BSNL கஸ்டமர்களே.. இவர் வாயில் கொஞ்சம் சக்கரை அள்ளி போடுங்க.. அப்படி என்ன சொன்னார்?
அடடா.. இவர் செல்லும் ஒவ்வொரு வார்த்தையும் தேன்போல இனிக்குதே என்று கூறும் அளவிற்கு, இந்தியா முழுவதும் உள்ள எல்லா பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்களுக்கு அட்டகாசமான அப்டேட்களை அள்ளி வழங்கியுள்ளார் - விவேக் துவா (Vivek Dua). யார் இவர்? அப்படி என்ன கூறியுள்ளார்?
விவேக் துவா - பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் சிடிஎன் ஆவார். ஐஎம்சி (IMC) என்கிற இந்திய மொபைல் காங்கிரஸ் (India Mobile Congress) நிகழ்வில் ஏஎன்ஐ (ANI) செய்தி நிறுவனத்திடம் பேசிய போது பிஎஸ்என்எல் 5ஜி (BSNL 5G) அறிமுகம் உட்பட பல முக்கியமான அப்டேட்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது பிஎஸ்என்எல் 5ஜி-க்கான சோதனையை நாங்கள் ஏற்கனவே செய்துவிட்டோம். தற்போது 4ஜி ஆக இருக்கும் எங்கள் நெட்வொர்க் மேம்படுத்தக்கூடியது மற்றும் சோதனைகள் ஏற்கனவே களத்தில் உள்ளன. எனவே மிக விரைவில் எங்கள் 5ஜி-யையும் வெளியிடுவோம் என்று விவேக் துவா கூறினார்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சமீபத்திய முன்னேற்றத்தை பற்றி பேசுகையில், கடந்த ஒரு வருடத்தில் வாடிக்கையாளர் தளம், வாடிக்கையாளர் மகிழ்ச்சி உண்மையில் மேம்பட்டிருப்பதை நீங்கள் சந்தையில் காண்பீர்கள் என்று விவேக் துவா கூறினார்.
எதிர்கால தொழில்நுட்பங்களை பற்றி பேசுகையில் - 5ஜி இலிருந்து 6ஜி வரையிலான பரிணாம வளர்ச்சிக்கு ஏஐ (AI) ஆனது ஒரு மையமாக இருக்கும். மேலும், "4ஜி இலிருந்து 5ஜி வரை விஷயங்கள் பரிணமித்த விதத்தில், 6ஜி நெட்வொர்க்கில் ஏஐ-யின் பங்கு முக்கிய விஷயமாக இருக்கும் என்றும் விவேக் துவா கூறினார்
6ஜி நெட்வொர்க் மற்றும் நெட்வொர்க்கில் உள்ள ஆட்டோமேஷன், செல்ப் லேர்னிங் செல்ப் ஹீலிங் ஆகிய அம்சங்கள் அனைத்தும் மீண்டும் மிகவும் நுகர்வோரை மையமாக கொண்டவைகளாகவே இருக்கும், மேலும் நெட்வொர்க்குகள் உண்மையில் வாடிக்கையாளர்களுக்கு அந்த நன்மையைக் கொண்டு வரவும் போகின்றன என்றும் விவேக் துவா கூறினார்.
மேலும் செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளில் நாட்டின் வளர்ந்து வரும் கவனம் குறித்து பேசிய போது, கடந்த இரண்டு மாதங்களில் அரசாங்கம் எடுத்த முயற்சிகள் உண்மையில் முழு ஸ்பேஸையும் திறக்க போகின்றன. விண்வெளிக் கொள்கை தான் ஸ்பேஸை திறக்கிறது என்று விவேக் துவா கூறினார்.
இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட நிலப்பரப்பில் இணைப்பு இடைவெளியை குறைக்க செயற்கைக்கோள் தொழில்நுட்பம் எவ்வாறு உதவும் என்பதையும் அவர் எடுத்துரைத்தார். நாம் வாழும் பிரதேசம் மற்றும் நமது குடிமக்களுக்கு நாம் எதிர்பார்க்கும் இணைப்பு வகை காரணமாக, இது மிக உயர்ந்த ஆற்றலைக் கொண்ட ஒரு தொழில்நுட்பமாக இருக்கும் என்று அவர் கூறினார்
சர்வதேச முதலீடு இந்தியாவின் சாட்காம் (SATCOM) முன்னேற்றத்தை மேலும் துரிதப்படுத்தும் என்று துவா நம்புகிறார். மேலும் இணைக்கப்படாதவற்றை இணைப்பதற்கும், டிஜிட்டல் சேவைகளுக்கான அணுகலை ஜனநாயகப்படுத்துவதற்கும் ஃபைபர் மற்றும் ரேடியோ நெட்வொர்க்குகளுடன் செயற்கைக்கோள் இணைப்பு முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் "நாட்டில் 100 சதவீத கிராமங்கள்" இணைக்கப்படுவதை நோக்கமாகக் கொண்ட தற்போதைய பாரத்நெட் திட்டத்தை பற்றியும் அவர் எடுத்துரைத்தார், தற்போதைய முதலீடு ஏற்கனவே "நகர்ப்புற மற்றும் முழுமையான கிராமப்புற இந்தியாவிற்கு இணைப்பை இயக்க போதுமானதாக" உள்ளது என்றும் கூறினார்.
இந்திய மொபைல் காங்கிரஸ் 2025 நிகழ்வின் தொடக்க விழாவில் பேசிய போது, இந்திய பிரதமர் மோடியும் கூட பல முக்கிய விவரங்களை பகிர்ந்துகொண்டார். நெட்வொர்க்குகளை இயக்குவதற்கான முழுமையான டூல்கள் மற்றும் டெக்னாலஜியை உருவாக்கிய உலகின் ஐந்தாவது நாடாக இந்தியா மாறியுள்ளது என்று மோடி தெரிவித்தார்.
மேலும் இந்தியாவில், ஒரு ஜிபி வயர்லெஸ் டேட்டாவின் விலை ஒரு கப் டீயின் விலையை விட குறைவாக உள்ளது. தேநீரை உதாரணமாக கொடுக்கும் பழக்கம் எனக்கு உள்ளது என்றும் அவர் கூறினார். கடைசியாக - இந்தியா இரண்டாவது பெரிய 5ஜி சந்தையாக உருவெடுத்துள்ளது என்றும், ஒரு பயனருக்கான டேட்டா நுகர்வு அடிப்படையில் முன்னணி நாடாக உள்ளது என்றும் மோடி கூறினார்.


Click it and Unblock the Notifications