4ஜி சிம் கொடுத்தது இதுக்குதானா? மீண்டும் கையை விரித்த பிஎஸ்என்எல்! கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போச்சே!
தமிழ்நாடு முழுவதும் 4ஜி சிம் கார்டுகளை விறுவிறுப்பாக வழங்கிவரும் பிஎஸ்என்எல் நிறுவனம், அதே வேகத்தில் 4ஜி டவர்களை மேம்படுத்தும் பணியையும் செய்துவருகிறது. இந்த வேகத்தை பார்த்து, அடுத்த மாதத்தில் 4ஜி சேவை கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பகீர் செய்தி வெளியாகியிருக்கிறது.
நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea), 4ஜி சேவையை வழங்கிவிட்டு 5ஜி சேவைக்கான பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆனால், பிஎஸ்என்எல் (BSNL) வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவை (BSNL 4G Service) கூட வழங்கப்படவில்லை. சொல்லப்போனால், 6 ஆண்டுகளுக்கு முன்பே 4ஜி சேவை நாடு முழுவதும் பரவலாகிவிட்டது.

அப்போதில் இருந்து 3 மாதத்தில் வரும், அடுத்த மாதம் வரும் என்று ஆண்டுக்கணக்கில் காத்திருந்து விரக்தியின் உச்ச நிலைக்கே பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் சென்றுவிட்டனர். இந்த விரக்தி அவர்களை வேறு சிம் கார்டு நிறுவனங்களுக்கு மாறி தூண்டிவிட்டுள்ளது. இதனால், பிஎஸ்என்எல் நிறுவனம் பெரும் பின்னடைவை சந்திக்க தொடங்கியது. இந்த நேரத்திலேயே கடந்த மாதம், பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை வழங்க ரூ. 89,047 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த நிதிக்கு பின்பு, நாட்டின் முக்கிய நகரங்களில் 2ஜி மற்றும் 3ஜி டவர்களை 4ஜி டவர்களாக மாற்றும் பணியை பிஎஸ்என்எல் நிறுவனம் அதிரடியாக தொடங்கியது. அதோடு, புதியதாக 5ஜி டவர்களை அமைக்கும் பணியையும் மேற்கொண்டது. அந்த வகையில், தமிழ்நாட்டில் ஈரோடு, தூத்துக்குடி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டவர் மேம்பாட்டு பணிகள் அதிதீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த வேகத்தை பார்த்தால், அடுத்த சில வாரங்களிலேயே 4ஜி சேவை கிடைத்துவிடும் போலிருக்கிறதே என்று பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் நினைத்தார்கள். அந்த சூட்டில், இலவசமாக பிஎஸ்என்எல் 4ஜி சிம் கார்டுகளை வழங்கும் பணியையும் அந்த நிறுவனம் தொடங்கியது. அவ்வளவுதான், ஒருவழியாக எங்களுக்கும் 4ஜி சேவை கிடைக்கப்போகிறது என்று பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் பெருமூச்சு விடும் நேரத்தில், பகீர் செய்து ஒன்று வெளியாகியிருக்கிறது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் பிரபல செய்தி நிறுவனத்திடம், தமிழ்நாட்டில் எப்போது 4ஜி சேவை வழங்கப்படும் என்பது குறித்து பிரத்யேக தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நாடு முழுவதும் 4ஜி சிம் கார்டுகள் வழங்கும் பணிகள், 4ஜி டவர்கள் அமைக்கும் பணிகள் மற்றும் அதற்கான மென்பொருள் வாங்கும் பணிகள் என்று அனைத்தும் விறுவிறுப்பாக நடந்து வருவது உண்மைதான்.
ஆனால், 4ஜி மென்பொருள் உள்கட்டமைப்பு பணிகள் முடிவடையவே டிசம்பர் மாதம் வரையில் அவகாசம் தேவைப்படும். அதன்பின், 4ஜி டவர்கள் சோதனை மற்றும் மீதமுள்ள உள்கட்டமைப்பு பணிகளுக்கு குறைந்தது 6 மாதங்கள் பிடிக்கும். மொத்தமாக 18 மாதங்கள் முன்களப் பணிக்களுக்கே தேவைப்படுகிறது. நல்வாய்ப்பாக, 6 மாதங்களுக்கு முன்பே டவர் மற்றும் சிம் கார்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால், இப்போது 12 மாதங்களுக்கு பின்பே நாடு முழுவதும் 4ஜி சேவை வழங்கப்படும்.
அந்த வகையில், அடுத்தாண்டு ஜூன் மாதத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த செய்தி காட்டூத்தீ போல பரவி வருகிறது. இப்போது, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள், மேலும் ஒரு ஆண்டு காத்திருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








