சத்தமின்றி 300 ரூபாய் கேஷ்பேக் வழங்கும் UPI செயலி.. பணம் அனுப்பினால் போதும்.. இதோ முழு விவரம்..
இந்தியாவில் உள்ள மக்கள் கூகுள் பே, போன்பே, பேடிஎம், பீம் போன்ற யுபிஐ செயலிகளை அதிகம் பயன்படுத்துகின்றர். குறிப்பாக இந்த செயலிகள் அவ்வப்போது சலுகைகளை வழங்குகின்றன. அந்த வகையில் தற்போது பீம் (BHIM) செயலி ஆனது கேஷ்பேக் சலுகை வழங்கும் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
பணப் பரிவர்த்தனை செயலியான பீம் தற்போது கர்வ் சே ஸ்வதேஷி (Garv Se Swadeshi) என்ற ஒரு புதிய விளம்பரப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் என்னவென்றால் நம் நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையைக் கொண்டு சேர்ப்பதாகும்.

தற்போது இதன் ஒரு பகுதியாக தான் புதிய பயனர்களுக்கு BHIM செயலி கேஷ்பேக் சலுகைகளை வழங்குகிறது. இது நம் நாட்டில் யூபிஐ பயன்பாட்டை மேலும் வலுப்படுத்தும் என்று கூறப்படுகிறது. மேலும் பீம் செயலி ஆனது இந்த மாத இறுதியில் தனது 10-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. இந்த சிறப்புச் சலுகை ஆனது கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வழங்கப்படுகிறது.
300 ரூபாய் வரை கேஷ்பேக்
குறிப்பாக புதிய பயனர்கள் ரூ.20 அல்லது அதற்கு மேற்பட்ட தங்களது முதல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ரூ.20 கேஷ்பேக் சலுகையைப் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பீம் செயலியை உருவாக்கிய NBSL ஆனது புதிய வாடிக்கையாளர்கள் தங்கள் அன்றாட ஷாப்பிங்கிற்கு பீம் செயலியைப் பயன்படுத்தினால் தகுதியான பரிவர்த்தனைகளுக்கு மாதத்திற்கு 300 ரூபாய் வரை கேஷ்பேக் பெறலாம் என்று தெரிவித்துள்ளது.
அதுவும் பஸ் டிக்கெட், மெட்ரோ ரயில் டிக்கெட், ப்ரீபெய்ட் ரீசார்ஜ்கள், மளிகைப் பொருட்கள், மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணங்கள், பெட்ரோல் செலவுகள் போன்ற பரிவர்த்தனைகளுக்கு இந்த சலுகைகளை மக்கள் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு கூறியபடி, நாட்டில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளின் பயன்பாட்டை வலுப்படுத்தவும், முதல் முறை டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்பவர்களுக்கும் உள்ள தடைகளை நீக்குவதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
அதேபோல் இந்த பீம் செயலி ஆனது 15க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் சேவையை வழங்கி வருகிறது. விளம்பரங்கள் இல்லாத ஒரு இடைமுகத்தையும் இது வழங்குகிறது. இன்டர்நெட் மெதுவாகச் செயல்படும் பகுதிகளிலும் இந்த செயலி சீராகச் செயல்படுகிறது. அதேபோல் இந்த இந்த செயலியில் UPI Circle Full Delegation என்ற அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டது. இது பயனர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகளுக்குக் குறிப்பிட்ட வரம்பிற்குள் யூபிஐ மூலம் பணம் அனுப்ப அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிக்கையின்படி, பீம் செயலியுடன் இணைந்து யுபிஐ டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் 49 சதவீதத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக இது உலகின் மிகப்பெரிய நிகழ்நேர டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அமைப்பாக உருவெடுத்துள்ளது. அதுவும் 2016-ம் ஆண்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட பிறகு இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
அதன்படி பணம் அனுப்புவது, ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்வது, ஷாப்பிங் செய்வது, பில் கட்டணம், டிக்கெட்டுகள் என அனைத்து தேவைகளுக்கும் மக்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள யுபிஐ செயலிகளைத் தான் பயன்படுத்துகின்றனர். அதை ஊக்குவிக்க அரசு தரப்பில் இதுபோன்ற சலுகைகளும் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








