ரூ.400 க்கு தனியார் பிராட்பேண்ட்களின் சோலிய முடிச்ச BSNL.. 50Mbps ஸ்பீடில் 3.3TB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ்!
பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் ஆனது - இந்திய அரசின் கீழ் செயல்பட்டாலும் கூட.. இதோடு போட்டிபோட ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் நிறுவனங்கள் இருந்தாலும் கூட, இது இந்தியாவின் சிறந்த பிராட்பேண்ட் சேவை வழங்குநர்களில் ஒன்றாக உள்ளது
காரணம் - இந்நிறுவனம் இந்தியாவில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் பிராட்பேண்ட் (ஃபைபர்) சேவையை வழங்குகிறது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் போட்டிக்கு வருவதற்கு முன்னர், பிஎஸ்என்எல் அளவுக்கு பல பகுதிகளில் பிராட்பேண்ட் சேவையை வழங்கும் வேறு எந்த நிறுவனமும் நாட்டில் இல்லை.

தற்போது, பிஎஸ்என்எல்-க்கு போட்டியாக ஜியோ, ஏர்டெல் மட்டுமின்றி பல பிராந்திய நிறுவனங்களும் உள்ளன. இருப்பினும், பிராட்பேண்ட் சேவைகள் பிரிவில், குறிப்பாக கிராமப்புறங்களில், பிஎஸ்என்எல் தனது முக்கிய இடத்தை தக்க வைத்து கொண்டே தான் இருக்கிறது. பிஎஸ்என்எல்-இன் கீழ் பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் (பிபிஎன்எல்) இருப்பதால், பாரத்நெட் திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பும் இந்த அரசு தொலைத்தொடர்பு நிறுவனத்திடமே உள்ளது.
அப்படியாக இங்கே பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கீழ் கிடைக்கும் மிகவும் மலிவான 50 எம்பிபிஎஸ் திட்டத்தை பற்றித்தான் விரிவாக பார்க்க உள்ளோம்.. இந்த திட்டத்தின் மாதக் கட்டணம் வெறும் ரூ.399 மட்டுமே ஆகும். இந்த திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது? என்பதை பற்றி இங்கே விரிவாக பார்ப்போம்.
பிஎஸ்என்எல் ரூ.399 பிராட்பேண்ட் திட்டத்தின் நன்மைகள்: பிஎஸ்என்எல்-இன் ரூ.399 பிராட்பேண்ட் திட்டம் 'ஸ்பார்க் திட்டம்' (Spark Plan) என்று அழைக்கப்படுகிறது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட பிராந்தியங்களில் உள்ள பயனர்கள் மட்டுமே பெறக்கூடிய ஒரு திட்டம் ஆகும். பிஎஸ்என்எல்-இன் ரூ.399 பிராட்பேண்ட் திட்டம், பயனர்களுக்கு 50 எம்பிபிஎஸ் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற வேகத்தை வழங்குகிறது.
இந்த திட்டம் மாதத்திற்கு 3.3டிபி டேட்டா மற்றும் வரம்பற்ற வாய்ஸ் காலிங் வசதியையும் வழங்குகிறது. வரம்பற்ற வாய்ஸ் காலிங் வசதியை பெற, பயனர்கள் தங்களுக்கென ஒரு லேண்ட்லைன் டிவைஸை வைத்திருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். அழைப்புகள் இலவசமாக வழங்கப்படும், இருப்பினும், பயனர்களுக்கு லேண்ட்லைன் சாதனத்தை வழங்கும் பொறுப்பை பிஎஸ்என்எல் ஏற்காது.
முதல் 12 மாதங்களுக்குப் பிறகு, இந்த ரூ.399 திட்டம் மாதத்திற்கு ரூ.449 என்ற விலையில் கிடைக்கும். இந்த திட்டம் 3.3டிபி டேட்டா பயன்பாடு வரை 50 எம்பிபிஎஸ் வேகத்தை வழங்கும், அதன் பிறகு வேகம் 4 எம்பிபிஎஸ் ஆக குறைந்துவிடும். இறுதி பில்லில் ஜிஎஸ்டி (18%) சேர்க்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும், எனவே இந்த திட்டத்திற்காக நீங்கள் செலுத்த வேண்டிய மொத்த தொகை மாதத்திற்கு தோராயமாக ரூ.471 ஆக இருக்கும். மிகவும் மலிவானதிட்டம் என்பதால், ரூ.399-ன் கீழ்ஐபிடிடி (IPTV) அல்லது ஓடிடி (OTT) எந்த எந்த கூடுதல் நன்மைகளும் இல்லை.
பிஎஸ்என்எல் தொடர்பான மற்ற லேட்டஸ்ட் அப்டேட்களை பொறுத்தவரை, இந்நிறுவனம் அதன் நுகர்வோருக்கான சிம் முன்பதிவு செயல்முறையை (SIM booking process) எளிதாக்கி உள்ளது. தற்போது நுகர்வோர்கள் சிம் கார்டு பெறுவதற்காக பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியிருந்தது / செல்ல வேண்டியுள்ளது.
இருப்பினும், பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய முறையின் மூலம் அந்த நிலை மாறுகிறது. இது மிகவும் எளிமையானதாகவும், புதிய சிம் கார்டு பெறுவது பற்றி அதிகம் தெரியாத ஒருவரால் கூட எளிதாக ஒன்றை பெற முடியும்படியும் உள்ளது. எல்லாவற்றை விட முக்கியமாக இது அனைத்தும் பயனரின் மொபைல் போன் மூலமாகவே செய்யப்படுகிறது.
பிஎஸ்என்எல்-ன் புதிய சிம் புக்கிங் செயல்முறை: பிஎஸ்என்எல் சிம் கார்டு இனி க்யூஆர் குறியீடு மூலமாக மட்டுமே பெற முடியும். மேலே உள்ள படத்தில் இருக்கும் க்யூஆர் கோட்-ஐ பாருங்கள், அதை ஸ்கேன் செய்து, கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும். சிம் கார்டு பெற நீங்கள் மேலே உள்ள க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வது வழியாக மட்டுமின்றி நீங்கள் sahaj.bsnl.co.in/skyc என்ற இணையதளத்திற்கும் செல்லலாம்.
மேற்குறிப்பிட்ட வலைத்தளம் தற்போது உத்தர பிரதேச கிழக்கு தொலைத்தொடர்பு வட்டத்தில் செயல்பாட்டில் உள்ளது. பிஎஸ்என்எல் இ-கேஒய்சி போர்டல் ஆனது மிகவும் எளிமையாக கேஒய்சி செய்ய உங்களுக்கு உதவும். தற்போது, நீங்கள் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கடைக்கு சென்று விவரங்களை பூர்த்தி செய்து, நேரில் கேஒய்சி செய்த பின்னரே சிம் கார்டை பெற முடியும். ஆனால் இப்போது, பிஎஸ்என்எல் இந்த செயல்முறையை மிகவும் எளிதாக்குகிறது. இருப்பினும், நீங்கள் நேரில் சென்று தான் சிம் கார்டை பெற வேண்டும்.


Click it and Unblock the Notifications