போதை மாத்திரைக்காக செய்த வேலை: டிக்டாக்கில் சிக்கிய வழிப்பறி புள்ளிங்கோ
சென்னையில் இருசக்கர வாகனங்களில் சென்று வழிப்பறியில் ஈடுபடுவது, அதனைக் கொடுத்து போதை மாத்திரைகள் வாங்கி உல்லாசமாகச் சுற்றுவது. அதோடு நேரம் கிடைக்கும்போது டிக் டாக் வீடியோ போடுவது என சுற்றித் திரிந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை புள்ளிங்கோ
சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த இந்தப் புள்ளிங்கோ கூட்டத்தில் 3 பேர் 18 வயதைத் தாண்டாத சிறுவர்கள். மீன்கடை நடத்தி வரும் இவர்கள் முன்னிரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் கிளம்புவார்கள். இவர்களது பிரதான வேலை சாலையில் தனியே நடந்து செல்லும் சுமாராக 40 வயதைக் கடந்தவர்களிடம் வழிப்பறியில் ஈடுபடுவதுதான் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

எது கிடைக்கிறதோ அதை பறித்துக் கொள்வது
இவர்கள் செல்போன், நகை, பணம், வாகனம் என எது கிடைக்கிறதோ அதனை பறித்துக் கொண்டு வந்து தங்களது பகுதியில் போதை மாத்திரை விற்கும் ஆசாமி ஒருவனிடம் கொடுத்து, மாத்திரைகளை வாங்கிச் செல்வது வழக்கம் என்று சொல்லப்படுகிறது. கடந்த ஓராண்டாக இந்த வழிப்பறி கும்பல் போலீசாரின் கண்களுக்கும் கவனத்துக்கும் புலப்படாமல் தப்பித்து வந்துள்ளது.

கத்தியை காட்டி மிரட்டி பணம், நகை பறித்தக் கும்பல்
இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன் நுங்கம்பாக்கம் பகுதியில் வைத்து ஒரு நபரை அடித்து, உதைத்து, கத்தியைக் காட்டி மிரட்டி பணம், நகை உள்ளிட்டவற்றை மர்ம கும்பல் பறித்துச் சென்றதாக போலீசாருக்கு புகார் வந்துள்ளது.

சிசிடிவி காட்சி வைத்து ஆராய்ந்த போலீஸார்
அடுத்த சில மணி நேரங்களில் இதே பாணியில் பாண்டிபஜாரில் ஒருவரை வழிமறித்துத் தாக்கி செல்போன், பணம் உள்ளிட்டவை பறித்துச் செல்லப்பட்டதாக தி.நகர் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீசார், இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பல்தான் என்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து தி.நகர் துணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் அவர்களே டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கண்காணிப்பை தீவிரப் படுத்திய போலீசார்
புளியந்தோப்பு பகுதியில் கண்காணிப்பை தீவிரப் படுத்திய போலீசார், திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை சென்றுவிட்டு திரும்பிய டேவிட் உட்பட 7 பேரை கூண்டோடு கைது செய்தனர். அவர்களிடமிருந்து , 2 இருசக்கர வாகனங்கள், 20 கிராம் தங்கம், 12 செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இந்த கும்பலுக்கு போதை மாத்திரைகளை விநியோகம் செய்ததாகக் கூறப்படும் நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

15க்கும் மேற்பட்ட வழிப்பறி சம்பவங்கள்
அதோடு, 15க்கும் மேற்பட்ட வழிப்பறி சம்பவங்கள், வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவங்களை கைதானவர்கள் ஒப்புக்கொண்டதாகக் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications