40செமீ நகர்ந்த விக்ரம் லேண்டர்.. 8 மணிக்கெல்லாம் ஸ்விட்ச் ஆஃப்.. நிலவில் என்ன நடந்தது? ISRO என்ன செய்தது?
நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட சந்திரயான்-3 மிஷனின் விக்ரம் லேண்டர் (Vikram Lander) ஆனது 40செமீ நகர்ந்தது என்கிற இஸ்ரோவின் அறிவிப்பு.. உங்களில் சிலரை குழப்பமடைய செய்யலாம். அதெப்படி நகர்ந்தது? ஏன் நகர்ந்தது? அது ஏன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டது? இதோ விவரங்கள்:
நம்மை எல்லாம் நகம் கடிக்க வைத்து.. ஆகஸ்ட் 23 ஆம் தேதி மாலை 6 மணி அளவில்.. நிலவில் பத்திரமாக 'சாஃப்ட் லேண்டிங்' செய்த சந்திரயான் 3-யின் விக்ரம் லேண்டர் ஆனது தானாக 40 செமீ தூரத்திற்கு நகரவில்லை; இஸ்ரோ தான் அதை திட்டமிட்டு நகர்த்தியுள்ளது.

விக்ரம் லேண்டரின் எஞ்சின்களை மீண்டும் இயக்கி, அது எங்கே தரை இறங்கியதோ.. அந்த மேற்பரப்பில் இருந்து, அதை சுமார் 40 செமீ அளவிற்கு உயர்த்தி, பின்னர் 30 முதல் 40 செமீ தொலைவில் அதை மீண்டும் பாதுகாப்பாக தரையிறக்கியதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விக்ரம் லேண்டரை பறக்க செய்து அதை மீண்டும் தரை இறக்க என்ன காரணம்? இஸ்ரோவின் கூற்றுப்படி, இது விக்ரம் லேண்டரை பறக்க வைத்து பார்க்கும் ஒரு சோதனை (Hop Experiment) ஆகும். இந்த சோதனை லேண்டரில் உள்ள கேமராவில் பதிவாகியும் உள்ளது. குறிப்பிட்ட வீடியோவை வெளியிட்ட இஸ்ரோ, "விக்ரம் லேண்டர் மீண்டும் சாஃப்ட் லேண்டிங் செய்தது" என்று கூறியுள்ளது.
சோதனையின் போது மற்றும் சோதனைக்கு பிறகு விக்ரம் லேண்டரின் "ஆரோக்கியம்" எப்படி இருக்கிறது? பறக்க வைத்து பார்க்கும் சோதனையின் போது விக்ரம் லேண்டரின் அனைத்து அமைப்புகளும் நன்றாக செயல்பட்டதாகவும் (Performed Nominally), அவைகள் ஆரோக்கியமாக (Were Healthy) இருப்பதாகவும் இஸ்ரோ கூறியுள்ளது.
"பரிசோதனைக்கு பிறகு, ரேம்ப் செயல்படுத்துதல் (Deployed Ramp), சந்திராஸ் சர்ஃபேஸ் தெர்மோ பிஸிக்கல் எக்ஸ்பிரிமென்ட் (Chandra's Surface Thermo physical Experiment - ChaSTE) மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் ஃபார் லூனார் சீஸ்மிக் ஆக்டிவிட்டி Instrument for Lunar Seismic Activity - ILSA) ஆகியவைகள் மீண்டும் மடிக்கப்பட்டு, பின்னர் மீண்டும் வெற்றிகரமாக மீண்டும் பயன்படுத்தப்பட்டன" என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.
இருப்பினும் 8 மணிக்கெல்லாம் ஸ்விட்ச் ஆஃப்.. ஏன்? பிரக்யான் ரோவரை தொடர்ந்து விக்ரம் லேண்டரும் ஸ்லீப் மோட்-ற்கு கொண்டு செல்லப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. விக்ரம் லேண்டர் ஆனது செப்.4 ஆம் தேதி காலை 8 மணியளவில் 'ஸ்லீப் மோடிற்கு' உட்படுத்தப்பட்டது; அதன் பேலோடுகள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளன, இருப்பினும் லேண்டரின் ரிசீவர்கள் இயக்கத்தில் வைக்கப்பட்டுள்ளன' என்று இஸ்ரோ அறிவித்துள்ளது
நினைவூட்டும் வன்ணம், கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதியன்று, பிரக்யான் ரோவர் தனது பணிகளை முடித்துவிட்டதாகவும், அது பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு ஸ்லீப் மோடில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் பிரக்யானின் ரிசீவர் ஆன் செய்யப்பட்டி இருப்பதாகவும் இஸ்ரோ கூறி இருந்தது.
ஆக இஸ்ரோ முன்னர் கூறியது போலவே, சூரிய சக்தி தீர்ந்து, பேட்டரி தீர்ந்து விக்ரம் லேண்டர் ஆனது பிரக்யானுக்கு அடுத்தபடியாக ஸ்லீப் மோடிற்கு சென்றுள்ளது. வருகிற செப்டம்பர் 22 ஆம் தேதியன்று சந்திரனின் தென் துருவத்தில் சூரியன் உதயம் நடக்கும் போது, விக்ரமும், பிரக்யானும் மீண்டும் "கண் விழிக்கும்" என்று இஸ்ரோ நம்புகிறது.
ஒருவேளை பிரக்யான் ரோவர் ஸ்லீப் மோடில் இருந்து எழுந்திருக்காவிட்டால் என்னவாகும்? முன்னரே குறிப்பிட்டபடி பிரக்யான் ரோவரின் ரிசீவர் 'ஆன்' செய்யப்பட்டுள்ளது. வருகிற செப்டம்பர் 22 அன்று எதிர்பார்க்கப்படும் அடுத்த சூரிய உதயத்தின் வழியாக சூரிய ஒளியை பெறும் வகையில் அதன் சோலார் பேனல் உள்ளது.
எல்லாம் சரியாக நடக்கும் பட்சத்தில் பிரக்யான் ரோவர் ஆனது மற்றொரு மூன் மிஷனை செய்ய வெற்றிகரமாக கண் விழிக்கும். ஒருவேளை அது எழவில்லை என்றால்.. அதனால் ஸ்லீப் மோடில் இருந்து மீள முடியவில்லை என்றால்.. "அது இந்தியாவின் சந்திர தூதராக எப்போதும் அங்கேயே இருக்கும்" என்று இஸ்ரோ கூறியுள்ளது.
ஏற்கனவே பிரக்யான் ரோவர் ஆனது, சந்திர கிரகத்தில் "நடமாடிய" மிகவும் குறுகிய கால வாழ்க்கையில், அதாவது செப்டம்பர் 2 ஆம் தேதி வரை 100 மீட்டருக்கும் அதிகமான பயணத்தை முடித்துள்ளது. "10 நாட்களில் 100 மீட்டருக்கு மேல் கடந்துவிட்டோம், 6 மாதங்கள் வரை நீடித்த பல பயணங்கள் 100 - 120 மீட்டர்களை மட்டுமே நிர்வகித்துள்ளன" என்று சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








