Budget 2025: அரசு பள்ளிகள் அடியோடு மாறுது.. 50 ஆயிரம் அடல் டிங்கரிங் லேப்கள்.. பிராட்பேண்ட் கனெக்டிவிட்டி!
மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இன்றைய சூழலுக்கு ஏற்ப அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன. அடல் டிங்கரிங் லேப்கள், டிஜிட்டல் புத்தகங்கள் மற்றும் பிராட்பேண்ட் கனெக்டிவிட்டி மூலம் அரசு பள்ளிகளில் இன்டர்நெட் சேவை போன்ற பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. இதுபோக ஏஐ சென்டர்கள் இருக்கிறது. இந்த அறிவிப்புகள் குறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் இருக்கும் அரசு பள்ளிகளில் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 50,000 அடல் டிங்கரிங் லேப்கள் (Atal Tinkering Labs) உருவாக்கப்பட இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருக்கிறார். இந்த லேப்கள் மூலம் பள்ளி மாணவ, மாணவிகளின் எஸ்டிஎம் (STEM) என்று அழைக்கப்படுகிற அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த அறிவு மேம்படுத்தப்படும்.

இதற்கான டூல்ஸ் மற்றும் எக்யூப்மென்ட்கள் அடல் டிங்கரிங் லேப்களில் இடம்பெற்று இருக்கும். ஆகவே, மாணவர்கள் அறிவியல், மின்னணுவியல், ரோபாட்டிக்ஸ், ஒப்பன்-சோர்ஸ் மைக்ரோ கன்ட்ரோலர்கள், சென்சார்கள், 3டி பிரிண்டர்கள், கம்ப்யூட்டர் போன்றவற்றை பற்றி படிப்பது மட்டுமல்லாமல், அதை பயன்படுத்தல், உருவாக்கல் ஆகியவற்றை பிராக்டிகலாக செய்ய முடியும்.
இப்படி ஏராளமான தொழில்நுட்பம் சார்ந்த கற்றலை இந்த அடல் டிங்கரிங் லேப்கள் வழங்க இருக்கின்றன. தமிழ்நாட்டிலும் இந்த அடல் டிங்கரிங் லேப்கள் இருக்கின்றன. இப்போது, 50,000 அடல் டிங்கரிங் லேப்கள் வர இருக்கின்றன. இதுபோக அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பிராட்பேண்ட் கனெக்டிவிட்டி வழங்கப்படும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருக்கிறார்.
ஆகவே, நாடு முழுவதும் இருக்கும் ஒட்டுமொத்த அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் பிராட்பேண்ட் மூலம் இன்டர்நெட் சேவை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்து இருக்கிறார். பார்நெட் திட்டம் (Bharatnet Project) மூலம் ஏற்கனவே இன்டர்நெட் கிடைக்காத தொலைத் தூரப்பகுதிகள் மற்றும் கிராமங்களுக்கு பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவை உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.
இப்போது, அதேபோல குக்கிராமங்களிலும் இருக்கும் பள்ளிகளுக்கு பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவையை கொண்டு சென்று, மாணவர்களின் கற்றல் திறனை டிஜிட்டலாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதன்படியே அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பாரத்நெட் திட்டம் மூலம் இன்டர்நெட் சேவை வழங்க இருக்கிறது. மேலும், கல்வியில் ஏஐ மேம்பாட்டுக்கும் அறிவிப்பு உள்ளது.
அதாவது, கல்வித்துறைக்காக செயற்கை நுண்ணறிவில் சிறப்பு மையம் (Centre of Excellence in Artificial Intelligence) உருவாக்கப்பட இருக்கிறது. இதற்காக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவரது பட்ஜெட்டில் உரையில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்து இருக்கிறார். மேலும், பாரதிய பாஷா புஸ்தக் திட்டத்தை (Bharatiya Bhasha Pustak Scheme) பட்ஜெட் 2025-இல் (Budget 2025) அறிவித்துள்ளார்.
இந்த திட்டம் மூலம் இந்திய மொழிகளில் டிஜிட்டல் வடிவ புத்தகங்கள் உருவாக்கப்படும். இதன் மூலம் மாணவர்கள் எளிதாக பாடங்களை புரிந்து கொள்ளவும், உயர்கல்விக்கு ஏற்றவாறு இப்போதில் இருந்து டிஜிட்டல் புத்தங்களை அனுகவும் உதவிபுரிய முடியும். இவ்வாறான கல்வி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications