பழைய 1 ரூபாய் நாணயத்திற்கு 1 கோடி தருவதாக மோசடி.. 'இந்த' தவறை நீங்களும் செய்யாதீர்கள்..
பெங்களூரு: ஆன்லைன் மார்க்கெட்டிங் தளம் மூலம் பழைய 1 ரூபாய் நாணயத்தை விற்க முயன்றபோது 38 வயதான ஆசிரியர் சமீபத்தில் சைபர் கிரைம் கும்பலிடம் சிக்கி ரூ .1 லட்சத்தை இழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் செய்த அதே தவறை நீங்களும் செய்யாமல் பாதுகாப்பாக இருங்கள்.

1947 ஆம் ஆண்டு பதிக்கப்பட்ட பழைய ஒரு ரூபாய் நாணயம்
சர்ஜாப்பூர் மெயின் ரோட்டில் உள்ள கைகொண்ட்ரஹள்ளியைச் சேர்ந்த தனியார்ப் பள்ளி ஆசிரியை சாந்தா ஜே, தனது மகள் பழைய நாணயங்களை விற்று லட்சம் ரூபாய் சம்பாதிப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆன்லைனில் ஒரு செய்தி அறிக்கையைப் படித்ததாக அவரிடம் தெரிவித்திருக்கிறார். 1947 ஆம் ஆண்டு பதிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் தன்னிடம் இருப்பதைச் சாந்தா ஜே அறிந்தார்.

பழைய 1 ரூபாய் நாணயத்திற்கு ரூ .10 லட்சம்
ஆகையால், அவரின் மகள் கூறியது போல ஆன்லைனில் அந்த பழைய 1 ரூபாய் நாணயத்தை விலைக்கு விற்க முடிவு செய்திருந்தார். அதற்காக, ஜூன் 15 ஆம் தேதி அன்று ஒரு ஆன்லைன் மார்க்கெட்டிங் மேடையில் ஒரு விளம்பரத்தைப் பதிவேற்றினார், நாணயத்தை ரூ .10 லட்சத்திற்கு விற்கச் சாந்தா ஜே முன்வந்தார் என்று கூறப்படுகிறது. இந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சாந்தா ஜேவை போனில் அழைத்துத் தொடர்புகொண்டுள்ளார்.

பழைய 1 ரூபாய் நாணயத்தை ரூ .1 கோடிக்கு வாங்க ரெடி
அந்த பழைய 1 ரூபாய் நாணயத்தை அந்த அடையாளம் தெரியாத நபர் ரூ .1 கோடிக்கு வாங்க ஆர்வம் காட்டினார் என்று கூறப்படுகிறது. அவர் சாந்தா ஜேவின் அடையாளச் சான்று மற்றும் வங்கி விவரங்களைச் சேகரித்து, பணத்தை மாற்றுவதாகக் கூறியுள்ளார். அவர் எனது வங்கிக் கணக்கிற்குப் பணத்தை மாற்றத் தயாராக இருப்பதாகக் காட்டி, ஒப்புதலின் ஸ்கிரீன் ஷாட்டை எனக்கு அனுப்பினார், அவர் உண்மையானவர் என்று நான் நம்பினேன், நாணயத்தை விற்க ஒப்புக்கொண்டேன் என்று சாந்தா ஜே கூறியுள்ளார்.

ஸ்விஃப்ட் (swift) குறியீடு கட்டணம் செலுத்த வேண்டுமா?
பின்னர், பழைய 1 ரூபாய்க்கான 1 கோடி ரூபாய் ஒப்பந்தத்தை முடிக்கச் செயலாக்கக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அந்த அடையாளம் தெரியாத நபர் கூறியுள்ளார். ஸ்விஃப்ட் (swift) குறியீடு கட்டணம், ரிசர்வ் வங்கி கட்டணம் மற்றும் வருமான வரி என்ற பெயரில் இந்த மூன்று செயலாக்கக் கட்டணத்தைச் சாந்தா ஜே செலுத்தினால் மட்டுமே 1 கோடி ரூபாய்க்கான பரிவர்த்தனைக்கு அனுமதி கிடைக்கும் என்று அந்த நபர் சாந்தா ஜேவிடம் கூறியிருக்கிறார்.

இவர் செய்த 'இந்த' தவறை நீங்களும் செய்யாமல் இருங்கள்
அவர் சொன்னதை நம்பி சாந்தா ஜே தனக்கு நெருக்கமானவர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து பல பரிவர்த்தனைகளை மேற்கொண்டு ரூ. 1,00,600 ரூபாயை கடனாக பெற்றிருக்கிறார். பழைய 1 ரூபாய் நாணயத்தை வாங்க முயன்ற அடையாளம் தெரியாத நபர் தான் ஒரு வங்கியில் பணிபுரிந்ததாகக் கூறியது குறிப்பிடத்தக்கது. அவர் அருமையாக ஆங்கிலத்தில் பேசினர் மற்றும் பணத்தை மாற்றுவதற்காக அவளுக்கு மூன்று வங்கி கணக்குகளைக் கொடுத்தார் என்று சாந்தா ஜே போலீசில் கூறியுள்ளார்.

பல பிரிவின் கீழ் வழக்கு பதிவு
பரிவர்த்தனைகள் செய்யப்பட்ட பின்னர், சாந்தாவுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட பணம் கிடைக்கவில்லை, நாணயம் வாங்க பேசிய நபரின் தொலைப்பேசி எண்ணையும் சாந்தாவால் அணுக முடியவில்லை. ஐபிசி பிரிவு 419 (ஆளுமை மூலம் மோசடி செய்ததற்கான தண்டனை) மற்றும் 420 (மோசடி), மற்றும் 66 (சி) மற்றும் 66 (டி) பிரிவுகளின் கீழ் தற்பொழுது வைட்ஃபீல்ட் சிஎன் குற்றவியல் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

பாதுகாப்பாக இருக்க இதை செய்ய மறக்காதீர்கள்
இவர் செய்த அதே தவறை நீங்களும் செய்யாமல் பாதுகாப்பாய் இருங்கள், பழைய நாணயங்களை எந்தவொரு ஆன்லைன் போர்டல் வழியாக நீங்கள் விற்பனை செய்ய முயன்றாலும் சரி, அதற்கு நீங்கள் எந்த ஒரு கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். விளம்பரத்தைப் பார்த்துவிட்டு அழைப்பு மூலம் தொடர்புகொள்ளும் நபர்கள் பணம் செலுத்துவதற்குப் பதிலாக உங்களிடமிருந்து பணத்தைக் கேட்டால், அது மோசடிக்கான வலை என்று அறிந்து நீங்களே உஷாராக விலகிக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications