சத்தமில்லாமல் முடிச்சு விட்ட BSNL.. தமிழ்நாட்டில் 20 நாட்களில் 80 ஆயிரம் புதிய பயனர்கள்.. ஜியோ ஓரம்போ..
கடந்த மாதம் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தி அதிரவைத்தது. முக்கியமான ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்ததைத் தொடர்ந்து பல்வேறு மக்கள் பிஎஸ்என்எல் (bsnl) நிறுவனத்தில் இணைந்து வருகின்றனர்.
அதேபோல் கடந்த 20 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 80,000-க்கு அதிகமான மக்கள் பிஎஸ்என்எல் இணைப்புகளைப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக ஜியோ (jio), ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்கள் 25 சதவீதம் வரை கட்டணங்களை உயர்த்தியதால் இந்தியா முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைந்து வருகின்றனர்.

அதேபோல் தமிழ்நாட்டில் பெரும்பாலான பிஎஸ்என்எல் தலைமை அலுவலகங்களில் புதிய இணைப்பினை பெறுவதற்காக ஏராளமானவர்கள் வருவதாகத் தகவல் வெளிவந்துள்ளன. அதுவும் பலர் ஏற்கனவே பயன்படுத்தும் மொபைல் எண்களை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு போர்ட் செய்வது, செயல்படாமல் இருக்கக்கூடிய பழைய பிஎஸ்என்எல் எண்களை மறுபடியும் ஆக்டிவேட் செய்வது என பிஎஸ்என்எல் அலுவலகங்கள் நோக்கி வருகின்றனர்.
மேலும் கடந்த ஜூலை 30ஆம் தேதி நிலவரப்படி திருச்சியில் 16500 பேர் புதிதாக பிஎஸ்என்எல் இணைப்பினை பெற்றுள்ளனர். அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனங்களுக்கு மாறிவரும் பயனர்களின் எண்ணிக்கையும் 6.29 % இல் இருந்து 0.4% என குறைந்திருப்பதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக கடந்த ஜூலை மாதத்தில் மதுரை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் புதிதாக 17000 பேர் பிஎஸ்என்எல் இணைப்பினை பெற்றுள்ளனர். பின்பு கோயம்புத்தூரில் சுமார் 12,000 பேர், சென்னையில் 40,000 பேர் என கடந்த 20 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் 80,000-க்கும் அதிகமான மக்கள் பிஎஸ்என்எல் இணைப்பினை பெற்றுள்ளனர்.
ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தும் எண்ணம் எதுவும் இல்லை என்றும், தொழிலை விரிவுபடுத்துவதே நோக்கம் என சமீபத்தில் பிஎஸ்என்எல் அதிகாரிகள் கூறியுள்ளனர். வரும் டிசம்பர் மாதத்திற்குள் நாடு முழுவதும் 4ஜி சேவை வழங்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு 5ஜி சேவையும் வழங்கப்படும் என்றும் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கூடுதலாக டவர்களை அமைக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அதன்படி சென்னையில் மட்டும் 300 டவர்களை அமைக்கப் போவதாகவும், மற்ற மாவட்டங்களில் 2100 டவர்கள் வரை அமைக்கப் போவதாகவும் கூறியுள்ளனர். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் 19 கிராமங்களுக்கு 4ஜி சேவையை வழங்கியது.
பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களை விட கம்மி விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. சமீபத்தில் கூட ரூ.249 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்து தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் 45 நாட்கள் வேலிடிட்டி கொடுத்து அசர வைத்தது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








