நீட் தேர்வுக்கு பயிற்சி தரும் பெண் ரோபோ! வடசென்னை இளைஞரின் மெர்சல் கண்டுபிடிப்பு!
வடசென்னை என்று சொன்னதும் பலரின் நினைவில் கண்டிப்பாக வடசென்னை திரைப்படம் நினைவிற்கு வந்திருக்கும். அதேபோல், இன்னும் சிலருக்கு புல்லிங்கோ நினைவிற்கு வந்து இருப்பார்கள். ஆனால், இந்த செய்தி அவர்களைப் பற்றியதல்ல, வடசென்னையைச் சேர்ந்த இளைஞர் கண்டுபிடித்த புதிய பெண் ரோபோவை பற்றியானது. இந்த ரோபோ என்ன செய்யும்? எதற்கு இது பயன்படுத்தப்படும் என்று பார்க்கலாமா?

போதிய ஆசிரியர்கள் இல்லாமல் போதிய பயிற்சி இல்லை
நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெற ஏராளமான பயிற்சி தேவைப்படுகிறது. முக்கியமாக மாநகரங்கள், நகரங்கள் தாண்டி பெரும்பாலும் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு, நீட் தேர்வு உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கான போதிய பயிற்சி சரியாக கிடைப்பதில்லை. இதற்கான காரணம் பயிற்சி அளிக்க போதிய ஆசிரியர்கள் நம்வசம் இல்லை என்பது தான்.

நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கும் ரோபோட்
இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு வடசென்னையைச் சேர்ந்த கெனித் ராஜ் என்ற பொறியியல் பட்டதாரி, புதிய பெண் ரோபோ ஒன்றை வடிவமைத்து உருவாக்கியுள்ளார். பெண் வடிவத்தில் இருக்கும் இந்த ரோபோ, நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கான பயிற்சியை மாணவர்களுக்கு வழங்கும் என்று கெனித் ராஜ் தெரிவித்துள்ளார். ஆசிரியர் பற்றாக்குறையையும் நீக்க உதவும் என்று அவர் கூறியுள்ளார்.

மாணவர்கள் மத்தியில் பாடம் எடுக்கும் ரோபோட்
நீட் தேர்வுக்கான அனைத்து பாடத்திட்டங்களும் பொருத்தப்பட்டுள்ள கணினியுடன் இந்த பெண் ரோபோ இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து விதமான பயிற்சி மாற்றுத் தேர்வுகளை இந்த ரோபோ துல்லியமாகச் செய்து முடிக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் இல்லாமல் மாணவர்கள் மத்தியில் இந்த ரோபோ சிறப்பாக வகுப்பெடுக்கிறது.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசும் ரோபோட்
தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் இந்த ரோபோ மாணவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறது. பொது அறிவு மற்றும் இயல் பறிவுடன் உடனுக்குடன் மாணவர்களின் சந்தேகத்திற்குப் பதில் அளிக்கிறது. அதேபோல், பொதுவான இயல்பான கேள்விகளுக்கும் இந்த ரோபோ சரியாகப் பதில் அளிக்கிறது.

வேடிக்கையாகவும் பேசத் தெரியும்
உதாரணத்திற்கு, நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள் என்று கேட்டால், எனக்குச் சாப்பாடு தேவை இல்லை; நான் மின்சாரத்தில் இயங்குகிறேன் என்று பதில் அளிக்கிறது. இன்னும் பல வேடிக்கையான கேள்விகளுக்கும், நகைச்சுவையாகவும் வேடிக்கையாகவும் பதில் அளிக்கிறது.

அரசின் அங்கீகாரம் வேண்டும்
நீட் தேர்வு பயிற்சிக்கான அனைத்து பயிற்சிகளையும் இந்த ரோபோ ஆசிரியரின் இடத்திலிருந்து மாணவர்களுக்குக் கற்றுத்தருகிறது. ஆசிரியர்கள் இல்லாத மலைவாழ் மாணவர்களுக்காக இந்த ரோபோவை வடிவமைத்து இருப்பதாக கெனித் ராஜ் தெரிவித்துள்ளார். அரசின் அங்கீகாரம் கிடைத்தால் இந்த ரோபோவை பரவலாகக் கொண்டு சேர்க்க முடியும் என்று இவர் நம்புகிறார். கிராமப்புற மாணவர்களுக்கு இது பெரிதும் உதவும் என்று அவர் கூறியுள்ளார்.

மாதா, பிதா, குரு - ரோபோட், தெய்வம்
எந்திரன் படத்தில் வருவது போன்று அட்டகாசமாகவும் அறிவாகவும் இந்த ரோபோ செயல்படுகிறது. இந்த ரோபோவை உருவாக்க கெனித் ராஜ்ஜிற்கு அதிகபட்ச விலையாக ஐந்து லட்சம் ரூபாய் வரை செலவாகியுள்ளதாம். அரசாங்கத்தின் அங்காரத்திற்காக கெனித் ராஜ் காத்திருக்கிறார். அங்கீகாரம் கிடைத்தால் நிச்சயம் மாதா, பிதா, குரு தெய்வம் என்ற வரிசையில் குரு என்னும் மூன்றாம் இடத்தில் இந்த ரோபோ சிறப்பாகச் செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications