பிஎஸ்என்எல் அதிரடி திட்டம்: ரூ.96 விலையில் நாள் ஒன்றிற்கு 10ஜிபி டேட்டா!
இந்திய அரசுக்குச் சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம், அதன் 4ஜி சேவை இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் துவங்குவதற்காகப் பலகட்ட சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் எப்போது இந்த 4ஜி சேவை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் பயனர்கள் காத்திருக்கின்றனர். காத்திருந்தவர்களுக்கு இந்த செய்தி நிச்சயம் மகிழ்ச்சியை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.

4ஜி சேவைக்கான சோதனை
சென்னை உட்படக் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் போன்ற பல்வேறு நகரங்களில் தனது 4ஜி சேவைக்கான சோதனையைச் பிஎஸ்என்எல் நிறுவனம் செய்து வருகிறது. ஆனால் கொல்கத்தாவில் உள்ள பரா பஸார், எஸ்ப்ளேனேட் மற்றும் ஹூக்லி பிரிட்ஜ் போன்ற பகுதிகளில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய சிம் கார்டுகளை விநியோகம் செய்யும் பிஎஸ்என்எல்
மேலும், பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த பகுதிகளில், புதிய 4ஜி சிம் கார்டுகளையும் விநியோகம் செய்து வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் முந்தைய 2ஜி மற்றும் 3ஜி பயனர்கள், 4ஜி சேவையைப் பயன்படுத்த தங்களின் சிம் கார்டுகளை மாற்றம் செய்ய வேண்டும் என்பது கட்டாயம். ஆகையால் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளரும் அதிவேக டேட்டா சேவைக்கான புதிய சிம் கார்டுகளை கொல்கத்தா பகுதியில் வழங்கி வருகிறது.

நாள் ஒன்றிற்கு 10ஜிபி டேட்டா
சென்னை உட்படப் பல பகுதிகளில் பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய 4ஜி சேவையைச் சோதனை செய்து வருகிறது என்பது நமக்குத் தெரியும். தற்பொழுது பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை சோதனை செய்து வரும் நேரத்தில், பல இடங்களை நாள் ஒன்றிற்கு 10ஜிபி டேட்டா கிடைக்கும் படியான திட்டங்களை வெறும் ரூ.96 என்ற விலையில் வழங்கி சோதனை செய்து வருகிறது.

என்ன விலை? எத்தனை நாள் வேலிடிட்டி?
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.96 என்ற குறைந்த விலை திட்டத்துடன், ரூ.236 என்கிற அதிக விலை கொண்ட இந்த இரண்டு திட்டங்களின் கீழ் பயனர்களுக்கு, தினமும் 10ஜிபி டேட்டா சேவையை 28 நாட்கள் மற்றும் 84 நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் வழங்கிவருகிறது. இந்த இரண்டு திட்டங்களும் குரல் அழைப்பிற்கான எந்த சேவையையும் வழங்கவில்லை, இவை முற்றிலுமாக அதிவேக டேட்டா சேவையை மட்டுமே வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரப்பூர்வ அறிமுகம் எப்பொழுது?
பிஎஸ்என்எல் நிறுவனம் தற்பொழுது சோதனை செய்து வரும் இடங்களில் இந்த மலிவு விலை திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் மார்ச் 2020ம் ஆண்டு இறுதிக்குள் தனது 4ஜி சேவையைச் சோதனை செய்து வரும் அனைத்து இடங்களிலும் அதிகாரப்பூர்வமாகத் துவங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications