கொடி பறக்குதா.. கம்மி விலையில் சிம் இல்லா 5G சேவையை கொண்டுவந்த BSNL.. தம்பி ஜியோ ஓரம்போ..
ஜியோ (jio), ஏர்டெல் (airtel) நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனம். இந்நிலையில் தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் 5ஜி சேவை பிரிவில் களமிறங்கி உள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது இப்போது 100 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கருவி மூலம் 5ஜி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் ஜியோ, ஏர்டெல் கருவிகள் போல் இல்லாமல் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கருவி சிம் இல்லாமலேயே வயர்லெஸ் மூலம் 5ஜி சேவையை வழங்க உள்ளது.

குவாண்டம் 5ஜி எஃப்டபிள்யுஏ (Quantum 5G FWA)
ஒரு காலத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் டெலிகாம் சேவையிலும், இன்டர்நெட் சேவையிலும் கொடிக்கட்டி பறந்த நிலையில், தனியார் துறையின் ஆதிக்கம் காரணமாக மிகவும் மோசமான நிதி நெருக்கடியில் சிக்கியது. அதன்பின்பு மத்திய அரசின் தொடர் நிதியுதவியும், பல கட்ட மறுசீரமைப்பு திட்டத்தின் வாயிலாகவும், டிசிஎஸ் மூலம் கிடைத்த தொழில்நுட்ப உதவிகள் மூலம் பிஎஸ்என்எல் தற்போது 4ஜி சேவையைத் தொடர்ந்து குவாண்டம் 5ஜி எஃப்டபிள்யுஏ (Quantum 5G FWA) சேவையை அறிமுகம் செய்துள்ளது.
தற்போது இந்த குவாண்டம் 5ஜி எஃப்டபிள்யுஏ சேவை தான் ஹைதராபாத்தில் முதல் முறையாக சோதிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆத்மநிர்பர் பாரத் முயற்சியின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த அதிநவீன புதிய தொழில்நுட்பம் ஆனது வீடுகள், MSME நிறுவனங்கள், ஸ்மார்ட் தொழிற்சாலைகளுக்கு அதிவேக இணையத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சோதனை எங்கு நடந்தது?
சமீபத்தில் ஹைதராபாத்தின் அமீர்பேட்டில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த சேவை 980 Mbps டவுன்லோடு வேகம், 140 Mbps அப்லோடு வேகம், மற்றும் 10 மைக்ரோ நொடிக்கும் குறைவான தாமதத்தை (latency) பதிவு செய்தது என்று தகவல் வெளியானது. குறிப்பாக இது அல்ட்ரா-ஹை-டெஃபினிஷன் (UHD) ஸ்ட்ரீமிங், கிளவுட் கேமிங், மற்றும் ஹைப்ரிட் பணியாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் பிஎஸ்என்எல் உருவாக்கியுள்ள இந்த புதிய கருவியில் சிம் அல்லாத காரணத்தால், இதை ஆன் செய்யப்பட்ட உடன் மொபைல் நெட்வொர்க் மூலம் சப்ஸ்கிரைபர்களை உறுதி செய்த பின்பு பிஎஸ்என்எல் 5ஜி நெட்வொர்க்கில் தானாக இணைக்கப்படும். குறிப்பாக இதற்கு எவ்விதமான கேபிள் இணைப்பும் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி சேவை இப்போது ஹைதராபாத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், வரும் செப்டம்பர் 2025-க்குள் பெங்களூரு, புதுச்சேரி, விசாகப்பட்டினம், புனே, குவாலியர், மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் சோதனைகளை விரிவாக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குவாண்டம் 5ஜி FWA அறிமுக கட்டணங்கள் கூட தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி ரூ.999க்கு 100Mbps அதிவேக இணைய சேவையைப் பெறமுடியும். மேலும் ரூ.1499க்கு 300Mbps வேகத்தில் இணைய சேவையைப் பெறமுடியும். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த கட்டணங்கள் ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் நிறுவனங்களுடன் சற்று குறைவாகப் போட்டியிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதுவும் கிராமப்புற மற்றும் சிறு நகரங்களில் இருக்கும் மக்களை குறிவைத்து குவாண்டம் 5ஜி FWA சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த 5ஜி சேவைக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications