குடியுரிமை சட்டத்திருத்த மசோதா விவகாரம்: ஏர்டெல், வோடபோன், ஜியோ சேவை நிறுத்தம்- எங்கே தெரியுமா?
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த ஹிந்துக்கள், பாா்சிக்கள், பௌத்தா்கள், சமணா்கள், சீக்கியா்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்கும் வகையில், கடந்த 1955-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
இந்த மசோதாவை கண்டித்து சில பகுதிகளில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் காலப்போக்கில் வன்முறையாக மாறி உள்ளது. இந்தநிலையில், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக, டெல்லியில் மதுரா சாலையில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

4 பஸ்களை ஒரு கும்பல் தீவைத்து கொளுத்தியது
இதையடுத்து, பல்கலைக்கழகத்தின் அருகாமையில் இருக்கும் பிரென்ட்ஸ் காலனி பகுதியில் மற்றும் இன்னொரு இடத்தில் டெல்லி போக்குவரத்து கழகத்தின் 4 பஸ்களை ஒரு கும்பல் தீவைத்து கொளுத்தியது. இரு போலீஸ் வாகனங்கள் மற்றும் சில தனியார் வாகனங்களும் எரிக்கப்பட்டன.

தீயணைப்பு வாகனம் சேதம்
தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில், ஒரு தீயணைப்பு வாகனம் சேதமடைந்தது. 2 பேர் காயம் அடைந்தனர். போலீஸ்காரர் ஒருவரும் காயம் அடைந்தார்.

மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன
சுக்தேவ் விஹார், ஜாமியா மில்லியா இஸ்லாமியா, ஒக்ஹ்லா விஹார், ஜசோலா விஹார் ஷஹீன் பாக் ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன. மேற்கண்ட நிலையங்களில் மெட்ரோ ரெயில்கள் நிற்காது என்றும் அறிவிக்கப்பட்டது.

டெல்லியில் 144 தடை உத்தரவு
தற்போதுவரை டெல்லியின் சில பகுதிகளில் பதற்றமான நிலை நீடித்து வருகிறது. அதோடு டெல்லி செங்கோட்டை பகுதியில் போராட்டம் நடைபெற வாய்ப்பிருப்பாதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து டெல்லி காவல்துறை அதிகாரிகள் 144 தடை உத்தரவை பிறப்பித்தனர்.

ஏர்டெல் சேவை நிறுத்தம்
இந்த நிலையில், பாரதி ஏர்டெல் டெல்லியின் சில பகுதிகளில் செல்போன் அழைப்பு இணைய சேவை எஸ்எம்எஸ் ஆகிய வசதிகளை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவையடுத்து, சேவைகளை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்துள்ள ஏர்டெல் நிறுவனம் மறு உத்தரவு வந்தபின் மீண்டும் தொடங்கும் என அறிவித்துள்ளது.

வோடபோன் ஐடியா, ஜியோ சேவை நிறுத்தம்
அதேபோல் வோடபோன் ஐடியா, ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவன சேவைகளும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சேவை நிறுத்தம் குறித்து விளக்கம்
மேலும் இதுகுறித்து, அரசாங்கத்தின் உத்தரவுப்படி திட்டமிடப்பட்ட செயலிழப்பு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. அதிகாரத்திடமிருந்து அடுத்த உத்தரவைப் பெற்றவுடன் இது சரிசெய்யப்படும் என வோடபோன் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் செயலிழப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளது.


Click it and Unblock the Notifications