UPI சேவைக்கு இப்படியொரு சோதனையா? கையில் பணம் கொடுங்க.. பெங்களூரு வியாபாரிகள் அதிரடி அறிவிப்பு..
இந்தியாவில் சிறிய கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர். அதுவும் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ (UPI) செயலிகளை மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
அதாவது ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைகளுக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது என்பது தான் உண்மை. ஆனால் டெக் நிறுவனங்கள் அதிகம் இருக்கும் பெங்களூருவில் இந்த யுபிஐ சேவைக்கு புதிய சோதனை வந்துள்ளது.

அதாவது பெங்களூருவைச் சேர்ந்த சில வணிகர்கள் திடீரென தங்களுடைய கடைகளில் இனிமேல் யுபிஐ பேமென்ட் ஏற்றுக்கொள்ளவே மாட்டோம் எனவும், பணம் மட்டுமே இங்கே செல்லும் என்று ஸ்டிக்கர் ஒட்டி இருக்கிறார்கள். அதுவும் பெங்களூருவில் பல கடைக்காரர்கள் தங்கள் கடைகளில் ஒட்டி இருந்த கியூ ஆர் கோடு ஸ்டிக்கர்களை நீக்கி விட்டார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
டெக் நிறுவனங்கள் அதிகம் இருக்கும் பெங்களூருவில் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருப்பது தற்போது பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. அதுவும் இந்தியாவில் நடைபெறும் யுபிஐ பரிவத்தனைகளில் 7 சதவீதம் கர்நாடகாவில் தான் நடக்கிறது.
எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட தகவலின்படி, ஹொரமாவுவைச் (Horamavu) சேர்ந்த மளிகைக் கடைக்காரர் ஒருவர் இது குறித்து கூறுகையில், ஒரு நாளைக்கு நாங்கள் ரூ.3000க்கு தான் தொழில் செய்கிறோம். அதில் ஒரு சிறிய அளவுதான் எங்களுக்கு லாபம் கிடைக்கிறது. அதையும் வரி கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பினால் என்ன செய்வது என்று கூறியுள்ளார்.
குறிப்பாக சாலையோர கடைகளை நடத்துபவர்கள், டீக்கடை நடத்துபவர்கள், தள்ளுவண்டி வைத்திருப்பவர்களுக்குக் கூட ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவே பல்வேறு வணிகர்களுக்கும் யுபிஐ பேமென்ட்களுக்கு மாற்றாக மீண்டும் பணத்தை வழங்குமாறு கூறுவதற்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.
அதுவும் பெங்களூருவில் இருக்கும் சில வணிகர்கள் யுபிஐ பேமெண்ட் ஏற்க மாட்டோம், உங்களிடம் பணம் இருந்தால் செலுத்துங்கள் இல்லையெனில் இங்கே வராதீர்கள் என்று கூறுவதாகப் பெங்களூர் மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஜிஎஸ்டி அதிகாரிகளே வணிகர்கள் இந்த முடிவுக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.
அதேசமயம் ஜிஎஸ்டி நோட்டீஸை காட்டி மாநகராட்சி அதிகாரிகள் பல தள்ளுவண்டிக் கடைகளை அகற்றி வருகின்றனர் எனவும் இதனால் வணிகர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் ஒருவர் வணிகம் சரக்கு அல்லது பொருட்களை விநியோகம் செய்து அதன் மூலம் ஆண்டு வருமானம் 40 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் கட்டாயம் ஜிஎஸ்டியில் பதிவு செய்திருக்க வேண்டும், ஜிஎஸ்டி வரியைச் செலுத்தி ஆக வேண்டும்.
இதுவே அவர்கள் சேவை சார்ந்த தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்றால் அவர்களுடைய ஆண்டு வருமானம் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும்போது கட்டாயம் ஜஎஸ்டியில் பதிவு செய்து வரி செலுத்தியாக வேண்டும் என்று கூறப்படுகிறது.

ஆனால் கர்நாடக வணி வரித்துறை அதிகாரிகள் யுபிஐ சேவை நிறுவனங்களிடம் வணிகர்களின் யுபிஐ பரிவர்த்தனை விவரங்களைப் பெற்று அதன் அடிப்படையில் ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் என்று கர்நாடக மாநில வணிகவரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக வணிகர்கள் பதற்றம் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொண்டிருக்கும் அந்த அதிகாரி தற்போதைக்கு நோட்டீஸ் மட்டுமே அனுப்பப்பட்டிருக்கிறது, இவர்கள் நேரடியாக வந்து தங்களது நிதி சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு விளக்கம் தரலாம் என கூறியுள்ளனர்.பின்பு இதுதொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் அதன் அடிப்படையில் அவர்களுக்கு வரி இருக்குமா அல்லது இல்லையா என்பது பிறகு முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். ஆனாலும் ஜிஎஸ்டி நோட்டீஸால் வணிகர்கள் அச்சமடைந்து யுபிஐ பேமெண்ட் வேண்டாம் என கூறுவது பொதுமக்கள்ககு அதிக சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications








