எதுக்கு வெளிய சுத்தனும்: மருத்துவம் எல்லாம் உங்க வீட்டிலேயே., இதோ இலவச செயலி- சென்னை மாநகராட்சி அதிரடி!
கொரோனா நம் உலக நடைமுறையையே மாற்றி அமைத்துள்ளது என கூறலாம். இருப்பினும் எதுவும் கடந்து போகும் இதுவும் கடந்த போகும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் தென்பட தொடங்கியிருக்கிறது. கொரோனா பரவலைக் குறைக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மருத்துவமனையில் படுக்கை எப்போதும் நிரம்பிய வண்ணம் இருக்கிறது.

கொரோனா பரவல் அச்சம்
கொரோனா பரவல் அச்சத்தை மக்கள் மத்தியில் குறைக்கும் வகையில் தொற்று தொடர்பான சந்தேகங்களை போக்க மருத்துவ ஆலோசனைகளை வீட்டில் இருந்தே பெறும்வகையில் சென்னை மாநகராட்சி தரப்பில் ஜிசிசி விட்மெட்(GCC Vidmed) என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த செயலி தற்போது பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

வீடியோகால் மருத்துவ ஆலோசனை
அதுமட்டுமின்றி மருத்துவ ஆலோசனை தேவைப்படுவோர் இந்த செயலி மூலமாக 24*7 என்ற அடிப்படையில் வீடியோ கால் மூலமாக மாநகராட்சி மருத்துவர்களுடன் உரையாடல் மேற்கொண்டு ஆலோசனை பெற்று கொள்ளலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி இணை ஆணையர் அல்பி ஜான் அளித்துள்ள தகவலின்படி, இந்த செயலியின் வீடியோகால் மூலமாக ஆலோசனை மேற்கொள்ளலாம் என குறிப்பிட்டார்.

இணையவழி மருத்துவ சீட்டு
வீடியோகால் மூலமாக ஆலோசனை மேற்கொள்வதை வைத்து E-Prescription என்ற இணையவழி மருத்துவ சீட்டு வழங்கப்படும். ஆலோசனைகளை வைத்து இந்த மருத்துவ சீட்டு வழங்கப்படுகிறது இதை காண்பித்து அருகில் இருக்கும் மருந்தகத்தில் மருந்துக்களை பெறலாம். அதோடு தொற்று பரவல் இருப்பவர்கள் விரைவாக ஆலோசனை பெறும் வகையில் இலவச தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவாக மருத்துவ ஆலோசனை
விரைவாக மருத்துவ ஆலோசனை பெறும் வகையில் 044-25384520, 1913 ஆகிய இலவச தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த எண்களுக்கு தொடர்பு கொண்டு சென்னையில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் எங்கு காலியாக இருக்கிறது என்பதை அறிந்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த செயலிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து வாட்ஸ்அப் மூலம் வீடியோ கால் மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. டெல்லியில் ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை தற்போது குறைவாகவே உள்ளது. அதேபோல் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலமாக கொரோனா தொற்று மூன்றாம் அலையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தை பொறுத்தவரை 24 மணிநேரத்தில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் தளர்வுகள் இல்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஊரடங்கிற்கு முன்பான நாளில் அனைத்து கடைகள், சந்தைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் சென்னையில் இருந்து பிற நகரங்களில் இருந்தும் 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது, இதனால் மக்கள் கூட்டமாக கூட்டமாக பொதுவெளியில் தென்பட்டனர்.

தமிழகத்தில் தளர்வுகள் இல்லா ஊரடங்கு
தமிழகத்தில் தளர்வுகள் இல்லா ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த முழு ஊரடங்கு காலத்தில் மாவட்ட ஆட்சியர்கள்., தங்களது பணிக்கால அனுபவம், அறிவு, திறமை என அனைத்தையும் பயன்படுத்தி கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். முழு ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த காலக் கட்டத்தில் மக்கள் தேவையான காய்கறிகள், பழ வகைகள், பால் போன்ற அத்தியாவசிய தேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்
மேலும் மியூகோர்மைகோசிஸ் (mucormycosis) எனும் அரிய தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களில் 50 சதவிகிதம் பேர் உயிரிழக்கின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் உயிர் பிழைக்கும் சிலருக்கு ஒரு கண் அகற்றப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல் மிகவும் அரிதாக உண்டாகும் இந்த தொற்று பாதிப்பானது கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த ஆயிரக் கணக்கானோருக்கு சமீப மாதங்களாக இந்தியாவில் உண்டாகி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பட்சத்தில் இந்த தொற்று வருவதாக கூறப்படுகிறது எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.


Click it and Unblock the Notifications