BSNL-ன் அடுத்த சிக்ஸர்.. செப்.27-ஐ 4G-க்கு குறிச்ச கையோடு 5G அறிமுகம் குறித்து முக்கிய தகவல் வெளியானது! | BSNL
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை ஆனது பான்-இந்தியா அடிப்படையில் வருகிற செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியான வேகத்தில்.. பிஎஸ்என்எல் 5ஜி அறிமுகம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆபரேட்டர் ஆன பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ஆனது இந்த காலண்டர் ஆண்டின் இறுதிக்குள், அதாவது 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாட்டில் உள்ள முக்கிய பெருநகரங்களில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தும் என்று பிஎஸ்என்எல்-ன் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கூறப்படும் மெட்ரோ நகரங்கள் - மும்பை மற்றும் டெல்லி ஆக இருக்கலாம். புகழ்பெற்ற நெட்வொர்க் புலனாய்வு அமைப்புகளில் இருந்து கிடைத்த தரவுகளின்படி, நெட்வொர்க் அனுபவத்தில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை பிஎஸ்என்எல் இன்னும் நெருங்க கூட இல்லை. இந்நிலையில் 5ஜி அறிமுகம் குறித்த பேச்சு ஏன் திடீரென்று வருகிறது? என்கிற விமர்சனங்களும் ஒருபக்கம் எழுகிறது.
இந்த இடத்தில் இந்திய அரசாங்கம் ஆனது நிவாரண தொகுப்புகள் (relief packages) மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கான 4ஜி ஸ்பெக்ட்ரத்தை (4G spectrum) ஒதுக்கியது என்பதும், நாட்டில் 700 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசையில் 4ஜி (4G on the 700 MHz band) வழங்கும் ஒரே தொலைத்தொடர்பு ஆபரேட்டர் பிஎஸ்என்எல் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
"இப்போது ஏன்?" என்கிற கேள்வியுடன் சேர்த்து "சரி, இப்போது இல்லையென்றால், எப்போது?" என்கிற கேள்வியும் எழுகிறது. ஒருவேளை, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி வெளியீடு ஆனது 5ஜி அறிமுகத்திற்கான ஒரு முக்கிய படிக்கல்லாக இருக்கலாம். ஆனால் 5ஜி டொமைனில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் போட்டியிடுவதே பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நீண்டகால இலக்காக இருக்க வேண்டும். அப்போது டெலிகாம் சந்தையில் போட்டி சூடுபிடிக்கும்!
முன்னரே குறிப்பிட்டபடி பிஎஸ்என்எல் நிறுவனமானது வருகிற செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று பான் இந்தியா அடிப்படையிலான 4ஜி சேவையை (PAN India 4G Service) தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. அங்குமிங்குமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க் ஆனது செப்டம்பர் 27 முதல் இந்தியா முழுவதுமாக அறிமுகம் செய்யப்படும்.
இந்த தகவலை, பாரத் டிஜிட்டல் இன்ஃப்ரா உச்சி மாநாடு 2025 இல் பேசிய போது, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநரும் ஆன ஏ. ராபர்ட் ஜே. ரவி உறுதிப்படுத்தி உள்ளார். அடுத்த ஒரு வருடத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஏஆர்பியு (ARPU) ஆனது அதாவது ஒரு பயனருக்கு சராசரி வருவாய் (Average revenue per user) 50% அதிகரிக்க வேண்டும் என்றும், நிறுவன வணிகம் 25-30% அதிகரிக்க வேண்டும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,
மேற்கூறிய இலக்கை அடைய வேண்டுமென்றால் பிஎஸ்என்எல் நிறுவனம் மிகவும் வேகமாக செயல்பட வேண்டும். குறிப்பாக முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ மற்றும் சுனில் மிட்டல் தலைமையிலான ஏர்டெல் ஆகிய இரண்டுமே "கிட்டத்தட்ட"இந்தியா முழுவதும் தத்தம் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்துவிட்டதால்.. 5ஜி அறிமுகம் விஷயத்தில் பிஎஸ்என்எல் ஆனது மிகவும் விரைவாக செயல்பட வேண்டியது அவசியம்.
ஆனால் இலக்கை நிர்ணயம் செய்வதும், அதை அடைய முடியாமல் தோற்று போவதும் பிஎஸ்என்எல்-க்கு புதிது அல்ல. 2025 ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் இந்தியா முழுவதும் ஒரு லட்சம் தளங்களில் 4ஜி-ஐ அறிமுகப்படுத்துவதாக தொலைத்தொடர்பு நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் ஆகஸ்ட் 15 க்கு பின் அதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாததால், குறிப்பிட்ட இலக்கை பிஎஸ்என்எல் நிறுவனத்தால் அடைய முடியவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.


Click it and Unblock the Notifications








