இனி Smartphone தொலைந்தால் வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம்.. மே 17 அன்று புதிய திட்டம் அமல்!
இந்தியாவில் தொலைந்துபோன அல்லது திருடப்பட்ட மொபைல் போன்களை (Lost or Stolen Mobile Phone) எளிதாக கண்டுபிடிக்கும் நோக்குடன் மத்திய அரசு மே 17ஆம் தேதி புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த திட்டம் மூலம் தொலைந்த செல்போன்களை மக்கள் எளிதாக கண்டுபிடிக்க முடியும். ஒருவேளை உங்கள் செல்போன் தொலைந்தால், எப்படி அரசிடம் விண்ணப்பித்து பெறுவது என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன் (Smartphone) பயன்பாடு நம்மிடையே தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. ஒரேவொரு நாள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல், இருக்க சொன்னால் கண்டிப்பாக பலரால் இருக்க முடியாது. அதற்கு காரணமும் இருக்கிறது, ஏனென்றால், வெறும் பொழுதுபோக்குக்கு மட்டுமல்லாமல், ஸ்மார்ட்போன்கள் பல்வேறு சேவைகளுக்கும் பயன்படுகிறது.

நம்மால் வீட்டு பில்களை கட்டுவது முதல் வங்கி சேவைகளை பெறுவது வரையில் ஸ்மார்ட்போனிலேயே பயன்படுத்திக்கொள்ள முடிகிறது. இதனால், நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் முதல் வங்கி தகவல்கள் வரை ஸ்மார்ட்போனில் அடங்கிவிடுகிறது. இதன் காரணமாகவே, யாரிடம் இருந்தும் அவர்களது ஸ்மார்ட்போனை பிரிக்க முடிவதில்லை. அப்படிப்பட்ட ஸ்மார்ட்போன் திருடப்பட்டாலோ, தொலைந்துபோனாலோ அதன் உரிமையாளருக்கு எப்படி இருக்கும்?
அந்த ஸ்மார்ட்போனை பற்றிய கவலையைவிட, அதில் இருக்கும் தகவல்கள் வைத்து பணம் கொள்ளையடிக்கப்படுமோ அல்லது தவறாக பயன்படுத்தப்படுமோ என்பதே அதிக கவலையை அளிக்கும். இருப்பினும், தொலைந்துபோன் ஸ்மார்ட்போன்களை கண்டுபிடிக்க, பல்வேறு வழிமுறைகள் உள்ளன. பொதுவாக தொலைந்துபோன ஸ்மார்ட்போனை IMEI (சர்வதேச மொபைல் எக்யூப்மென்ட் ஐடென்டிட்டி) நம்பரை வைத்து டிராக்கிங் செய்து கண்டுபிடிக்கலாம்.
இதன் மூலம் உங்களது ஸ்மார்ட்போனை பிளாக் (Block) செய்யவும் முடியும். இந்த சேவையை மக்கள் எளிமையாக பயன்படுத்திக்கொள்ளும் விதமாக மத்திய மத்திய தொலைத்தொடர்புத் துறை மே 17ஆம் தேதி புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த திட்டம் மூலம் வீட்டில் இருந்தே உங்களது தொலைந்துபோன ஸ்மார்ட்போனை கண்டுபிடிக்க அரசுக்கு கோரிக்கை வைக்க முடியும்.
எதிர்பாராதவிதமாக உங்களது ஸ்மார்ட்போன் தொலைந்தால், நீங்கள் CEIR (மத்திய உபகரண அடையாள பதிவு - Central Equipment Identity Register) என்ற வெப்சைட்டுக்கு சென்று விண்ணப்பிக்கலாம் அல்லது கூகுள் பிளே மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கும் சிஇஐஆர் கேஒய்எம் ஆப் (CEIR KYM App) மூலமும் விண்ணப்பிக்கலாம்.
இப்படி விண்ணப்பிக்க நீங்கள் போலீசாரிடம் புகார் அளித்திருக்க வேண்டும். அந்த எஃப்ஐஆர் காப்பி உடன் தொலைந்துபோன ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்ட மொபைல் நம்பர் (Mobile Number), ஐஎம்இஐ நம்பர் (IMEI Number), ஸ்மார்ட்போனின் பிராண்ட் (Brand), மாடல் (Model), பர்ச்சேஸ் இன்வாய்ஸ் (Purchase Invoice), தொலைந்துபோன இடம், நேரம் உள்ளிட்ட தகவல்களை வைத்திருக்க வேண்டும்.
இந்த தகவல்களை வைத்து விண்ணப்பித்த பின்பு 24 மணி நேரத்திற்குள் உங்களது ஸ்மார்ட்போன் முடக்கப்படும். அதன்பின் யாராலும் அதை பயன்படுத்த முடியாது. இதையடுத்து டிராக்கிங் செய்து கண்டுபிடிக்கப்பட்ட பின்பு உங்களிடம் ஒப்படைக்கப்படும். இந்த புதிய திட்டம் மூலம் உங்களது ஸ்மார்ட்போனை வைத்து பணம், தகவல்கள் திருடப்படுவதை உடனடியாக தடுக்க முடியும்.
இதே போன்று தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். புதிய செய்திகள் உடனுக்குடன் பதிவேற்றப்படும்.


Click it and Unblock the Notifications








