BSNL 4G நாடு முழுவதும் அறிமுகம்.. 4ஜி ரீசார்ஜ் திட்டங்கள், புதிய SIM கார்டு விலை எவ்வளவு?
இந்திய பிரதமர் நரேந்திர மோடி (PM Modi ), நாடு முழுவதும் ஒரே நேரத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவைகளை (BSNL 4G Service) அறிமுகப்படுத்தி வைத்தார். அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த டெலிகாம் ஆப்ரேட்டருக்கு இது ஒரு பெரிய மைல்கல் ஆகும்.
98,000 தளங்களில் அதன் 4ஜி நெட்வொர்க்கை செயல்படுத்தி உள்ளதன் மூலம், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பிஎஸ்என்எல் பயனர்களுக்கு அதிவேக இஇண்டர்நெட் உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் பான்-இந்தியா அடிப்படையிலான இந்த 4ஜி அறிமுகத்தின் மூலம் - பிஎஸ்என்எல் இப்போது தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆன ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ உடன் இணைந்து இந்தியா முழுவதும் 4ஜி கவரேஜை வழங்குகிறது.

அடுத்தது என்ன? பிஎஸ்என்எல் பான்-இந்தியா 4ஜி நெட்வொர்க் அறிமுகம் குறித்த அறிவிப்பு ஒடிசாவின் ஜார்சுகுடாவில் வெளியிடப்பட்டது. இதனுடன் பிஎஸ்என்எல்-ன் சில வருங்கால திட்டங்களும் அறிவிக்கப்பட்டது. 98,000 4ஜி / 5ஜி மொபைல் டவர்கள் வெற்றிகரமாக டிப்ளாய் செய்யப்பட்டதை தெடர்ந்து, எதிர்காலத்தில் மேலும் 100,000 கோபுரங்கள் நிறுவப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் நெட்வொர்க்குகளை போலல்லாமல், பிஎஸ்என்எல்-இன் 4ஜி ஆனது முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது, மென்பொருள் மற்றும் வன்பொருள் ஆகிய இரண்டுமே இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் - சுயசார்பு தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை உருவாக்கிய நாடுகளின் பட்டியலில் - ஸ்வீடன், டென்மார்க், சீனா மற்றும் தென் கொரியாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இடம்பிடித்துள்ளது. இந்த வலுவான, உள்நாட்டு நெட்வொர்க்கை உருவாக்குவதற்காக இந்திய அரசாங்கம் ரூ.37,000 கோடி முதலீடு செய்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் 4ஜி திட்டங்களின் விலை: பிஎஸ்என்எல் 4ஜி-இன் அறிமுகமானது 90 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களுக்கு நேரடியாக பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிஎஸ்என்எல்-இன் 4ஜி ரீசார்ஜ் திட்டங்கள் ஆனது தனியார் ஆபரேட்டர்களுடன் ஒப்பிடும்போது 30 முதல் 40 சதவீதம் வரை மலிவானவைகளாகவும் இருக்கும்
விலை உயர்வு மற்றும் நெட்வொர்க் சிக்கல்கள் காரணமாக ஜியோ, ஏர்டெல் அல்லது வோடாபோன் ஐடியா சேவைகளில் இருந்து பிஎஸ்என்எல்-க்கு மாறிய பயனர்களுக்கு - பிஎஸ்என்எல் 4ஜிதிட்டங்களின் விலைகள கவர்ச்சிகரமான விருப்பமாக அமையுமென்பதில் சந்தேகமே வேண்டாம். மேம்பட்ட கவரேஜ் மற்றும் வேகமான இண்டர்நட் ஸ்பீட் உடன், அரசுக்குச் சொந்தமான இந்த டெலிகாம் ஆபரேட்டர் மேலும் பல பயனர்களின் நம்பிக்கையை பெற்று, தனியார் நிறுவனங்களிடமிருந்து புதிய பயனர்களை ஈர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் 4ஜி சிம் கார்டு விலை: பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பெற ஒரு புதிய சிம் கார்டு தேவையா? என்கிற கேள்வி, இந்நேரம் உங்களுக்குள் எழுந்து இருக்கலாம். பொதுவாகவே "இதுபோன்ற" மேம்படுத்தல்களின் போது, அதாவது 3ஜி இல் இருந்து 4ஜி க்கு அப்கிரேட் ஆகும் போது, முழு 4ஜி ஸ்பீடையும் அன்லாக் செய்ய புதிய சிம் கார்டு வாங்குவதே நல்லது.
ஒருவேளை உங்களிடம் மிகவும் பழைய பிஎஸ்என்எல் சிம் கார்டு இருந்தால் அதை மாற்றிக்கொள்ளலாம். பிஎஸ்என்எல் சிம் கார்டுகள் வெறும் ரூ.10 முதல் ரூ.30 க்குள் என்கிற செலவில் தான் வாங்க கிடக்கிறது. இந்த இடத்தில் உங்களிடம் 4ஜி கனெக்டிவிட்டியை ஆதரிக்கும் மொபைல் போன் இருக்க வேண்டும் என்பதையும் நினைவூட்ட விரும்புகிறோம்.
பிஎஸ்என்எல் 5ஜி மற்றும் 6ஜி அறிமுகம் எப்போது? டெல்லி மற்றும் மும்பை போன்ற பெருநகரங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் பிஎஸ்என்எல் 5ஜி நெட்வொர்க்கை அறிமுகம் செய்ய பிஎஸ்என்எல் நிறுவனம் தயாராகி வருகிறது. 5ஜி நெட்வொர்க்கிற்கு அப்பால், 6ஜி தொழில்நுட்பத்திற்கான இந்தியாவின் தயார்நிலையையும் பிரதமர் மோடி வலியுறுத்தினார், இந்திய அரசாங்கம் ஆனது 2030 இல் 6ஜி சேவையை தொடங்குவதை இலக்காக கொண்டுள்ளது. இது சரியாக நடந்தால் 6ஜி சேவைகளை வழங்கும் முதல் நாடுகளில் இந்தியாவும் இருக்கும்!


Click it and Unblock the Notifications








