5G தான் தர முடியல.. இந்தாங்க 75GB டேட்டா! BSNL நிறுவனத்தின் பெரிய மனசு!
"பெரிய மனசு" என்றதும் BSNL நிறுவனம் இலவச டேட்டாவை வழங்குகிறது என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்.
தன் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக மொபைல் டேட்டாவை.. அதுவும் 75GB அளவிலான டேட்டாவை வழங்கும் இடத்தில் பிஎஸ்என்எல் இருந்தால்.. இந்நேரம் 4G என்ன, 5G சேவையே அறிமுகமாகி இருக்கும்.
இப்படி 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் கூட கலந்துகொள்ள முடியாத நிலையில் இருந்திருக்காது. ஆனாலும் கூட BSNL-இன் மனசு இருக்கே.. அது ரொம்ப பெருசு!

அதற்கு.. 75GB-ஐ வழங்கும் இந்த புதிய பிளான் தான் சாட்சி!
BSNL என்று நன்கு அறியப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) அதன் பயனர்களுக்காக ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
அந்த புதிய பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தின் முக்கியமான 2 சிறப்பம்சங்கள் என்னவென்றால், அது 300 நாட்கள் என்கிற வேலிடிட்டியை தருகிறது மற்றும் 75 ஜிபி அளவிலான டேட்டாவையும் தருகிறது.

என்ன விலை?
நாம் இங்கே பேசும் புதிய ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.2022 ஆகும். இதன் கீழ் பயன்படுத்த கிடைக்கும் 75ஜிபி டேட்டாவானது, இந்த திட்டம் செல்லுபடியாகும் முதல் 60 நாட்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அப்போது 60 நாட்களுக்கு பிறகு?
முதல் 60 நாட்களுக்குள் நீங்கள் "அந்த" 75ஜிபி டேட்டாவை தீர்த்து விட்டால், அதன் பின்னர் உங்களுக்கு 40 Kbps என்கிற வேகத்தின் கீழ் இன்டர்நெட் சேவை தொடர்ந்து அணுக கிடைக்கும்.
ஆனால் முதல் 60 நாட்களுக்கு பிறகு, உங்களுக்கு டேட்டா நன்மைகள் வேண்டும் என்றால், நீங்கள் BSNL நிறுவனத்தின் டேட்டா வவுச்சர்களில் ஏதேனும் ஒன்றை சார்ஜ் செய்ய வேண்டி இருக்கும்.
டேட்டா நன்மைகளை எதிர்பார்ப்பவர்களுக்கு நிச்சயம் இதுவொரு சிக்கலாக இருக்கலாம். ஆனால் நீண்ட வேலிடிட்டி என்று வரும் போது நாம் சில தியாகங்களை செய்துதான் ஆக வேண்டும்.

ஆனால் வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ்-இல் எந்த தியாகமும் செய்ய வேண்டாம்!
ஏனெனில் ரூ.2022 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் இந்த புதிய பிஎஸ்என்எல் பிளான் ஆனது அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது. இந்த இரண்டு நன்மைகளும் 300 நாட்களுக்கும் செல்லுபடியாகும்.
ரூ.2022 திட்டமானது குறுகிய காலத்தில் அதிக டேட்டாவை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கும், ஒரே ரீசார்ஜில் நீண்ட செல்லுபடியாகும் காலத்தை "முக்கிய தேவையாக" கொண்ட BSNL பயனர்களுக்கும் மிகவும் பொருத்தமான ஒரு திட்டம் ஆகும்.

இதேபோல இன்னும் 2 திட்டங்களும் இருக்கு!
அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல், இன்னும் இரண்டு "வெயிட்டான" வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களையும் தன்வசம் கொண்டு உள்ளது. அது ரூ.3,299 மற்றும் ரூ.2,299 ஆகும்.
ரூ.3,299 ஐ பொறுத்தவரை, இது மாதத்திற்கு 2.5ஜிபி அளவிலான டேட்டாவை மொத்தம் 12 மாதங்களுக்கு வழங்குகிறது. மறுகையில் உள்ள ரூ.2,299 ப்ரீபெய்ட் திட்டமானது, செல்லுபடியாகும் 12 மாதங்களுக்கும், ஒவ்வொரு மாதமும் 1.5 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.
இந்த பட்டியலில் ஒரு போனஸ் பிளான் ஆக.. ரூ.1,251 ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றியும் சொல்லி விடுகிறோம். இதுவும் 12 மாதங்களுக்கு செல்லுபடியாகும்; ஆனால் மாதத்திற்கு 0.75 ஜிபி அளவிலான டேட்டாவை மட்டுமே வழங்கும்.

எல்லாமே ரூ.1000, ரூ.2000 தானா? ரூ.250 குள்ள எந்த ரீசார்ஜும் இல்லையா?
இருக்கு! சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அது ரூ.228 மற்றும் ரூ.239 ஆகும்.
ரூ.228-ஐ பொறுத்தவரை, இது ஒரு நாளைக்கு 2 ஜிபி அளவிலான டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை வழங்குகிறது.
மறுகையில் உள்ள ரூ.239 திட்டமானது. மேலே குறிப்பிடப்பட்ட எல்லா நன்மைகளையும் (அதாவது ஒரு நாளைக்கு 2 ஜிபி அளவிலான டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களை) வழங்குகிறது. கூடுதலாக ரூ.10 டாக் டைமையும் வழங்குகிறது.

5G ஏலத்தில் பங்கு கொள்ளாத BSNL!
உங்களில் பலருக்கும் தெரிந்து இருக்கலாம் சமீபத்தில் தான் தொலைத்தொடர்புத் துறை (DoT) இந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தை நடத்தியது.
அதில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். ஆனால் அரசாங்கத்திற்கு சொந்தமான BSNL கலந்துகொள்ளவில்லை.
ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ போன்ற நிறுவனங்கள் இந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தத்தம் 5ஜி நெட்வொர்க்குகளை பயன்படுத்தத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் 15-இல் ஜியோ 5ஜி சேவை!
சமீபத்திய தகவல் ஒன்று, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று நாட்டில் அதன் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்கிறது. ஆனால் அது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
மறுகையில் உள்ள பார்தி ஏர்டெல் நிறுவனம் இந்த ஆகஸ்ட் மாதமே அதன் 5ஜி சேவைகளை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications