விற்பனைக்கு BSNL! இது வெறும் ஆரம்பம் தான்.. அடுத்த 2025-க்குள்ள?
BSNL நிறுவனத்தின் சமீபத்திய நடவடிக்கை ஒன்றை கேள்விப்பட்டதுமே.. "அந்த 4 பேர் நல்லா இருக்கணும்னா.. இந்த 10,000 முக்கியம் இல்லயோ!" என்றே தோன்றியது!

யார் அந்த 4 பேர்?
"யார் அந்த 4 பேர்?" என்று மட்டும் கேட்டு விடாதீர்கள்! எங்களால் அதை வெளிப்படையாக சொல்ல முடியாது.
வேண்டுமானால் "முக்கியம் இல்லாத அந்த 10,000"-ஐ பற்றி நாங்கள் விளக்கமாக கூறுகிறோம்.. அதன் வழியாக யார் அந்த 4 பேர் என்பதை நீங்களே புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்!

முக்கியம் இல்லாத அந்த 10,000!
மத்திய அரசுக்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ஆனது, நேஷனல் மானிடைசேஷன் பைப்லைனின் (National Monetisation Pipeline - NMP) ஒரு பகுதியாக மத்திய அரசு வகுத்துள்ள "இலக்குகளை" அடைய, 10,000 மொபைல் டவர்களை விற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது!

10 ஆயிரத்துக்கு... வரும் 4 ஆயிரம் கோடி!
BSNL நிறுவனத்தின் 10,000 மொபைல் டவர்களை விற்பதன் வாயிலாக, மத்திய அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. இப்போது உங்களுக்கே புரிந்து இருக்கும் - யார் அந்த 4 பேர்? என்று!
அறியாதோர்களுக்கு, தற்போது பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் நாடு முழுவதும் 68 ஆயிரம் டெலிகாம் (மொபைல்) டவர்கள் உள்ளன. அதில் 10,000 டவர்கள் (முதல் கட்டமாக) விற்பனை செய்யப்பட உள்ளன!

யார் வாங்குவார்கள்? வேற யாரு!
இந்த கேள்வியை பச்சை குழந்தையிடம் கேட்டாலும் கூட சரியாக பதில் சொல்லும்! "வேற யாரு? ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் தான்!
குறிப்பிட்ட 10,000 டவர்களும், ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற "மூன்றாம் தரப்பு நிறுவனங்களுடன்" டெலிகாம் இணை இருப்பிட ஏற்பாட்டுடன் (Telecom co-location arrangement) விற்கப்படும்.

இந்த விற்பனை 10,000 டவர்களோடு நிற்காது!
ஏனெனில், தேசிய பணமாக்குதல் திட்டத்தின் (National Monetisation Pipeline) கீழ், BSNL-க்கு சொந்தமான 13,567 மொபைல் டவர்கள் வருகிற 2025 ஆம் ஆண்டுக்குள் விற்கப்பட உள்ளது.
அதாவது முதற்கட்டமாக விற்பனை செய்யப்பட உள்ள 10,000 டவர்களை தொடர்ந்து கூடுதலாக 3,567 மொபைல் டவர்களும் - விரைவில் - விற்பனை செய்யப்படும் !

BSNL டவர்கள் மட்டும் அல்ல.. MNTL டவர்களும் தான்!
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் டவர்களை மட்டுமின்றி, மும்பை மற்றும் டெல்லியில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் MTNL-க்கு சொந்தமான 1350 டெலிகாம் டவர்களும் கூட விற்பனை செய்யப்பட உள்ளது.
இப்படியாக, இந்த இரு டெலிகாம் நிறுவனங்களின் 14,917 டெலிகாம் டவர்கள் படிப்படியாக விற்பனை செய்யப்படும்.

Bharat Broadbrand Network கம்பெனி உடன் இணைய உள்ள BSNL!
பிஎஸ்என்எல் நிறுவனம் நஷ்டத்தில் உள்ள நிலையில், பிஎஸ்என்எல்-இன் தொலைபேசி சேவையை மத்திய அரசு தொடரும் பட்சத்தில், இந்நிறுவனம் பாரத் பிராட்பிராண்ட் நெட்வொர்க் நிறுவனத்துடன் இணையும் வாய்ப்பும் உள்ளது!
இந்த இரண்டு நிறுவனங்களின் "இணைப்பானது" கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கு மிகவும் திறமையான தொலைபேசி மற்றும் இணைய சேவைகளை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது!

BSNL 5G - அது எத்தனை கிமீ-க்கு அங்குட்டு இருக்கோ?!
ஐடி அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்வின் சமீபத்திய கூற்றுப்படி, BSNL நிறுவனத்தின் 5G சேவையானது வருகிற 2023 ஆம் ஆண்டில் அறிமுகமாகும்.


Click it and Unblock the Notifications