அனுமதி கிடைத்தது: சோதனை தொடங்குங்க- தயார்நிலையில் ஜியோ, ஏர்டெல், விஐ!
5ஜி தொழில்நுட்பம் இந்திய அறிமுகம் குறித்து அடுத்தடுத்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்தியாவில் 4 ஜி இணைய வேகம் அறிமுகம் செய்யப்பட்டு அனைத்து பகுதியிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2ஜி, 3ஜி, 4ஜி போன்ற இணைய சேவைகள் ஒவ்வொரு காலக்கட்டங்களாக அறிமுகம் செய்யப்பட்டது.

5ஜி எப்போது அறிமுகமாகும்
அடுத்த தலைமுறையாக இருக்கும் 5ஜி எப்போது அறிமுகமாகும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது. இந்த நிலைியல் 5ஜி சோதித்து பார்க்க ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், விஐ, எம்டிஎன்எல் ஆகிய நிறுவனங்கள் மத்திய அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தது. இதற்கு தற்போது மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. இந்த சோதனையானது 6 மாதங்கள் நடைபெறும் எனவும் இது நகரப்பகுதிகள் மட்டுமல்லாமல் கிராமம், நடுத்தர நகரம் ஆகிய பகுதிகளிலும் சோதனை நடத்தப்படும் என கூறப்படுகிறது. இதன்மூலமாக அனைத்து பகுதிகளிலும் தடையின்றி 5ஜி சேவை கிடைப்பதை உறுதிப்படுத்த முடியும்.

5ஜி சோதனை
5ஜி சோதனை மேற்கொள்வதற்கு தங்களிடம் உள்ள ஸ்பெக்ட்ரம்களையும், பரிசோதனையில் உள்ள ஸ்பெக்ட்ரம்களையும் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் இந்த சோதனைகளுக்கு சீன நிறுவனங்களின் சாதனங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஹூவாய் மொபைல் பயன்படுத்த நிறுவனங்கள் திட்டமிட்டிருந்தது, தற்போது சீன சாதனங்கள் பயன்படுத்த மாட்டோம் என தெரிவிக்கப்பட்டு விட்டன.

அடுத்த தலைமுறை 5ஜி சேவை
2ஜி சேவையில் எம்எம்எஸ், 3ஜி சேவையில் வீடியோ கான்பரன்ஸ் என தொடங்கி தற்போதைய 4 ஜி சேவையில் பெரும்பாலான சேவைகளை வீடியோ மூலமாக மேற்கொண்டு வருகிறோம். அதேபோல் அடுத்த தலைமுறையாக 5 ஜி சேவை அறிமுகமாக போகிறது என்று சாதாரணமாக கடந்து விடமுடியாது.

இணைய வேகம் 56 mbpsஇல் இருந்து 490 mbps
அடுத்த தலைமுறைக்கான 5ஜி சேவையில் இந்தியாவின் தொழில்நுட்பங்கள் பல்வேறு கட்டங்களுக்கு முன்னேறப் போகிறது. தற்போது பயன்படுத்தப்படும் 4ஜி சேவையை விட பலமடங்கு இணைய வேகம் அதிகரிக்கும். 5ஜி சேவையானது 28 ஜிகா ஹெட்ஸில் இருந்து 39 ஜிகாஹெட்ஸ் அலைவரிசையில் இயங்க இருக்கிறது. அதாவது இணைய வேகம் 56 mbpsஇல் இருந்து 490 mbps வேகத்திற்கும், பதிவிறக்கம்(Download) 8mbps இல் இருந்து 100 mbps வேகத்திலும் இருக்கும்.5ஜி அறிமுகத்தின் மூலம் வீடுகளில் உள்ள டிவிகள், பிரிட்ஜ்கள், ஏசிகள், வாசிங்மெஷின்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் கமாண்டிங் ஆப்பரேஷன் (தொலைவில் இருந்து கட்டுப்படுத்தும் கருவி) மூலம் இயக்க உள்ளோம்.

5ஜி புரட்சியின் முக்கியத்துவம்
இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 நிகழ்வில் மொபைல் உற்பத்தியில் பிரத்யேக தளமாக இந்தியா வளர்ந்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருந்தார். அதே நிகழ்வில் பங்கேற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவில் 5ஜி புரட்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவில் 5ஜி புரட்சிக்கு ஜியோ முன்னோடியாக இருக்கும் என மோடி முன்னிலையில் அவர் உறுதியளித்தார்.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வருவாய்
மறுபுறம் 2026 ஆம் ஆண்டில் இந்தியாவில் 5ஜி இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 35 கோடியாக இருக்கும் என எரிக்சன் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இது மொபைல் சந்தாதாரர்களில் எண்ணிக்கையில் 27 சதவீதம் ஆகும். அதேபோல் 5ஜி சேவை வழங்குவதன் மூலம் இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வருவாய் 1700 கோடி டாலர்களாக அதிகரிக்கும் எனவும் அந்த நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.


Click it and Unblock the Notifications