பிளிப்கார்ட், அமேசான் விற்பனைக்கு மீண்டும் தடை! இந்திய அரசு திடீர் மாற்றம்!
பிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஸ்நாப்டீல் போன்ற நிறுவனங்கள் மீண்டும் தங்களின் அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்ய இந்திய அரசு அனுமதி வழங்கியது. இதனால் இந்நிறுவனங்கள் இன்று முதல் தங்களின் சேவையைத் துவங்க தயாராக இருந்த நிலையில், இந்திய அரசு மீண்டும் ஒரு எதிர்பாராத அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது.

பிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஸ்நாப்டீல்
பிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஸ்நாப்டீல் போன்ற நிறுவனங்கள் மொபைல் போன்கள், டிவிகள், லேப்டாப்கள், பிரிட்ஜ் மற்றும் ரெடிமேட் ஆடைகளை ஏப்ரல் 20ம் தேதி முதல் விற்பனை செய்ய நான்கு நாட்களுக்கு முன்பு அனுமதி வழங்கியது, ஆனால், தற்பொழுது அத்தியாவசியமற்ற பொருட்களை இ-காமர்ஸ் தளங்கள் மூலம் விற்பனை செய்வதற்கு இந்திய அரசாங்கம் நேற்று மீண்டும் தடை விதித்துள்ளது.

அரசின் சில பிரத்தியேக விதிமுறை
மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, இ-காமர்ஸ் நிறுவனங்களின் வாகனங்களில் அத்தியாவசியமற்ற பொருட்களை விலக்கி உத்தரவு பிறப்பித்தார். மேலும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் மற்றும் அதன் ஈ-காமர்ஸ் ஆபரேட்டர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் அரசின் சில பிரத்தியேக விதிமுறைகளின் கீழ் தேவையான அனுமதியுடன் இயக்க அனுமதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்திய அரசாங்கம் செய்த மாற்றம்
இ-காமர்ஸ் நிறுவனங்களின் அத்தியாவசியமற்ற பொருட்களின் விற்பனைக்கான அனுமதி ஏப்ரல் 20ம் முதல் துவங்கலாம் என்று கடந்த ஏப்ரல் 15ம் தேதி உத்தரவு வழங்கப்பட்டது என்று அதன் அறிக்கை விபரங்கள் தெரிவித்திருந்தது. ஆனால், தற்போது திடீரென்று வழங்கப்பட உத்தரவை இந்திய அரசாங்கம் மாற்றம் செய்துள்ளது. இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் என்னவென்று சரியாக விளக்கம் அளிக்கப்படவில்லை.

அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே அனுமதி
பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள் இ-காமர்ஸ் தளங்களின் மூலம் உணவு, மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை முன்பிருந்தே விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசின் முந்தைய உத்தரவின் படி பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் அத்தியாவசிய பொருட்களின் வழங்கலைத் தொடர்ந்து வழங்க அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications