டிக்டாக் எடுத்த திடீர் முடிவால் 2000 பேரின் வேலை பறிபோனது.. இறுதியாக டிக்டாக் சொன்னது இது தான்..
டிக்டாக் நிறுவனத்தின் உரிமையாளர் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனம் ஹலோ போன்ற பிற பயன்பாடுகளையும் இந்தியாவில் வழங்கி வந்தது, ஆனால், கடந்த ஆண்டு இந்தியாவின் லடாக் எல்லையில் சீனா இராணுவம் அத்துமீறி எல்லை மீறல் பிரச்சனையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து 59 சீன ஆப்ஸ்கள் தடை செய்யப்பட்டது. இதில் டிக்டாக், ஹலோ போன்ற ஆப்ஸ்களும் தடை செய்யப்பட்டது.

இந்திய அரசாங்கம் விதித்த தடை
இந்திய பாதுகாப்பிற்குப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய 118 சீன ஆப்ஸ்களைத் இந்திய அரசாங்கம் தடை செய்தது. இந்த தடை தற்போது வரை நீடித்து வருகிறது. இந்த தடை எப்போது நீக்கப்படும் என்பதும் இன்னும் உறுதிப்படத் தெரியவில்லை. இந்தியாவில் இப்படி ஒரு சூழ்நிலை இருப்பதனால் ஷார் இட், யுசி பிரவுசர் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே தங்களது இந்தியக் கிளைகளை மூடிவிட்டது.

59 சீன ஆப்ஸ்களை நிரந்தரமாகத் தடை
இதனால் இந்த நிறுவனங்களில் வேலை பார்த்து வந்த ஆயிரக் கணக்கான இந்தியர்களின் வேலை பறிபோனது. இந்தியாவில் கடந்த 8 மாதங்களாகச் சீன ஆப்ஸ்களுக்கான தடை நடைமுறையில் உள்ளது. சமீபத்தில் இந்திய அரசாங்கம் மொத்தமாக 59 சீன ஆப்ஸ்களை நிரந்தரமாகத் தடை செய்யப் போவதாகச் செய்திகள் வெளியாகி வந்தது. இதனால் ரீஎன்ட்ரி கொடுக்க நினைத்த சீன நிறுவனங்களும் சற்று நடுக்கம் கண்டன.

நிரந்திர தடை பட்டியலில் டிக்டாக் நிறுவனம்
இந்த பட்டியலில் டிக்டாக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனமும் இருப்பதாகச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, இந்தியாவில் டிக் டாக் மற்றும் ஹலோ நிறுவனங்களை பைட் டான்ஸ் மூட திட்டமிட்டுள்ளது. இதைத் தெரியப்படுத்தும் விதத்தில் டிக்டாக் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் ஹலோ நிறுவனத்தின் ஊழியர்களுக்கு பைட் டான்ஸ் ஒரு அறிவிப்பு ஈமெயிலை அனுப்பியுள்ளது.

டிக்டாக் நிறுவனம் இறுதியாக சொன்னது இது தான்
பைட் டான்ஸ் அனுப்பிய ஈமெயிலில் குறிப்பிட்டிருந்தது, 'இந்திய அரசாங்கம் எப்போது டிக்டாக்-கை நாட்டில் பயன்படுத்த அங்கீகரிக்கும் என்று சரியாகத் தெரியவில்லை. எதிர்பார்த்ததை விடக் கால அளவு அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது, இதனால் இந்தியக் கிளையை மூடுகிறோம். மீண்டும் விரைவில் இந்தியாவில் சேவையைத் துவங்குவோம் என்று நம்புகிறோம்" என்று கூறியுள்ளது.

2000 ஊழியர்களின் வேலை ஒரே நாளில் பறிபோனது
பைட் டான்ஸ் நிறுவனத்தின் இந்த தீடீர் முடிவால், டிக்டாக் மற்றும் ஹலோ நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த 2000 ஊழியர்களின் வேலை ஒரே நாளில் பறிபோனது. இந்த தீடீர் முடிவால் ஊழியர்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு இழப்பீட்டையும் பைட் டான்ஸ் வழங்கும் என்றும் நிறுவனம் இப்போது தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications