அடிதூள்.. பல வருட காத்திருப்பு ஓவர்.. சந்தோஷமான செய்தி சொன்ன BSNL.. வருகிறது 4ஜி சேவை..
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் மற்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களை விட மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. ஆனால் ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் 4ஜி சேவைக்கு அடுத்து 5ஜி சேவையை வழங்கிக் கொண்டிருக்கிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கவில்லை.
அதாவது தற்போது நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்குவதற்காக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து வேலை செய்கிறது பிஎஸ்என்எல் நிறுவனம். இந்நிலையில் விரைவில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி சேவையை மைசூரு, மாண்டியா, சாமராஜநகர் மற்றும் குடகு மாவட்டங்களில் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 337 செல்போன் டவர்கள் மைசூரு மற்றும் சாமராஜநகருக்கு 4ஜி சேவையை வழங்கும் எனவும், குடகு மற்றும் மாண்டியாவிற்கு முறையே 200 மற்றும் 153 செல்போன் டவர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன எனவும் தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் கர்நாடகா வட்டத்தின் டெலிகாம் முதன்மை பொது மேலாளர் உஜ்வல் குல்ஹானே(Ujwal Gulhane), பிஎஸ்என்எல்லின் முன்முயற்சிகள் மற்றும் பிற திட்டங்களை எடுத்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி (BSNL 4G) சேவை மைசூரு பகுதிகளில் விரைவில் வரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் தி இந்துவின் அறிக்கையின் படி, தமிழ்நாட்டில் கண்ணூத்து மலைக் கிராமத்தில் பிஎஸ்என்எல் 4ஜி வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள செல்போன் டவர் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த தொகுதி ஜோதிமணி இல்லாததால் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது திருச்சி மாவட்டத்தில் வையம்பட்டியை அடுத்து கண்ணூத்து கிராமத்தில் பிஎஸ்என்எல், தனியார் நிறுவனங்களின் செல்போன் டவர்கள் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே அந்த கிராம மக்கள் செல்போன் பேச வேண்டும் என்றால், தங்களது ஊரில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள சிறு அணைக்கட்டு பகுதிக்குச் சென்று பேச வேண்டிய நிலைமை இருந்தது.
இந்நிலையில் தான் பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் 4ஜி சேவை வழங்குவதற்காக யுனிவர்சல் சர்வீஸ் அப்ளிகேஷன் ஃபன்ட் (யுஎஸ்ஒஎப்) திட்டத்தின் கீழ் 1 கோடி ரூபாய் மதிப்பில் செல்போன் டவர் அமைக்கும் பணி கடந்த ஓராண்டுக்கு முன்பு தொடங்கியது. பின்பு அந்த ஊரில் செல்போன் சேவை கிடைப்பதற்காக செல் ஆன் வீல் எனும் தற்காலிக வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது செல்போன் டவர் அமைக்கும் பணி அங்கு நிறைவடைந்ததை அடுத்து, கண்ணூத்து கிராமத்தில் 4ஜி சேவையுடன் செல்போன் டவர் திறப்பு விழா நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அந்த தொகுதி எம்பி ஜோதிமணி டெல்லியில் இருப்பதால் விழாவை கிராம மக்கள் ஒத்தி வைத்தனர்.

இருந்தபோதிலும் சென்னையில் இருந்து பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைமை பொதுமேலாளர் பனவத்து வெங்கடேஸ்வரலூ காணொலி வாயிலாக செல்போன் டவர் செயல்பாடுகளைத் தொழில்நுட்ப ரீதியாக தொடங்கி வைத்தார். ஆனாலும் இந்த செல்போன் டவர் அமையக் காரணமாக இருந்தது கரூர் எம்பி ஜோதிமணி தான். எனவே அவர் டெல்லியில் இருந்து வந்ததும் அங்கு விமரிசையாக விழா நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேபோல் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 21 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை ப்ரீபெய்ட் திட்டங்களின் கட்ணங்களை உயர்திவிட்டன. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இதுவரை ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
source: telecomtalk, hindutamil


Click it and Unblock the Notifications








