சிவில் சர்வீஸ் தேர்வு ரத்தா? கொதிக்கும் தேர்வர்கள்.. ChatGPT மூலம் தேர்வர் காட்டிய வேலை!
சிவில் சர்வீஸ் தேர்வுகளை (Civil Services Exams) எழுத மாநிலம் முழுவதும் பல லட்சக்கணக்கான தேர்வர்கள் தயாராகிவரும் வேளையில், தேர்வர் ஒருவர் சாட்ஜிபிடி மூலம் செய்த காரியத்தால் நடந்து முடிந்த உதவி செயல் பொறியாளர் தேர்வே ரத்து செய்யப்பட்டுவிடும் போல் இருக்கிறது.
அண்மை காலமாக நடக்கும் சம்பவங்களை பார்த்தால், எதற்கெல்லாம் சாட்ஜிபிடியை (ChatGPT) பயன்படுத்த வேண்டும், பயன்படுத்தக்கூடாது என்று சட்டம் போட வேண்டும் போல தோன்றுகிறது. சாட்ஜிபிடியை வைத்து நாள்தோறும் தினுசு தினுசாக குற்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஓப்பன் ஏஐ (Open AI) மூலம் உருவாக்கப்பட்ட சாட்ஜிபிடி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மிகப்பெரும் உச்சத்தை எட்டிவிட்டது.

எங்கு பார்த்தாலும் சாட்ஜிபிடி பேச்சாகவே இருக்கிறது. பள்ளி மாணவர்கள் அசைன்மென்ட் எழுதுவது முதல் பல்கலைகழக ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வுகள் நடத்துவது வரையில் சாட்ஜிபிடி பிரமலமடைந்துள்ளது. கலை, கணிதம், அறிவியல் என எந்த கேள்வி கேட்டாலும் சாட்ஜிபிடி பதில் அளிக்கிறது. இதனால், தேர்வு எழுவதுவதிலும் முறைகேடுகள் நடக்கத் தொடங்கிவிட்டன.
தெலங்கானா மாநில அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (Telangana State Public Service Commission) சார்பில் நடத்தப்படும் டிஎஸ்பிஎஸ்சி (TSPSC) தேர்வுகளுக்கு தமிழ்நாட்டை போலவே 10 லட்சத்துக்கும் அதிகமான தேர்வர்கள் தயாராகி வருகின்றனர். இந்த டிஎஸ்பிஎஸ்சி மூலம் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் உதவி செயல் பொறியாளர் (Assistant Executive Engineer) தேர்வு இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்தது.
இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், சிறப்பு புலனாய்வு குழு (Special Investigating Team) அமைக்கப்பட்டு விசாரணை நடந்துவந்தது. இந்த குழுவின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மொத்தம் 8 தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதும், அதில் ஒரு தேர்வர் சாட்ஜிபிடி (ChatGPT) மூலம் தேர்வு எழுதியது மட்டுமல்லாமல், மற்ற 7 தேர்வர்களுக்கும் ப்ளூடூத் இயர்பட்ஸ் மூலம் கேள்விக்கான பதில்களை பகிர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழு தரப்பில், பூலா ரமேஷ் என்னும் சிவில் சர்வீஸ் தேர்வர், தெலங்கானா அரசின் டிஎஸ்என்பிடிசிஎல் (TSNPDCL) வாரியத்தில் டிவிஷனல் இன்ஜினியராக (Divisional Engineer) இருக்கும் ஒருவரது உதவியுடன் உதவி செயல் பொறியாளர் தேர்வுக்கான கேள்வித்தாளை 10 நிமிடங்களுக்கு முன்பே பெற்றுள்ளார். அந்த கேள்விகளை 30 தேர்வர்களுக்கு கொடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாம், கேள்விகளுக்கான பதில்களை ஏஐ (AI) சாட்பாடான சாட்ஜிபிடி மூலம் பெற்று, அந்த பதில்களை தேர்வின் போது 7 பேருக்கு ப்ளூடூத் இயர்பட்ஸ் மூலம் தெரிவித்துள்ளார். இந்த 7 பேரிடமும் இருந்து ரூ. 40 லட்சம் பெற்றுள்ளார். அதேபோல கேள்விகளை தெரிவிக்க 30 தேர்வர்களிடம் தலா ரூ.25 லட்சம் பெற்றுள்ளார். இந்தத் தொகையை அவரும் அவருக்கு உதவியாக இருந்த டிவிஷனல் இன்ஜினியரும் பங்கு போட்டுக்கொண்டனர். இப்போது இவர்கள் இருவரையும், அந்த 7 பேரையும் கைது செய்துள்ளோம்.
மீதமுள்ள 30 பேரின் அடையாளங்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அந்த தேர்வு ரத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சிவில் சர்வீஸ் தேர்வர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








