விஸ்வரூபம் எடுக்கும் Vodafone,Airtel விவகாரம்: அவர்கள் இழுத்து மூடினால் பாதிப்பு நமக்கே- SBI அதிரடி
டெலிகாம் நிறுவனங்கள் திவால் நோட்டீஸ் அளித்தால் வங்கிகள் தான் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எஸ்பிஐ வங்கி சேர்மன் ரஜ்னீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

புதிய தொலைத்தொடர்பு கொள்கை
புதிய தொலைத்தொடர்பு கொள்கை 1999-ன்படி, ஒவ்வொரு தொலைத் தொடர்பு நிறுவனங்களும், ஏ.ஜி.ஆர்., எனப்படும் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஆண்டு உரிம கட்டணமாக மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும்.

மத்திய அரசு விதிமுறைகள்
அதேபோல், மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 'ஸ்பெக்ட்ரம்' எனப்படும் அலைக்கற்றை அளவுக்கு ஏற்ப பயன்பாட்டுக் கட்டணத்தை செலுத்த வேண்டும். மொபைல் போன் மற்றும் தொலைத் தொடர்பு சேவையின் மூலம் கிடைக்கும் வருவாயைத் தவிர மற்ற வழிகளில் கிடைக்கும் வருவாயையும் ஏ.ஜி.ஆர்., கணக்கில் சேர்க்க வேண்டும் என விதிமுறைகள் விதிக்கப்பட்டது.

மொத்தம் 1.33 லட்சம் கோடி நிலுவை
நிலுவையில் இருந்த தொகை அதன்படி, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிற தொலைதொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய உரிம கட்டணமான ரூ.92 ஆயிரம் கோடி மற்றும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டு கட்டணமான ரூ. 41 ஆயிரம் கோடி என மொத்தம் 1.33 லட்சம் கோடி நிலுவையில் இருந்தது.

உச்சநீதிமன்றம் உத்தரவு
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அக்டோபர் 24 ம் தேதி தொலைதொடர்பு நிறுவனங்கள் ரூ. 92 ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, ஏர்டெல் நிறுவனம் சுமார் ரூ.21 ஆயிரம் கோடி, வோடபோன் ஐடியா நிறுவனம் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் சுமார், ரூ.16 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும். அதோடு, பி.எஸ்.என்.எல் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி, எம்.டி.என்.எல் சுமார் ரூ.2 ஆயிரம் கோடியும் பாக்கி வைத்திருக்கிறது.

வரலாறு காணாத நஷ்டம்
வோடபோன், ஐடியா கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. நடப்பு ஆண்டிற்கான இரண்டாவது காலாண்டில் மட்டும் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.50 ஆயிரத்து 922 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறியுள்ளது. அண்மைக் காலக்கட்டத்தில் எந்த ஒரு நிறுவனமும் இவ்வளவு நஷ்டத்தை சந்தித்தது இல்லை.

ஏர்டெல் நிறுவனமும் நஷ்டம்
ஏர்டெல் நிறுவனமும் இதுவரை இல்லாத அளவிற்கு இரண்டாம் காலாண்டில் 23 ஆயிரத்து 45 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் கடும் நெருக்கடி சந்தித்து வருவதாக ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது.

வோடபோன் கோரிக்கை
இந்தியாவில் தொலைத் தொடர்பு தொழில் முதலீடு வாய்ப்பு மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், அதற்கு காரணம் இந்தியாவில் தொலைத் தொடர்பு நிறுவனம் தொடங்க உரிமம் பெறுவதற்கு கூடுதல் கட்டணம், அதிக வரி, நெருக்கடியான விதிமுறைகள் என வோடபோன் நிறுவனம் தெரிவித்தது. அதேபோல் அரசு, மற்ற நிறுவனங்களுக்கு வழங்கும் சலுகைகளை தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் எனவும் வோடபோன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது.

கட்டணத்தை உயர்த்தத் திட்டம்
இதையடுத்து நஷ்டத்தை சமாளிக்க அடுத்த சில தினங்களில் வோடபோன் ஐடியா, ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் வாடிக்கையாளருக்கான கட்டண சேவையை உயர்த்தி அறிவித்தன.

ஜனவரி 20ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்
இந்த நிலுவைத் தொகையை ஜனவரி 20ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது வரை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அத்தொகையை முழுமையாகச் செலுத்தவில்லை. இதற்கிடையே, நிலுவைத் தொகை வசூலிக்கப்படும் வரை நடவடிக்கை எடுக்க வேண்டாம் என தொலைதொடர்பு துறையின் உரிம நிதிப்பிரிவு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தது.

நீதிபதிகள் கடும் கண்டனம்
இந்நிலையில் இந்த நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு கால அவகாசம் கோரி, பாரதி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன. இந்த மனு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நிலுவைத் தொகையை வசூலிக்குமாறு உத்தரவிட்டிருந்தும் அதனை மதிக்காத தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நீதிபதிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

உச்சநீதிமன்ற உத்தரவை நிறுத்திய அதிகாரி யார்
மேலும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை நிறுத்தி வைத்த மத்திய அரசின் அதிகாரி யார் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஒரு அதிகாரி தன்னைத்தானே நீதிபதி என நினைத்துக் கொண்டு உத்தரவை நிறுத்தி வைத்தால், இந்த நாட்டில் சட்டம் ஏதாவது எஞ்சியுள்ளதா என்று கேட்டனர்.

யார் அந்த அதிகாரி, அவர் எங்கிருக்கிறார்: நீதிபதி காட்டம்
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்தி வைத்த, மத்திய அரசு அதிகாரி தனது உத்தரவை திரும்பப் பெறவில்லை எனில் சிறைக்கு செல்ல நேரிடும் என்றும் எச்சரித்தனர். யார் அந்த அதிகாரி, அவர் எங்கிருக்கிறார், அவரை நீதிமன்றத்தில் கொண்டுவந்து நிறுத்துங்கள் எனவும் ஆவேசத்துடன் நீதிபதிகள் கூறினர். மேலும், நிலுவைத் தொகையை, அடுத்த விசாரணை நடைபெறும் மார்ச் 17ம் தேதிக்குள் செலுத்திவிட வேண்டும் என்று தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உடனடியாக தொகையை செலுத்துங்கள்
இதையடுத்து, நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்துமாறு தொலைத் தொடர்புச் சேவை நிறுவனங்களுக்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை சுற்றறிக்கை அனுப்பியது. அதில் மேற்கண்ட தொகையை நேற்றிரவுக்குள் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

பாரதி ஏர்டெல் பதில்
இந்நிலையில், வரும் 20-ஆம் தேதிக்குள் 10 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்தி விடுவதாகவும், எஞ்சிய தொகையை மார்ச் 17ம் தேதிக்குள் செலுத்தி விடுவதாகவும் பாரதி ஏர்டெல் நிறுவனம் பதிலளித்துள்ளது.

நிறுவனத்தை மூட வேண்டியிருக்கும்: வோடபோன்
டாடா நிறுவனம் மார்ச் 17ம் தேதிக்குள் முழுத் தொகையையும் செலுத்தி விடுவதாக உத்தரவாதம் அளித்துள்ளது. ஆனால், வோடஃபோன் ஐடியா நிறுவனம், நிலுவைத் தொகையை உடனடியாக ஒரே தவணையில் செலுத்துமாறு தங்களைக் கட்டாயப்படுத்தினால் நிறுவனத்தை மூட வேண்டியிருக்கும் என்று கடந்த மாதமே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்பிஐ சேர்மன்
டெல்லியில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்த ரஜ்னீஷ் குமார், டெலிகாம் நிறுவனங்கள் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கான பொறுப்பு தொலைதொடர்புதுறையிடம் தான் உள்ளது. அதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் கூறினார்.

திவாலானதாக அறிவித்தால் வங்கிகள் தான் விளைவை சந்திக்கனும்
மேலும், எதாவது ஒரு நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டால், அதோடு தொடர்பு கொண்ட வங்கிகள், ஊழியர்கள், விற்பனையாளர்கள், நுகர்வோர்கள் என ஒரு பெரும் சுற்றுச்சூழல் அமைப்பே பாதிக்கப்படுகிறது, மேலும் அந்த சமயங்களில் வங்கிகள் தான் அதற்கான விலையை செலுத்த வேண்டியிருக்கும் எனவும் ரஜ்னீஷ் குமார் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications