2017-18 வரை இந்தியா மீது பல சைபர் தாக்குதல் நடத்திய சீனா: அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியிட்ட அமெரிக்கா!
இந்திய செயற்கைகோள் மீது சீனா தாக்குதல் நடத்தியதாகவும் 2007 முதல் 2018 வரையிலான காலக்கட்டத்தில் பல சைபர் தாக்குதல்கள் சீனா இந்தியா மீது நடத்தியதாகவும் அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.

சீனா தாக்குதல்
இந்திய செயற்கைக்கோள் தகவல்தொடர்பில் சீனா தாக்குதல் நடத்தி உள்ளதாக, அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.

சீன ஏரோஸ்பேஸ் ஸ்டடிஸ் இன்ஸ்டிடியூட்
அமெரிக்காவை மையமாக கொண்டு சீன ஏரோஸ்பேஸ் ஸ்டடிஸ் இன்ஸ்டிடியூட் என்ற ஆய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆய்வு நிறுவனம், 2007ம் ஆண்டு முதல் சீனா மேற்கொண்ட சைபர் தாக்குதல்கள் தொடர்பாக 142 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சீனா பல சைபர் தாக்குதல்கள்
அந்த அறிக்கையில், கடந்த 2007 முதல் 2018 வரை சீனா பல சைபர் தாக்குதல்களை நடத்தி இருப்பதாக கூறியிருக்கிறது. குறிப்பாக, 2012 ஆம் ஆண்டு, ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் (ஜேபிஎல்) மீது சீனா நெட்வொர்க் அடிப்படையிலான சைபர் தாக்குதல் நடத்தியதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்திய செயற்கைக்கோள் தகவல்தொடர்பில் தாக்குதல்
மேலும், 2017ம் ஆண்டில் இந்திய செயற்கைக்கோள் தகவல்தொடர்பில் சீனா தாக்குதல் நடத்தியதாகவும், இதுபோன்ற நடவடிக்கைகளில் கடந்த 2007ம் ஆண்டு முதல் சீனா தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

போட்டி விண்வெளி அமைப்புகளுக்கு அச்சுறுத்தல்
சீனாவில் பல எதிர் விண்வெளி தொழில்நுட்பங்கள் உள்ளன. அது அனைத்தும் போட்டி விண்வெளி அமைப்புகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரோ தலைவர் சிவன்
இதனிடையே, இதற்கு இஸ்ரோ தலைவர் சிவன் மறுப்பு தெரிவித்துள்ளார். சைபர் தாக்குதல்கள் ஒரு நிலையான அச்சுறுத்தல் தான் என்றும் ஆனால், இதுவரை இஸ்ரோவின் அனைத்து தொழில்நுட்பங்களும் எந்தவித தாக்குதலுக்கும் ஆளாகாமல் பாதுகாப்பாக இருக்கின்றன எனவும் கூறியுள்ளார்.

இந்தியா சீனா எல்லை விவகாரம்
இந்தியா சீனா எல்லை விவகாரத்திற்கு நடுவில் கடந்த ஜூன் மாதத்தில் சைபர் புலனாய்வு நிறுவனம் CYFirma தகவல் ஒன்றை வெளியிட்டது. அதில் சீன ஹேக்கர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீது தொழில்நுட்ப தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தெரிவித்தது.

சைபர் போர் நடத்த சீனா ஏற்பாடு
இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பாக கருத்து தெரிவித்த அதிகாரி ஒருவர், சைபர் போர் நடத்த சீனா ஏற்பாடுகள் செய்து வருகிறது, அரசு துறைகள் மற்றும் வங்கிகளின் இணையதளங்கள் முடக்க முயற்சி நடந்ததாகவும் தெரிவித்தார்.

நூற்றுக்கணக்கான சீன செயலிகளுக்கு தடை
இதற்கிடையில் சீனாவின் பைட் டான்ஸூக்கு சொந்தமான டிக்டாக், ஹலோ ஆப் மற்றும் யூசி பிரவுசர் என நூற்றுக்கணக்கான பிரதான சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது. இந்திய ஒற்றுமை, இறையாண்மை உள்ளிட்டவைகளை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
source: businesstoday.in


Click it and Unblock the Notifications