எச்சரிக்கை: 5G அப்டேட் பேரில் வரும் மெசேஜ்கள்.. தொட்டால் கெட்டோம்! குறிப்பா நீங்க.!
இந்தியாவில் 5G சேவை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட நாளில் இருந்து 5ஜி சேவைக் கிடைக்கும் பகுதிகள் வேகமாக விரிவடைந்து வருகிறது. கொரோனா போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் அதன் பேரிலேயே மோசடி செய்தவர்கள் 5ஜியை மட்டும் விட்டுவைப்பார்களா என்ன?.

விஐ பயனர்களே உஷார்
இதுகுறித்து தனியார் செய்தித்தளத்தில் வெளியான அறிக்கைப்படி, வாட்ஸ்அப் மற்றும் சாதாரண மெசேஜ்கள் மூலம் விஐ இன் அதிகாரப்பூர்வ தகவல் போல் வேடமிட்டு மோசடிக்காரர்கள் மெசேஜ்கள் அனுப்புகின்றனர். சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் விஐ அதிகார்ப்பூர்வ மெசேஜ் போன்று அனுப்பப்படுகிறது. இதில் உள்ள லிங்க்கை கிளிக் செய்யும்படி அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பணம் திருடுவது நோக்கம்
பல எஸ்எம்எஸ்களில் உள்ள லிங்க்குகள் பேடிஎம் கணக்குடன் இணைக்கப்படுவதாக அறிக்கை தகவல் கூறுகிறது. இந்த மொத்த மெசேஜ்களும் பணம் திருடுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. அது என்ன மெசேஜ் என்று பார்க்கலாம்.

வரும் மெசேஜ்கள்
"வணக்கம்! Vi நெட்வொர்க் 5Gக்கு மேம்படுகிறது! உங்கள் நெட்வொர்க் அனுபவம் இப்போது சிறப்பாக இருக்கும். உங்கள் அனுபவத்தை மேம்படுத்த தரவுப் பயன்பாட்டைத் தொடங்கவும்" என்று மெசேஜ் அனுப்பப்படுகிறது. இணைய வேகம் சிறப்பாக இருக்கும் என எண்ணி நாமும் அந்த லிங்க்கை கிளிக் செய்தால் அவ்வளவுதான். பல நூதனமுறைகளில் உங்கள் கணக்கில் இருந்து பணம் திருடப்படும்.

அலட்சியம் காட்ட வேண்டாம்
வோடபோன் ஐடியா, இதுபோன்ற எந்த மெசேஜ்களையும் அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் இந்தியாவில் அதன் 5ஜி சேவைகளை தொடங்கவே இல்லை என்பது தான்.
மோசடி செயல்கள் தொடர்ந்து ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டே இருக்கிறது. ஒரு மோசடி செயல் நடந்தால் அது அங்கு தானே நடந்திருக்கிறது இங்கு வரவில்லையே என்றும் யாருக்கோ நடந்திருக்கிறது நமக்கெல்லாம் நடக்க வாய்ப்பில்லை என்றும் அலட்சியம் காட்ட வேண்டாம்.

கட்டணம் செலுத்தும் மோசடி
டிஜிட்டில் இந்தியாவில் ஒவ்வொரு செயலிலும் கவனமாக இருப்பது அனைவரின் கடமையாகும்.
பெங்களூருவை சேர்ந்த அரவிந்த் குமார் என்ற 56 வயதான தொழிலதிபர் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தும் மோசடியில் சிக்கி ரூ.4.9 லட்சத்தை இழந்திருக்கிறார். தி இந்துவில் வெளியாகி உள்ள அறிக்கைப்படி, பாதிக்கப்பட்டவர் பெங்களூருவில் உள்ள சாமராஜப் பேட்டையில் வசித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.

கட்டணத்தை எப்படி செலுத்துவது
அதில், BESCOM (பெங்களூர் மின்சார விநியோக நிறுவனம் லிமிடெட்) அதிகாரி போல் ஒருவர் தன்னை தொடர்பு கொண்டு பேசினார். அதில் மின்கட்டணம் பாக்கி இருப்பதாகவும் உடனடியாக பணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் தெரிவித்தார். கட்டணத்தை எப்படி செலுத்துவது என்று கேட்டபோது, மறுபுறம் பேசியவர் Teamviewer Quick support மொபைல் செயலியைப் பதிவிறக்குவதற்கான இணைப்பை அனுப்பி இருக்கிறார்.

கணக்கில் இருந்து பணம் அபேஸ்
இதையடுத்து அரவிந்த் குமார், அந்த செயலியை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்ட சில விவரங்களையும் பூர்த்தி செய்யத் தொடங்கி இருக்கிறார். அடுத்த சில வினாடிகளில் அரவிந்த் குமாரின் வங்கிக் கணக்கில் இருந்த மொத்த பணமும் மற்றொரு கணக்கிற்கு மாற்றப்பட்டிருக்கிறது. கணக்கில் இருந்து சுமார் ரூ.4.9 லட்சம் வரை திருடப்பட்டிருக்கிறது.

ரிமோட் அணுகல் மூலம் மோசடி
இதையடுத்து அரவிந்த்குமார் சைபர் பிரிவு போலீஸாரை அணுகி புகார் அளித்திருக்கிறார். காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இங்கு கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அரவிந்த் குமார் செயலியைப் பதிவிறக்கம் செய்து அணுகல் விவரங்களைப் பகிர்ந்து கொண்டபோது, மோசடி செய்பவர்கள் அவரது ஸ்மார்ட்போனுக்கு ரிமோட் அணுகலை அனுப்பி இருக்கின்றனர். அதன்மூலம் அவரது ஸ்மார்ட்போனில் சேமிக்கப்பட்ட அனைத்து வங்கி விவரங்களையும் திருடி இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications