வாட்ஸ்அப் இல் பரவும் செய்தி உண்மை தானா? செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட வாய்ப்புள்ளதா?
தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனத்த மழை பொலிந்து வருகிறது. இதனால், ஏரிகளில் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின் அளவு உயர்ந்து விட்டதால் ஏரி எப்பொழுது வேண்டுமானாலும் திறக்கப்படலாம் என்று வாட்ஸ்அப் மூலம் செய்திகள் பரவி வருகிறது.

இந்த செய்தி உண்மை தானா? ஏரி திறக்கப்படுமா?
இந்த செய்தி உண்மை தானா? ஏரி நிறைந்துவிட்டதா? நிறைந்து வரும் ஏரிகள் திறக்கப்பட்டால் வெள்ள அபாயம் ஏற்படக்கூடுமோ போன்ற கேள்விகள் அந்த வாட்ஸ்அப் செய்தியைப் படித்ததும் நமது மனதில் எழுந்திருக்கும். வேகமாகப் பரவி வரும் வாட்ஸ்அப் செய்தி உண்மையா? இல்லையா? என்ற சந்தேகத்தைத் தீர்க்க, பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் நிலைமையை விசாரித்து, உண்மையைக் கண்டறிந்துள்ளனர்.

கனமழை காரணமாக வேகமாக நிரம்பும் ஏரிகள்
செம்பரம்பாக்கம் ஏரிக்குப் பிரதானமாகப் பூண்டி ஏரியிலிருந்து தண்ணீர் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. கனமழை காரணமாக ஒரு பக்கம் மழை நீரும் மற்றொரு பக்கம் பூண்டி ஏரியிலிருந்து வரும் நீரும் செம்பரப்பக்கம் ஏரியை நிரப்பி வருகிறது. இதன் காரணமாக 24 அடி உயரம்கொண்ட ஏரியில் தற்போது நீர்மட்டம் 21.6 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் பூண்டி ஏரியிலிருந்து வரும் நீர் தற்பொழுது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியது என்ன?
இந்த சூழ்நிலை காரணமாகத் தான் செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின் அளவு உயர்ந்து விட்டதாகவும், ஏரி திறக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் பல தவறான தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள், ஏரி தற்போது நிரம்ப வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர். தொடர்ந்து கனமழை நீடிக்கும் பட்சத்தில் மட்டும் ஏரி நிரம்ப வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

சூழ்நிலை மாறினால் நீரை வெளியேற்றத் திட்டம் உள்ளது
கனமழை நீடித்து நீரின் வரத்து அதிகரித்து, ஏரியின் நீர்மட்டம் உயரும் பட்சத்தில் உடனடியாக நீரை வெளியேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். நீர் வெளியேற்றப்படும் வழிகள் அனைத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

குறைவான அளவில் நீரைத் திறந்துவிடத் திட்டம்
இதனிடையே சென்னை மாநகராட்சி அதிகாரி பிரகாஷ் இது குறித்து கூறுகையில், ''செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 24 அடி, இப்பொழுது இந்த ஏரியின் நீர்மட்டம் 21.6 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலைமைச் செயலர், பொதுப்பணித் துறைச் செயலர் மற்றும் சுகாதாரத் துறைச் செயலர் அனைவரும் கலந்து ஆலோசித்து, நீர்மட்டம் 22 அடியைத் தொட்டவுடன், குறைவான அளவில் நீரைத் திறந்துவிடத் திட்டமிடப்பட்டுள்ளது''. என்று கூறியுள்ளார்.

2015 வெள்ள பெருக்கை மறக்காத மக்கள்
அனைத்து வகையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால் ஏரிக்கரையோரம் வசிக்கும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வாட்ஸ்அப் செய்தி அனைவர்க்கும் 2015 ஆம் ஆண்டில் நிகழ்ந்த வெள்ள பெருக்கை நினைவுபடுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications