செப்.30 தான் கடைசி.. அதுக்குள்ள செஞ்சிடுங்க.. இல்லனா? கஸ்டமர்களுக்கு கெடு வைத்த BSNL.. என்ன செய்யணும்?
பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட், தனது வாடிக்கையாளர்களுக்கு "குறிப்பிட்ட ஒரு விஷயத்தை" செய்வதற்காக வருகிற செப்டம்பர் 31 ஆம் தேதியை கெடு நாளாக அறிவித்துள்ளது. அதென்ன விஷயம்? அதை செய்யாவிட்டால் என்னவாகும்? இதோ விவரங்கள்:
பிஎஸ்என்எல் நிறுவனம் விடுத்துள்ள இந்த கெடுவிற்கு பின்னால் இருப்பது டிஜிட்டல் கேஒய்சி செயல்முறை (Digital KYC Process) தான். இதை நீங்கள் ஏற்கனவே செய்யவில்லை என்றால் அதை செப்.31 க்கும் செய்து முடிக்குமாறு பிஎஸ்என்எல் நிறுவனம் தனது கஸ்டமர்களிடம் கேட்டு கொண்டுள்ளது.

அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த டெலிகாம் நிறுவனமானது பேப்பர் அப்ளிகேஷன் (Paper Application) மூலம் தங்கள் சிம்களை செயல்படுத்திய வாடிக்கையாளர்களை, டிஜிட்டல் கேஒய்சி செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது. பிஎஸ்என்எல் தனது 4ஜி சேவையை அறிமுகப்படுத்தும் பணியில் இதுவும் ஒரு முக்கியமான விஷயமாகும்.
இதை செய்ய பிஎஸ்என்எல் சிம் கார்டுகளை பயன்படுத்தும் பயனர்கள், தங்கள் வீடுகளுக்கு அருகில் அல்லது ஊர்களில் உள்ள பிஎஸ்என்எல் கஸ்டமர் கேர் மையம் (BSNL customer care center) அல்லது ஃபிரான்ச்சீஸ் ரீடெய்லர் (Franchisee retailers) கடைகளுக்கு சென்று டிஜிட்டல் கேஒய்சி செயல்முறையை செய்து முடிக்கலாம்.
டிஜிட்டல் கேஒய்சி செயல்முறையை செய்ய ஆதார் அட்டை (Aadhaar Card) மிகவும் முக்கியம் என்பதால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் பராமரிப்பி மையங்களுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் அட்டையை மறக்காமல் எடுத்து செல்லவும். இதை செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30, 2023 தான் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது
100% டிஜிட்டல் மயமாக்கலில் (100% Digitisation) மத்திய அரசு புதிய விதிமுறைகளை (New Norms) அறிமுகப்படுத்தி உள்ளதால் டிஜிட்டல் கேஒய்சி என்பது "கிட்டத்தட்ட" எல்லா இடங்களிலுமே மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகி விட்டது. கூடவே இது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.
தி இந்து நாளிதழில் வெளியான அறிக்கையின்படி, பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு மாவட்ட முதன்மை பொது மேலாளர் பி.பால் வில்லியம், இந்தியா முழுவதும் 4ஜி சேவையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். பல வாடிக்கையாளர்கள் இன்னும் 3ஜி-ஒன்லி சிம்களில் 3ஜி நெட்வொர்க் சேவைகளை பயன்படுத்துவதால், 4ஜி அறிமுகப்படுத்தப்பட்டவுடன் சேவைகளில் குறுக்கீடுகளை சந்திக்க நேரிடும்.
இவ்வகை வாடிக்கையாளர்களுக்கு எந்த சிக்கலும் ஏற்படாமல் இருக்க, அவர்கள் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு முன் இலவசமாக 4ஜி சிம்களுக்கு மேம்படுத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். 4ஜி சிம்களுக்கு அப்கிரேட் ஆன பிறகு, பிஎஸ்என்எல் பயனர்கள் எங்கிருந்தாலும் தடையற்ற நெட்வொர்க் சேவைகளை பெறுவார்கள்.
கூடிய விரைவில் நடக்கவுள்ள 4ஜி அறிமுகத்தை (4G Launch) மையமாக கொண்டே அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த தொலைத்தொடர்பு நிறுவனம், தனது வாடிக்கையாளர்களை டிஜிட்டல் கேஒய்சி செய்து, வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் 4ஜி சிம்களுக்கு தங்களை மேம்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொண்டுள்ளது.
இந்த இடத்தில், சிம் கார்டுகளுக்கு வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பிஎஸ்என்எல் சரியாக எந்த தேதியில் 4ஜி-ஐ அறிமுகம் செய்யும் என்கிற தகவல் எதுவும் கிடைக்கவில்லை; ஆனால் அது கூடிய விரைவில் நடக்கும் என்பதற்கு இந்த டிஜிட்டல் கேஒய்சி செயல்முறைக்காக கெடு நாள் ஒரு நல்ல சாட்சியாகும்.
ஆக பிஎஸ்என்எல் நிறுவனமானது இந்தியாவின் பல பகுதிகளில் உள்நாட்டில் உருவான 4ஜி சேவையை வெளியிடப் போகிறது. ஒருவழியாக பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் அதிவேக நெட்வொர்க் சேவைகளை அனுபவிக்க போகிறார்கள். பிஎஸ்என்எல் செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் 300 தளங்களில் 4ஜியை வெளியிட திட்டமிட்டுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








