சூரிய கிரகணத்தோடு கொரோனா செயலிழக்கும் - சென்னை விஞ்ஞானி கூறியது உண்மையா?
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அதுவும் தமிழ்நாட்டில் இன்னும் வேகமாகப் பரவி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டிவரும் நிலையில், சென்னையைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் கொரோனாவிற்கும் சூரிய கிரகத்திற்கும் சம்பந்தம் உள்ளது என்று கூறியுள்ளார். இவரின் கருத்தில் எவ்வளவு உண்மை உள்ளது? என்று பார்க்கலாம்.

சூரிய கிரகணத்திற்கும் கொரோனாவிற்கும் என்ன தொடர்பு?
கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் நிகழ்ந்த சூரிய கிரகணத்திற்கும் கொரோனா பரவலுக்கு மிக நெருக்கமான தொடர்பு உள்ளதாகச் சென்னையைச் சேர்ந்த அணு மற்றும் புவியியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் விஞ்ஞானி சுந்தர் கிருஷ்ணன் என்பவர், சில தகவல்களை தற்பொழுது வெளியிட்டிருக்கிறார். இவரின் பேச்சு பல தரப்பில், பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

சென்னை விஞ்ஞானி, சுந்தர் கிருஷ்ணன்
இவர் சமீபத்தில் ஏஎன்ஐக்கு (ANI) அளித்த பேட்டி ஒன்றில், கடந்த ஆண்டின் இறுதியில் தோன்றிய சூரிய கிரகணத்தின்போது தான் கொரோனா உருவாகியுள்ளது என்று அவரின் ஆய்வின் முடிவுகள் தெரிவிப்பதாகப் பேட்டியளித்துள்ளார். சூரிய கிரகணத்தின் போது வெளியான ஆற்றல் காரணமாக, அணுவில் பிளவு ஏற்பட்டு அதன் காரணமாகத் தான் புதிய பரிணாம வளர்ச்சியின் பெயரில் கோவிட்-19 வைரஸ் உருவாகி இருக்கக் கூடும் என்று கூறியுள்ளார்.

சூரிய கிரகணத்தை தொடர்ந்து பூமியின் மாற்றம்
சுந்தர் கிருஷ்ணனின் இந்த அறிவிப்பு, தற்பொழுது அனைவரும் பேசும் ஒரு முக்கிய பேச்சு பொருளாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுந்தர் கிருஷ்ணனின் ஆய்வு கணிப்புப்படி, கடந்த டிசம்பர் மாதம் 26ம் தேதி அன்று நிகழ்ந்த சூரிய கிரகணத்திற்குப் பிறகு நமது சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்கள் தன்னை மறு சீரமைப்பு செயல்முறைகளுக்குள் தங்களைச் சீரமைத்து வருகிறது என்பதை சில ஆய்வின் மூலம் அவர் அறிந்து கொண்டதாக கூறியுள்ளார்.

இதனால் கூட கொரோனா வைரஸ் உருவாகி இருக்கலாம்
டிசம்பர் 26ம் தேதி நிகழ்ந்த, சூரிய கிரகணத்தின்போது வெளியான ஆற்றல் பூமியின் மீதும் விழுந்துள்ளது. இந்த ஆற்றல் காரணமாகப் பூமியின் வலிமை மறுசீரமைக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்குக் காந்தப் புலம் கூட வலு இழந்துள்ளது. பூமியின் மறுசீரமைப்பு காரணமாக ஏற்பட்ட சில மாற்றங்களின் காரணமாக கொரோனா வைரஸ் உருவாகி இருக்கலாம் என்றும், இதுவும் ஒருவகையான இயற்கை மாற்றம் தான், இதைப் பாரத்து நாம் அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறுகிறார்.

நியூக்ளியஸ் உருவாக்கம்
சூரிய கிரகணத்தின்போது, ஏற்பட்ட சேர்க்கைகள் மற்றும் அணுக்களின் பிளவு காரணமாகக் குறிப்பிட்ட நியூக்ளியஸ் உருவாக்கம் தொடங்கியிருக்கலாம். இதனால், வளிமண்டலத்தில் ஏற்பட்ட அணுசக்தி மாற்றத் தொடர்பு உயிரியக்கத்தின் கருவாக அமைந்திருக்கலாம். இதன் மூலம் கொரோனா வைரசின் உயிர் மூலக்கூறு கட்டமைப்பின் பிறழ்வு என்று அழைக்கப்படும் மியூட்டேஷன் (Mutation) நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

ஜூன் 21ம் தேதி நிகழும் சூரிய கிரகணம் தீர்வா?
அதேபோல், கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் மட்டும் தான் தோன்றியது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் தனது பேட்டியில் தெளிவாக அவர் கூறியுள்ளார். அதேபோல், இவரின் கணிப்பு சரியாக இருந்தால் வரும் ஜூன் 21ம் தேதி நிகழும் சூரிய கிரகணம் இதற்குத் தீர்வாக அமையவும் வாய்ப்புள்ளது என்று சுந்தர் கிருஷ்னன் கூறியுள்ளார். இயற்கையின் ஒரு திருப்பு முணை வாய்ப்பாக இந்த சூரிய கிரகணம் அமையும் எனக் கூறியுள்ளார்.

கொரோனா செயலிழக்க வாய்ப்புள்ளது
அதாவது, ஜூன் 21ம் தேதி நிகழும் சூரிய கிரகணத்தின் போது வெளியாகும் ஆற்றல்கள், மீண்டும் வைரசலில் ஏதேனும் மாற்றத்தை உருவாக்கி, அவற்றைச் செயலிழக்கச் செய்யவும் வாய்ப்புள்ளது என்று சுந்தர் கிருஷ்னன் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார். இந்த வைரஸ் தாக்குதல் இயற்கையான நிகழ்வு தான், சூரிய ஒளியும், சூரிய கிரகணமும் வைரஸை செயலிழக்கச் செய்து நம்மைப் பாதுகாக்கும் என்று விஞ்ஞானி கூறியுள்ளார்.

எவ்வளவு உண்மை ஒளிந்துள்ளது?
இவர் கூறிய கருத்திற்கு அறிவியல் சார்ந்த உண்மைகளும், ஆதாரங்களும் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை, இருப்பினும் இவரின் ஆய்வின் முடிவுகள் இப்படிக் கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார். பதஞ்சலி கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டது என்று கூறி இன்னொரு புறம் மற்றொரு சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. அதிலும், இன்னும் எவ்வளவு உண்மை ஒளிந்துள்ளது என்று ஆராய்ந்தால் மட்டுமே உண்மை வெளிவரும்.


Click it and Unblock the Notifications