ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! இராணுவத்தின் புதிய கேட்ஜெட்.. சுவருக்கு பின்னால் நடப்பதை அப்படியே காட்டுமா?
தொழில்நுட்ப வளர்ச்சி பல கிறுக்குத்தனமான மற்றும் வினோதமான கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்துள்ளது. உண்மையைச் சொல்ல போனால், தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் இதுவரை நாம் சாத்தியமே இல்லை என்று நினைத்த சில காரியங்கள் எல்லாம் சாத்தியமானது தான் என்று நிரூபிக்கப்பட்டு வருகின்றன. அப்படி, சாத்தியமற்றது என்று கருதப்பட்ட ஒரு செயல் இப்போது உண்மையிலேயே சாத்தியமாக்கப்பட்டுள்ளது. அதுவும் தொழில்நுட்பத்தின் உதவியுடன்.

மனித உடலில் முக்கியமான உறுப்பு எது தெரியுமா?
மனித உடலில் உள்ள உறுப்புகளில் மிகச் சிறந்த உறுப்பு எது என்றால் நீங்கள் எதைக் கூறுவீர்கள்? சிலர் இதயம் என்பார்கள், இன்னும் சிலர் நம்மை வினோதமாக யோசிக்க வைக்கும் மூளை என்பார்கள், ஆனால், எங்களின் கருத்துப் படி, மனித கண்களே சிறந்த உறுப்பாகும். கண்கள் இல்லை என்றால், நம்மைச் சுற்றி நடக்கும் எந்தவொரு நிகழ்வையும் நம்மால் கவனிக்க முடியாது. பூமியில் உள்ள அழகான விஷயங்கள் ரசிக்க முடியாது. நமக்கு முன் வரும் ஆபத்துகளை அறிந்து நம்மை நம்மால் பாதுகாத்துக்கொள்ள முடியாது.

மனித கண்கள் ஏன் சிறந்தது மற்றும் ஏன் முக்கியமானது?
இந்த சில காரணங்களால் தான் மனித கண்கள் ஒரு சிறந்த உறுப்பாகக் கருதப்படுகிறது. ஆனால், உங்களுடைய கண்கள் ஒரு குறிப்பிட்ட தூரம் வரையிலான விஷயங்களை மட்டுமே பார்க்க அனுமதிக்கிறது. குறிப்பாக, சில இடையூறுகள் உங்கள் முன் நிற்கும் போது, அதற்குப் பின்னால் நிகழும் விஷயங்களை நம்மால் பார்க்க முடியாது. ஒரு வகையில் இப்படி இருப்பது தான் தனி மனித பிரைவசிக்கு சிறந்தது என்றாலும், இராணுவ வீரர்களுக்கு இது ஒரு பெரிய குறைபாடாகப் பார்க்கப்படுகிறது.

பதுங்கி இருக்கும் எதிரிகளை அடையாளம் காண உதவும் கருவிகள்
ஆம், எதிரிகளை நேருக்கு நேர் போர் களத்தில் ஆயுதங்களுடன் சந்திக்கும் இராணுவ போர் வீரர்களுக்கு இது மிகவும் மோசமானது. குறிப்பாக, பதுங்கி இருக்கும் எதிரிகளை அடையாளம் காண்பது என்பது மிகவும் கடினமானது. இதற்காக இராணுவம் சில பயனுள்ள கேட்ஜெட்களை தயார் செய்து பயன்படுத்தி வருகிறது. இருப்பினும், இதுவரை இராணுவத்திடம் இல்லாத ஒரு புதிய கண்டுபிடிப்பு இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. ஆம், இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் இனி வீரர்கள் சுவர்களுக்குப் பின்னால் இருக்கும் விஷயங்களைக் கூட தெளிவாகப் பார்க்க முடியும்.

இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
சுவர்களுக்குப் பின்னால், மனிதர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்க அனுமதிக்கும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பற்றி உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? சூப்பர்மேன் திரைப்படத்தில் வரும் காட்சியை போல், இப்போது இந்த கண்டுபிடிப்பு செயல்படப்போகிறது. உங்களுக்கும் எனக்கும் இருக்கும் தனியுரிமையை இந்த புதிய கண்டுபிடிப்பு பாதிப்படையச் செய்துவிடுமோ என்றெல்லாம் அதிகமாக யோசித்துவிடாதீர்கள். இதன் பயன்பாட்டை இராணுவம் வேறு சில காரணங்களுக்காக மட்டும் பயன்படுத்தப்போகிறது.

சுவர்களுக்குப் பின்னால் நடப்பதை அப்படியே காண்பிக்கும் தொழில்நுட்பமா?
சுவர்களுக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறியும் புதிய சாதனத்தை கேமரோ-டெக் எனப்படும் இஸ்ரேலிய ஸ்டார்ட்அப் நிறுவனம் தான் உருவாக்கியுள்ளது. ரேடார் அடிப்படையிலான செயல்பாட்டுடன் இந்த புதிய சாதனத்தை உருவாக்கியுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது. இது இராணுவ வீரர்களை "சுவர்கள் வழியாகத் தெளிவாகப் பார்க்க" அனுமதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிவைஸிற்கு நிறுவனம் Xaver 1000 என்று பெயரிட்டுள்ளது.

உயிருள்ள பொருள்களை அடையாளம் காண்பிக்கும்
கேமரோ-டெக் நிறுவனத்தின் இணையதளத்தின்படி, Xaver 1000 என்ற இந்த டிவைஸ், சுவர்களுக்குப் பின்னால் இருக்கும் சூழ்நிலையை அப்படியே ஒரு முழுமையான 3D காட்சியாகப் படம் போட்டு ராணுவ வீரர்களுக்குக் காண்பிக்கிறது. இந்த டிவைஸ் சுவர்களுக்குப் பின்னால் உள்ள "உயிருள்ள பொருள்களை" எளிதாக அடையாளம் காண்பதுடன், அதன் நிலையையும் சுட்டிக்காட்டுகிறது. சுவர்களுக்குப் பின்னால் இருக்கும் மனித நடமாட்டத்தை, மிகத் துல்லியமாகக் கண்டறியும் திறனை இந்த டிவைஸ் கொண்டுள்ளது.

இது எப்படி செயல்படுகிறது தெரியுமா?
இந்த புதிய தொழில்நுட்பம், சுமார் 137 அடி சுற்றளவில் உள்ள சிமென்ட் மற்றும் கான்கிரீட் உள்ளிட்ட அணைத்து வகையான சுவர்கள் மற்றும் பொருட்கள் வழியாக ஊடுருவக் கூடியது என்று கேமரோ-டெக் நிறுவனம் கூறியுள்ளது. இந்த நோக்கத்திற்காக, இதில் பல்ஸ் பேஸ் அல்ட்ரா-வைட்பேண்ட் ரேடர் (pulse-based ultra-wideband radar) பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிவைஸ் 3D அடிப்படையிலான படத்தை WiFi வழியாக HQ தரவை அனுப்புகிறது. இதில் 10' இன்ச் டச் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது.

சுவருக்கு பின்னால் இருப்பது குழந்தையா அல்லது முதியவரா என்பதை கூட காண்பிக்குமா?
இந்த டிஸ்பிளே சுவர்களுக்குப் பின்னால் இருக்கும் உயிர் உள்ள பொருட்களை அதன் நடவடிக்கையுடன் தெளிவாக வீரர்களுக்குக் காண்பிக்கிறது. சுவருக்குப் பின்னால் இருப்பவர் வயது வந்தவரா அல்லது குழந்தையா அல்லது அது ஒரு மிருகமா என்பதைக் கூட இந்த தொழில்நுட்பம் தெளிவாக தடம் பிரித்து அடையாளம் காட்டுகிறது என்பது கூடுதல் சிறப்பு. அதேபோல், அந்த நபர்கள் நிற்கிறார்களா அல்லது உட்கார்ந்திருக்கிறார்களா அல்லது நடந்துகொண்டிருக்கிறார்களா என்பதைக் கூட தெளிவாகக் காண்பிக்கும் திறன் கொண்டுள்ளது.

போரில் எதிரிகளை அடையாளம் கண்டு அழிப்பதை தவிர இது எதற்கு பயன்படுத்தப்படும்?
இந்த டிவைஸின் ஒட்டுமொத்த எடை 16 கிலோவாகும். இதை ஒற்றை நபர் இயக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இது மடிக்கக்கூடிய ஆண்டெனாவால் ஆதரிக்கப்படுகிறது என்பதனால், இவற்றை இராணுவ வீரர்கள் எந்தவிதமான சூழலிலும் பயன்படுத்தலாம். இப்படி ஒரு டிவைஸை, இராணுவம் போரின் போது எதிரிகளை அடையாளம் கண்டு அழிப்பதற்கு மட்டும் பயன்படுத்தப்படுவதைத் தவிர்த்து இன்னும் சில காரியங்களுக்காக இதைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

இதற்காக பயன்படுத்தப்பட்டால் சூப்பர் தான்
குறிப்பாக இயற்கை பேரழிவுகள் மற்றும் விபத்துகளுக்குப் பிறகு நடக்கும் தேடல் செயல்பாடுகளுக்கு இந்த டிவைஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதேபோல், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளின் போது இந்த தொழில்நுட்பம் பெரிதும் பயனளிக்கும் என்று கூறப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்கள் முதியவர்களா, குழந்தைகளா அல்லது செல்லப்பிராணிகளா என்பதை இந்த டிவைஸ் எளிதாக அடையாளம் காணும் என்பதால் இதை மீட்பு பணிக்காகவும் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications