BSNL 5G சோதனை.. SIM கார்டு வாங்க புது ரூல்ஸ்.. இனி இது தேவையில்லை.. ஆனா இது கட்டாயம்.. கவனியுங்க மக்களே..
ஆகஸ்ட் மாத துவக்கத்தில் இருந்து, இனி இந்தியாவில் பொதுமக்கள் புது சிம் கார்டு வாங்கும் சேவைக்கான விதிமுறைகள் மாற்றப்படுகிறது. இந்த புதிய விதிகள், இப்போதிலிருந்தே நடைமுறைப்படுத்தப்படுவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. புது விதிகளின் படி, வெளிநாட்டினர் இந்தியாவில் புது சிம் கார்டு வாங்கும் செயல்முறையை எளிதாக்கும் வகையில், மொபைல் சிம் கார்டுகளைப் பெறுவதற்கான விதிமுறைகளை இந்திய அரசாங்கம் திருத்தியுள்ளது. முன்னதாக, Airtel, Jio அல்லது Vi போன்ற வழங்குநர்களிடமிருந்து சிம் கார்டுகளை வாங்குவதற்கு உள்ளூர் எண்ணிலிருந்து OTP தேவைப்பட்டது.
இது சில வகை சிக்கலை உருவாக்கியது. ஆகையால், இந்த ஆகஸ்ட் மாதம் முதல் வெளிநாட்டினர் இந்தியாவில் புது சிம் கார்டு வாங்க வேண்டுமென்றால், உள்ளூர் எண்ணில் இருந்து OTP பெற தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, புது சிம் கார்டு வாங்கும் நபர்களின் மின்னஞ்சல் மூலம் OTP ஐப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இனி உள்ளூர் எண்ணின் தேவை நீக்கப்படுகிறது.

இனி புது சிம் கார்டு வாங்க eKYC சரிபார்ப்பு முக்கியம்:
அதேபோல், இந்தியாவில் இருந்துகொன்டே, புது சிம் கார்டு வாங்கும் இந்திய குடிமக்களுக்கு, இனி புது சிம் கார்டு வாங்குவதற்கு eKYC (எலக்ட்ரானிக் நோ யுவர் கஸ்டமர்) சரிபார்ப்பு கட்டாயம் என்று இந்திய அரசாங்கத்தின் புதிய விதி குறிப்பிட்டுள்ளது. இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் செயல்முறை ஒரு பயனரின் அடையாளத்தையும் முகவரியையும் மின்னணு முறையில் உறுதிப்படுத்துகிறது. eKYC சரிபார்ப்பு இல்லாமல், தனிநபர்கள் புதிய மொபைல் எண்ணைப் பெற முடியாது.
சைபர் மோசடி மற்றும் சிம் கார்டுகளை தவறாக பயன்படுத்துவதை தடுக்க அரசாங்கம் இந்த கட்டாய eKYC விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பிறர் பெயரில் சிம் கார்டுகளை வாங்கி, தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். ஒவ்வொரு சிம் கார்டும் அதன் பயனரின் சரிபார்க்கப்பட்ட அடையாளத்துடன் இணைக்கப்பட்டுள்ளதை eKYC செயல்முறை உறுதி செய்கிறது.
இதற்கிடையில், இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) தனது 5ஜி சேவைகளை இந்தியாவில் சோதனை செய்யத் தொடங்கியுள்ளது. மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய எம். சிந்தியா சமீபத்தில் தனது X ஹேண்டில் வழியாக 5G இயக்கப்பட்ட நெட்வொர்க்கைப் பயன்படுத்தி வீடியோ அழைப்பை நிரூபிக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
BSNL-ன் 5G சோதனை:
அமைச்சர் தனது பதிவில், "பிஎஸ்என்எல்லின் 5ஜி இயக்கப்பட்ட தொலைபேசி அழைப்பை முயற்சித்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார். அவர் பிஎஸ்என்எல் 5ஜி நெட்வொர்க்கை சோதிக்க சி-டாட் வளாகத்தில் இருந்தார். அந்த வீடியோவில், அழைப்பின் மறுமுனையில் இருந்த ஒரு பெண்ணை தொடர்பு கொண்டார். அந்த பெண் இருக்கும் அறையை விட்டு வெளியே வரச் சொன்னார்.
அந்த பெண் அறையில் இருந்து வெளியே வந்து பேச துவங்கினர். அவரை தெளிவாக பார்க்கவும், தெளிவாகவும் கேட்க முடியும் என்பதை உறுதிப்படுத்தப்பட்டது. அப்போது அமைச்சருக்குப் பக்கத்தில் இருந்த ஒரு அதிகாரி, "இது பிஎஸ்என்எல் 5ஜி (BSNL 5G) சார், பிஎஸ்என்எல் 5ஜி பயன்படுத்தி பேசுகிறார் சார்" என்று குறிப்பிட்டார். 5G சேவைகளை வெளியிடுவதில் BSNL இன் முன்னேற்றத்தை இந்த சோதனை எடுத்துக்காட்டுகிறது.
இந்த மாற்றங்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் தொலைத்தொடர்புகளில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை தழுவுவதற்கும் இந்தியாவின் முயற்சிகளை பிரதிபலிக்கின்றன. வெளிநாட்டினருக்கான சிம் கார்டு வாங்குவதை எளிதாக்குவதன் மூலமும், உள்ளூர் மக்களுக்கு கடுமையான சரிபார்ப்பை அமல்படுத்துவதன் மூலமும், பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்க முடியும் என்று இந்திய அரசாங்கம் நம்புகிறது.


Click it and Unblock the Notifications








