்டுகளில் சந்திர மேற்பரப்பில் பல விண்வெளி பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. உண்மையில், நாசா அதன் ஆர்ட்டெமிஸ் பணியின் கீழ் மீண்டும் சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப முயல்கிறது. செவ்வாய் கிரகம் உள்ளிட்ட விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்குச் சந்திரனை ஒரு நுழைவாயிலாகப் பயன்படுத்த அமெரிக்க விண்வெளி நிறுவனம் இலக்கு வைத்துள்ளது என்பதே உண்மை. சீனாவும் அத்தகைய லட்சியங்களைக் கொண்டுள்ளது.

வேற்று கிரக ஒளிச்சேர்க்கை உத்தியை முன்வைத்த சீனா
ஜூல் என்ற சமீபத்திய இதழில் வெளியிடப்பட்ட சீனாவின் ஆய்வறிக்கையில், சந்திர மண் மற்றும் சூரிய கதிர்வீச்சைப் பயன்படுத்தி ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடை உருவாக்கும் அமைப்பை வடிவமைக்கச் சீன ஆராய்ச்சியாளர்கள் முன்மொழிந்துள்ளனர். அவர்கள் அதை "வேற்று கிரக ஒளிச்சேர்க்கை" உத்தி என்று அழைத்தனர். இது ஆங்கிலத்தில் 'எக்ஸ்ட்ராடெரெஸ்ட்ரியல் போடோஸிந்தசிஸ் ' (extraterrestrial photosynthesis) என்று அழைக்கப்படுகிறது. இந்த எக்ஸ்ட்ராடெரெஸ்ட்ரியல் போடோஸிந்தசிஸ் முறை, எப்படி ஆக்சிஜனையும், எரிபொருளையும் பிரித்தெடுக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

சந்திர மண்ணில் இரும்புச்சத்து மற்றும் டைட்டானியம்
நான்ஜிங் பல்கலைக்கழகத்தின் பொருள் விஞ்ஞானிகள் யிங்ஃபாங் யாவ் (Yingfang Yao) மற்றும் ஜிங்கங் ஷோவ் (Zhigang Zou) ஆகியோர் சீனாவின் Chang'e 5 விண்கலத்தால் மீண்டும் கொண்டு வரப்பட்ட சந்திர மண்ணை ஆய்வு செய்த பின்னர் இந்த முடிவுக்கு வந்தனர். சந்திர மண்ணின் மாதிரியில் இரும்புச்சத்து மற்றும் டைட்டானியம் நிறைந்த பொருட்கள் உள்ளிட்ட கலவைகள் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். அவை ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடை உருவாக்க ஒரு ஊக்கியாகச் செயல்படும்.

சீனா வெறும் சூரிய ஒளியை மட்டும் பயன்படுத்தப்போகிறதா?
ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு தவிர, முன்மொழியப்பட்ட அமைப்பு எரிபொருளாகப் பயன்படுத்தக்கூடிய மீத்தேன் போன்ற ஹைட்ரோகார்பன்களையும் வழங்கும் என்று கூறியுள்ளனர். இந்த மூலோபாயம் சூரிய ஒளியை மட்டுமே பயன்படுத்தி உருவாக்கப்படும் என்று கூறியுள்ளனர். சூரிய ஒளி தவிர, எந்தவொரு வெளிப்புற ஆற்றலையும் இந்த முறை பயன்படுத்தப் போவதில்லை என்பதே இதன் முக்கிய சிறப்பு என்று சீனா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் இந்த யோசனை ஏன் சிறப்பானது தெரியுமா?
நிலவில் நிலையான மனித இருப்பை பராமரிக்கப் பல வழிகள் முன்னர் முன்மொழியப்பட்டுள்ளது. ஆனால், அவை அனைத்திற்கும் பூமியில் இருந்து ஆற்றல் ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. இந்த மூலோபாயம் வேற்று கிரக உயிர்வாழ்வதற்கான செலவைப் பெருமளவு அதிகரிக்கிறது. இதனால், இதுவரை கூறப்பட்ட பல யோசனைகள் அங்கீகரிக்கப்படாமல் இருந்தது, இருப்பினும் சீனாவின் இந்த யோசனை அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கிடையில், சீனாவின் எதிர்கால குழு சந்திர பயணத்தின் போது இந்த அமைப்பைச் சோதிக்க முயல்வதாகவும் சீன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications