ஏர்டெல், ஜியோ,Vi: 2021-ம் ஆண்டில் வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிகப்படியான புகார்கள்:எந்த நிறுவனம் முதல் இடம்
ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்கள் சமீபத்தில் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தின. குறிப்பாக 20 சதவிகிதம் வரை இந்நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2021-ம் ஆண்டில் வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிகப்படியான புகார்களைப் பெற்ற டெலிகாம் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது ட்ராய் அமைப்பு.

குறிப்பாக 2021-ம் ஆண்டில் வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிகப்படியான புகார்களை பெற்ற டெலிகாம் நிறுவனங்களின் பட்டியலில் ஏர்டெல் நிறுவனம் முதல் இடத்தில் இருப்பதாக ட்ராய் அமைப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது நாடாளுமன்றத்தில் ட்ராய் வெளியிட்ட அறிக்கையை தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியது என்னவென்றால், ட்ராய் கொடுத்துள்ள அறிக்கையின் அடிப்படையில் 2021-ம் ஆண்டு முழுவதுமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிகமான புகார்களை பெற்ற நிறுவனங்களின் பட்டியலில் ஏர்டெல் நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது. அதுவும் ஏர்டெல் நிறுவனத்தின் மீது மட்டும் சுமார் 16,111 புகார்கள் 2021-ம் ஆண்டில் பெறப்பட்டுள்ளதாக கூறினார்.

அடுத்து இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது வோடபோன் ஐடியா நிறுவனமாகும். அதாவது வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு எதிராக சுமார் 14,487 புகார்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். அதாவது இந்த ஆண்டில்ஜியோ நிறுவனத்திற்கு எதிராக 7341 புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் எம்டிஎன்எல் (MTNL) மீது732 புகார்களும், பிஎஸ்என்எல் மீது 2913 புகார்களும் வாடிக்கையாளர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று ட்ராய்அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பாக இவை அனைத்தும் ட்ராய் அமைப்பிடம் நேரடியாக வந்த புகார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக
விதிப்படி தனி நபர்களின் புகார்கள் ட்ராய் சரி செய்வது இல்லை என்றாலும் 2021-ம் ஆண்டில் வந்த தனி நபர்களிடமிருந்து வந்த புகார்கள் அனைத்தும் உரிய டெலிகாம் நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் நாடாளுமன்றத்தில் இணை அமைச்சர் வெளியிட்டுள்ள தகவலின்படி, வாடிக்கையாளர்கள் தங்கள் டெலிகாம் நிறுவனம் குறித்து புகார்களை நிச்சயமாக ட்ராய் அமைப்பிடம் பதிவு செய்யலாம். அதன்பின்பு புகார்களுக்கு உரிய டெலிகாம் நிறுவனங்கள் புகார்கள் குறித்து சரியான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் ட்ராய் இடமே மேல்முறையீடும் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வருகிற 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 4ஜி சேவையை முழு வீச்சில் அறிகம் செய்ய உள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக பிஎஸ்என்எல் 4ஜி சேவையை அறிமுகம் செய்தால் கண்டிப்பாக பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications