BSNL தீபாவளி ஆபர்.. கஸ்டமர்களை பிடிக்க முடியல.. 365 நாள் வேலிடிட்டி, 600GB டேட்டா பிளான் மீது விலை குறைப்பு!
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது ஏற்கனவே சக்கைப்போடு போட்டுக்கொண்டு இருக்கிறது. தனியார் டெலிகாம் ஆபரேட்டர்கள் ரீசார்ஜ் கட்டண உயர்வை அறிவித்த போது, அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த டெலிகாம் நிறுவனமானது அதை செய்யவில்லை. இதன் விளைவாக ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் சேவையில் இருந்த பல கஸ்டமர்கள் பிஎஸ்என்எல் சேவைக்குள் நுழைந்த வண்ணம் உள்ளனர்.
டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் சமீபத்திய தரவுகளின்படி, பிஎஸ்என்எல் நிறுவனமானது கடந்த ஆகஸ்ட் 2024-ல் சுமார் 2.5 மில்லியன் (அதாவது 25 லட்சம்) புதிய பயனர்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் பிஎஸ்என்எல்-ன் ஒட்டுமொத்த பயனர் எண்ணிக்கை ஆனது 91 மில்லியனை எட்டியுள்ளது.

ஜியோ, ஏர்டெல், விஐ நிறுவனங்கள் ஆனது தத்தம் ரீசார்ஜ் விலை உயர்வை அறிவித்த ஜூலை மாதத்திலும் கூட பிஎஸ்என்எல் நிறுவனம் 2.9 மில்லியன் பயனர்களை சேர்த்தது. குறிப்பிடத்தக்க வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பிஎஸ்என்எல்-க்கான சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படுவது இதுவே முதல் முறை ஆகும்!
இப்படியாக பிஎஸ்என்எல் நிறுவனம் "சும்மா மாஸ் காட்டி வரும்" வேளையில், பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கான ஒரு ஸ்பெஷல் தீபாவளி சலுகை (BSNL Diwali Offer) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின் கீழ் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான திட்டம் ஒன்றின் மீது விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன திட்டம்? அதன் பழைய விலை என்ன? புதிய விலை என்ன? இதன் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இந்த சலுகை எப்போது முடியவடையும்? இதோ விவரங்கள்:
என்ன ஆபர்? எப்போது முடிவடையும்? பிஎஸ்என்எல்-ன் தீபாவளி பண்டிகை கால சலுகையின் கீழ் ரூ.1999 திட்டத்தின் (BSNL Rs.1999 Plan) விலை குறைக்கப்பட்டுள்ளது. தற்போது இது ரூ.100 தள்ளுபடியுடன் ரூ.1899 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இந்த விலை மாற்றம் பிஎஸ்என்எல் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பிரதிபலிக்கிறது. இது வரையறுக்கப்பட்ட கால சலுகை (Limited time offer) ஆகும். இது அக்டோபர் 28 அன்று தொடங்கி நவம்பர் 7, 2024 அன்று முடிவடையும்.
என்னென்ன நன்மைகள்? ரூ.1899 ஆகா விலை குறைக்கப்பட்டுள்ள ரூ.1999 திட்டத்தின் கீழ் உங்களுக்கு மொத்தம் 600ஜிபி டேட்டா (600GB Data) கிடைக்கும். முன்னரே குறிப்பிட்டபடி இது ஒரு வருடாந்திர திட்டம் (Annual Plan) ஆகும். அதாவது 365 நாட்களுக்கு சர்வீஸ் வேலிடிட்டியை (365 Days Service Validity) வழங்கும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள், ம் கேம்கள் மற்றும் ம்யூசிக் போன்ற கூடுதல் நன்மைகளும் கிடைக்கும்.
விலை குறைக்கப்படுவதற்கு முன்பாகவே இது நாட்டின் சிறந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்றாக இருந்தது. இப்போது சொல்லவே வேண்டாம். மிகவும் மலிவான விலகி ஆண்டு முழுவதும் சிம் ஆக்டிவ், வாய்ஸ் கால், எஸ்எம்எஸ்களை தேடும் பயனர்களுக்கு இதுவொரு பெஸ்ட் ஆப்ஷன் ஆகும். மறுபடியும், இந்த சலுகை - நவம்பர் 7 வரை மட்டுமே கிடைக்கும் என்பதை நினைவூட்ட விரும்புகிறோம், அதன் பிறகு ரூ.1999 என்கிற வழக்கமாக விலைக்கே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.
வழக்கமாக பிஎஸ்என்எல் தான் அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கும் முன்பாக தனது பண்டிகை கால சலுகைகளை அறிவிக்கும். ஆனால் இந்த 2024 தீபாவளிக்கு ஜியோ முந்திக்கொண்டது. தற்போது வரையிலாக ஜியோ நிறுவனம் - 1 ஆண்டுக்கு இலவச ஜியோ ஏர்ஃபைபர் (Jio AirFiber) சேவை, 2 ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள் மீது ரூ.3350 மதிப்புள்ள சலுகைகள், 2 ஜியோபாரத் 4ஜி மொபைல் போன்கள் (JioBharat 4G Mobile Phones) மீது ரூ.300 விலை குறைப்பு, இலவச ஜியோசாவன் சந்தா (JioSaavn Subscription) என மொத்தம் 4 தீபாவளி ஆபர்களை அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








