18 வயதுக்கு கீழ் மொபைல் பயன்படுத்த தடை! மீறினால் அபராதம் உறுதி.. கட்டளை போட்ட கிராமம்.!
குழந்தைகளுக்கு நிலாவை காண்பித்து சோறு ஊட்டிய காலம் எல்லாம் மலையேறி மொபைலை காட்டி சோறு ஊட்டும் காலம் வந்துவிட்டது. குழந்தைப் பருவம் முதலே mobile மனிதர்களை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டது. இந்தக் காலக்கட்டத்தில் மொபைல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது என்றாலும் அதன்மூலம் வரும் ஆபத்துகளை அறிந்து கொள்வதும் அவசியம்.

மனிதர்களை ஆக்கிரமிக்கும் மொபைல்
நாம் தான் காசுக் கொடுத்து வாங்குகிறோம் நாம் தான் நெட் கார்ட் போடுகிறோம் இதில் என்ன பிரச்சனை என்று கேட்கலாம். நினைத்தாலும் வாங்க முடியாத ஒன்று நேரம். அதனால் தான் காலம் பொன் போன்றது என்பார்கள். அத்தகை பொன்னான நேரத்தை நாம் மொபைலில் கட்டுப்பாடின்றி செலவிடுகிறோம்.
ஏதோ ஒரு பயன்பாட்டுக்காக மொபைலை எடுத்து எதுஎதுக்குள்ளோ சென்று எவ்வளவு நேரம் மொபைலை பயன்படுத்துகிறோம் என்று தெரியாமல் காலத்தை தொலைப்பவர்கள் ஏராளம்.

குழந்தைகளை ஆட்கொள்ளும் ஸ்மார்ட்போன்கள்
சரி, நமக்கு தான் இப்படி என்றால். இதே பழக்கத்தை குழந்தைகளுக்கும் பழகிவிட்டோம். குழந்தைப்பருவம் முதலே அவர்களுக்கு மொபைலை காட்டி பழக்கிவிடுகிறோம். குழந்தைகளின் கவனத்தை திசைத் திருப்பவும் அதன் அழுகையை நிறுத்தவும் நினைத்து இதை செய்கிறோம். ஆனால் பின் விளைவை சிந்திப்பதில்லை. குறிப்பாக குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும் போது மொபைலை காட்டி பழகிவிடுகிறோம். அதாவது நாம் தான் அவர்களுக்கு சிறுவயது முதலே பழக்கி வருகிறோம் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

ஆன்லைன் வகுப்பு முறைகள்
அதற்கேற்ப ஆன்லைன் வகுப்பு முறைகளும் நடைமுறைக்கு வந்துவிட்டது. கொரோனா முடிந்து பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டாலும், கூடுதல் படிப்புக்கு என சிறுவர்களை ஆன்லைன் வகுப்புக்கு சேர்த்துவிடுபவர்கள் ஏராளம். இந்த அனைத்து செயல்பாடுகளிலும் புத்தகம் படித்தல் என்ற முறையே ஒழிந்துவிட்டது. அனைத்தையும் மொபைலில் காண்பித்து மொபைல் தான் எல்லாமே என சிறுவர்களுக்கு தோன்றத் தொடங்கிவிடுகிறது.

மொபைலுக்கு முக்கியத்துவம்
மொபைல் எண், தேதி, படித்தப்படிப்பு என அனைத்தையும் நியாபகம் வைத்துக் கொண்ட காலம் எல்லாம் மலையேறிவிட்டது. நமக்கு பிடித்தவர்கள் பிறந்த தேதி கூட நியாபகம் இல்லை. கேட்டால் அதான் மொபைல் இருக்கிறதே அதில் பார்த்தால் தெரியப்போகிறது என்ற எண்ணம் வந்துவிட்டது. ஒரு சிறிய அடிப்படை விஷயம் வேண்டும் என்றால் அனைவரும் நாடுவது கூகுள் தான். கூகுள் அவசியம் தான் அதன்மூலம் பல விஷயங்கள் கற்றுக் கொள்ளலாம் ஆனால் அடிப்படை விஷயத்துக்கே கூகுள் என்றால் சிரமம் தானே.

டிஜிட்டல் இந்தியா
இந்தியாவில் 5ஜி அறிமுகமாகிவிட்டது இனி அடுத்தக்கட்ட முன்னேற்றம் நோக்கி தான் நகரப்போகிறோம் என்பது உறுதி. குறிப்பாக இந்த டிஜிட்டல் யுகத்தில் அனைத்துக்கும் மொபைல் கட்டாயம். மத்திய அரசின் "டிஜிட்டல் இந்தியா" கொள்கை பல கட்டம் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்த காலத்தில் இது சாத்தியமா?
இந்த டிஜிட்டல் யுகத்தில் காலத்தோடு இணைந்து ஓடுவது தான் சரி. இருப்பினும் வயது அடிப்படையிலாவது மொபைலை கட்டுப்படுத்தலாம் தானே. இப்படி செய்வதன் மூலம் சிறுவர்கள் அதாவது 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மொபைலை பயன்படுத்தக் கூடாது என கட்டுப்பாடு விதித்தால் தங்கள் கவனத்தை புத்தகத்திலும் விளையாட்டிலும் செலுத்துவார்கள். பப்ஜி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளில் ஏற்படும் தோல்வியால் தற்கொலை போன்ற செயலை மேற்கொள்ளமாட்டார்கள்.
இதெல்லாம் இந்த காலத்தில் சாத்தியமா என்ற கேள்வி வரலாம். சிறிய துளி தான் பெரிய வெள்ளத்துக்கு காரணம் என்பது போல் இந்தியாவில் ஒரு கிராமம் இதை செயல்படுத்தத் தொடங்கி இருக்கிறது.

18 வயதுக்கு கீழ் மொபைல் தடை
மகாராஷ்டிரா மாநிலம் மேற்கு விதர்பா பகுதியில் உள்ள யவத்மால் மாவட்டத்தில் பான்சி என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் கடந்த சில தினத்திற்கு முன்னர் கிராமக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கிராமத்தில் இருக்கும் குழந்தைகளிடையே மொபைல் பயன்பாடு அதிகரித்து வருவது குறித்தும் அதை கட்டுபடுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த விவாதத்தின் முடிவில் 18 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் மொபைல் பயன்படுத்தவதை தடை செய்வதாக முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

மீறினால் அபராதம் உறுதி
இதையடுத்து பான்சி கிராம நிர்வாக தலைவர் கஜானன் டேல், யவத்மால் மாவட்டத்தில் உள்ள பான்சி கிராமத்தில் 18 வயது நிரம்பாதவர்கள் மொபைல் பயன்படுத்த தடை விதிப்பதாக அறிவித்தார்.
மீறி பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமத் தலைவரின் முடிவுக்கு கிராம மக்களும் ஒப்புதல் அளித்துள்ளனர் என கூறப்படுகிறது.

குழந்தைகளின் நலனுக்காக இந்த நடவடிக்கை
கிராம மக்கள் இந்த முடிவுக்கு ஆதரவு அளித்துள்ளனர் எனவும் மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் கிராம நிர்வாக தலைவர் கஜானன் டேல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இதுகுறித்து கூறுகையில், அபராதத் தொகை இன்னும் முடிவு செய்யவில்லை இதை செயல்படுத்துவதில் இருக்கும் சிக்கலை நன்கு அறிவோம் இந்த சிக்கல்கள் கவுன்சிலிங் வழங்குவதன் மூலம் அகற்றுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். கிராம குழந்தைகளின் நலனுக்காக இந்த நடவடிக்கை எனவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications