BSNL கஸ்டமர்களே.. மேட்டர் சீரியஸ்.. மனச கல் ஆக்கிகோங்க.. இல்லனா Jio, Airtel க்கு ஜம்ப் அடிச்சுருங்க!
ஏற்கனவே, பல ஆண்டுகளாக பிஎஸ்என்எல்-ன் (BSNL) விசுவாசமான கஸ்டமர்களாக இருந்தவர்கள் எல்லாம்.. ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையில் மீதமுள்ள "கொஞ்ச நஞ்ச" பேரும் பிஎஸ்என்எல்-ஐ விட்டு வெளியேறும்படியான ஒரு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலில் - ஒரு நல்ல செய்தியும், ஒரு கெட்ட செய்தியும் இரண்டற கலந்துள்ளது என்றே கூறலாம். நல்ல செய்தி என்னவென்றால் பிஎஸ்என்எல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் கூடிய விரைவில் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 4ஜி-ஐ அறிமுகப்படுத்த உள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளில் 4ஜி சேவைகளை வழங்கி வருகிறது தான். ஆனால் அதில் உள்நாட்டு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் இனிவரும் காலங்களில் டிசிஎஸ் (TCS), டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையம் (C-DoT), தேஜாஸ் நெட்வொர்க்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும்.
மேற்கண்ட 3 நிறுவனங்கள் மற்றும் அவைகளின் வழியாக கிடைக்கவுள்ள உள்நாட்டு தொழில்நுட்பங்களின் (Homegrown Technologies) உதவியுடன், பிஎஸ்என்எல் "அசால்ட் ஆக" நாடு முழுவதும் அதன் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தும். உடனே "ஆஹா! கேட்கும் போதே இனிமையாக இருக்கிறதே!" என்று பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் எல்லோரும் பூரிப்படைய வேண்டாம்.
இந்த நல்ல செய்தியுடன் கூடிய கெட்ட செய்தி என்னவென்றால், பிஎஸ்என்எல்-ன் 4ஜி அறிமுகம் புண்ணியம் இல்லாமல் போக போகிறது. ஆம்! டெலிகாம் வல்லுனர்களின் கூற்றுப்படி, பிஎஸ்என்எல் அதன் 4ஜி சேவைகளை முடிந்த வேகத்தில் மற்றும் பரந்த அளவில் அறிமுகம் செய்தாலும் கூட, அதனால் தனியார் டெலிகாம் நிறுவனங்களின் பிரீமியம் கஸ்டமர்களை கைப்பற்ற முடியாது!
அதாவது பிஎஸ்என்எல் அதன் 4ஜியை அறிமுகப்படுத்தினாலும் கூட, நகர்ப்புறங்களில் உள்ள தனியார் டெலிகாம் நிறுவனங்களுடன் பிஎஸ்என்எல் நிறுவனத்தால் போட்டி போட முடியாது. ஏனென்றால் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே 5ஜி-க்கு மாறிவிட்டன. கூடிய விரைவில் நாடு முழுவதும் 5ஜி சேவைகள் அறிமுகமாகி இருக்கும்.
அந்த நேரத்தில் பிஎஸ்என்எல் அதன் "தரமான" 4ஜி சேவையை அறிமுகம் செய்து.. டூயல் சிம் கார்டுகளை பயன்படுத்தும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களை சிங்கிள் சிம்மிற்கு மாற்றுமா? ஜியோ மற்றும் ஏர்டெல் சேவைகளில் இருக்கும் கஸ்டமர்களை தனது புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்குமா என்று... யாரைக்கேட்டாலும் "வாய்ப்பில்லை ராஜா" என்றே கூறுவார்கள்!
அதையே தான் வல்லுனர்களும் கூறுகிறார்கள். பெரும்பாலான 5ஜி போன் பயனர்கள் தங்கள் பகுதி, ஊர் அல்லது நகரத்தில் 5ஜி சேவைகளை வழங்கும் டெலிகாம் ஆப்ரேட்டர்களின் வாடிக்கையாளர்களாக இருக்கவே விரும்புவார்கள். இந்த இடத்தில், பிஎஸ்என்எல் அதன் 5ஜி சேவையை அறிமுகம் செய்தால் மட்டுமே புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும், லாபம் பார்க்கவும் முடியுமே தவிர 4ஜி சேவையை வைத்து பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியாது!
சரி, பிஎஸ்என்எல் 5ஜி ஆவது சீக்கிரமாக அறிமுகமாகுமா? என்று கேட்டால்.. அதுவும் இல்லை. இந்தியாவின் முக்கிய பகுதிகளை சென்றடைய பிஎஸ்என்எல் அதன் 4ஜி-க்கே 2 அல்லது 3 ஆண்டுகளாவது தேவைப்படும் என்று கூறப்படுகிறது. அதன் பின்னரே 5ஜி அறிமுகமாகும். எப்படி பார்த்தாலும் பிஎஸ்என்எல் அதன் 5ஜி-ஐ அறிமுகம் செய்ய அடுத்த 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிடும்.
அந்த நேரத்தில் கிட்டத்தட்ட எல்லோருமே 5ஜி-க்கு மாறி இருப்பார்கள்; அதுமட்டுமின்றி, ரூ.10,000 க்குள் வாங்க கிடைக்கும் 5ஜி போன்கள் "மலைபோல் குவிக்கும்படி" அறிமுகமாகி இருக்கும். போதாக்குறைக்கு ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ போன்ற ஆப்ரேட்டர்களுடன் நேரடி போட்டியும் இருக்கும். ஆகமொத்தம் - அடுத்த சில ஆண்டுகளுக்கும் கூட பிஎஸ்என்எல்-ல் நிலை பரிதாபம் தான்!


Click it and Unblock the Notifications