புதிய வங்கி விதி: இனி பணம் எடுத்தாலும் கட்டணம்.. டெபாசிட் செய்தாலும் கட்டணமா? இது ரொம்ப முக்கியம் மக்களே..
ஜனவரி 1, 2022 முதல், இலவச மாதாந்திர வரம்பு முடிந்தவுடன், வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய விதி இப்போது நடைமுறையில் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உத்தரவின் படி, ஏடிஎம் மையங்களில் இருந்து பணம் எடுக்கும் கட்டணம் ஜனவரி 1, 2022 முதல் உயர்த்தப்படும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள முக்கிய வங்கிகளான எஸ்பிஐ வங்கி முதல் துவங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி போன்ற வங்கிகள் இந்த புதிய விதியை நடைமுறைப்படுத்தியுள்ளன.

புதிய வங்கி விதியின் படி எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும்?
இந்த புதிய விதியின் படி யாருக்கெல்லாம் செல்லுபடியாகும், எப்போதெல்லாம் உங்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும், எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்பது போன்ற தெளிவான விபரங்களைப் பார்க்கலாம். ATM மையங்களில் இருந்து பணம் எடுக்க எப்படி இனிமேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ அதேபோல், நீங்கள் வங்கி சென்று பணம் டெபாசிட் செய்தாலும் கூட இனி உங்களிடம் இருந்து ஒரு கட்டணத் தொகை வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. டெபாசிட் கட்டணம் எவ்வளவு என்பதையும் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

எப்போதெல்லாம் இந்த கட்டணம் வசூலிக்கப்படும்? யாருக்கெல்லாம் இது பொருந்தும்?
இந்தியாவின் முக்கிய கடன் வழங்குநர்களான அனைத்து முக்கிய வங்கிகளும் இந்த புதிய விதியை கடைப்பிடிக்க வேண்டும் என்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா உத்தரவிட்டுள்ளது. இதன் படி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி கள் பணம் மற்றும் பணமில்லா ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள் குறித்த தகவலை தங்களின் இணையதளத்தில் புதுப்பித்துள்ளனர். குறிப்பாக இந்த புதிய விதியின் படி, பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச மாதாந்திர அனுமதிக்கப்பட்ட பரிவர்த்தனை வரம்பைத் தாண்டிய பிறகு செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்குக் கட்டணம் வசூலிக்கப்படும்.

கூடுதல் கட்டணம் என்றால், அது எவ்வளவு வசூலிக்கப்படும்?
ஜனவரி 2022 முதல் இலவச மாதாந்திர அனுமதிக்கப்பட்ட வரம்புக்கு அப்பால் ரொக்கம் மற்றும் பணமில்லா ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களை அதிகரிக்க மத்திய வங்கி இந்திய வங்கிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. ஜனவரி 1, 2022 முதல் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான புதிய கட்டணங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, இனி வங்கி வாடிக்கையாளர்கள் மாதாந்திர இலவசப் பரிவர்த்தனைகளின் வரம்பை மீறினால், ஒவ்வொரு வெற்றிகரமான பரிவர்த்தனைக்கும் ரூ. 21 என்ற கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு முன்னர் இந்த கட்டணம் ரூ.20 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுடைய வங்கிகள் உங்களுக்குக் கொடுக்கும் இலவச பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை எவ்வளவு?
உங்களுடைய சொந்த வங்கியில் உங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளின் மாதாந்திர வரம்பு பற்றி நீங்கள் அறிந்துகொள்வது மிக முக்கியமானது. சரியான பரிவர்த்தனை எண்ணிக்கையைத் தெரிந்துகொள்வது, உங்களுடைய கூடுதல் கட்டணங்களைத் தவிர்ப்பதற்கு இது பயனுள்ளதாய் அமையும். வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த வங்கி ஏடிஎம்களில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஐந்து இலவச பரிவர்த்தனைகளுக்கு (நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகள் உட்பட) தகுதியுடையவர்கள்.

பிற வங்கி ATM மையங்களில் பணம் எடுக்க இலவச பரிவர்த்தனைக்கான எண்ணிக்கை எவ்வளவு?
உங்களுடைய சொந்த வங்கியின் ATM மையங்களில் இருந்து பணம் எடுப்பதற்கான இலவச வரம்பு 5 என்பதைப் பார்த்தோம். அதேபோல், நீங்கள் மற்ற வங்கி ATM-களில் இருந்து பணம் எடுப்பதற்கும் இலவச பரிவர்த்தனைக்கான வரம்பு உள்ளது. இது தவிர, வங்கி வாடிக்கையாளர்கள் மற்ற வங்கி ஏடிஎம்களில் இருந்து இலவச பரிவர்த்தனைகளுக்கு (நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகள் உட்பட) 3 பரிவர்த்தனைக்குத் தகுதியுடையவர்கள். அதாவது, மெட்ரோ மையங்களில் மூன்று பரிவர்த்தனைகள் மற்றும் மெட்ரோ அல்லாத மையங்களில் ஐந்து பரிவர்த்தனைகள் என்று வழங்கப்படுகிறது.

நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகள் என்றால் என்ன?
நிதி பரிவர்த்தனை என்பது நீங்கள் ஒவ்வொரு முறையில் வங்கி சேவையைப் பயன்படுத்தி ரொக்கமாகப் பணத்தை எடுக்கும் முறையாகும். குறிப்பாக நீங்கள் ATM மையங்களில் இருந்து பணத்தை எடுப்பது நிதி தொடர்பான பரிவர்த்தனை என்று கூறப்படுகிறது. இதேபோல், நிதி அல்லாத பரிவர்த்தனை என்பது நீங்கள் ரொக்கமாகப் பணத்தை எடுக்காமல் உங்களுடைய வங்கிக் கணக்கு தொடர்பான தகவலை அறிந்துகொள்ளப் பயன்படுத்தப்படும் சேவையாகும். குறிப்பாக, உங்கள் கணக்கில் எவ்வளவு இருப்பு உள்ளது, மினி ஸ்டேட்மென்ட், பின் நம்பர் அல்லது பாஸ்வோர்டை மாற்றம் செய்வது போன்ற சேவைகள் நிதி அல்லாத பரிவர்த்தனையின் கீழ் வருகிறது.

பணம் டெபாசிட் செய்யவும் இனி கட்டணமா?
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் (ஐபிபிபி) வாடிக்கையாளர்களும் இன்று முதல் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். இன்று முதல், இந்த வங்கியின் கணக்கு வைத்திருப்பவர்கள் வரம்பில் இருந்து பணம் எடுப்பதற்கும், டெபாசிட் செய்வதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த வங்கியில் சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகளில் ஒரு மாதத்தில் ரூ.10,000 டெபாசிட் செய்வதற்குக் கட்டணம் ஏதும் இல்லை. இந்த வரம்பை விட அதிகமாக டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என வங்கி தெரிவித்துள்ளது.

இந்த திடீர் மாற்றம் ஏன் நிகழ்கிறது?
ஜூன் 2019 இல் ஆர்பிஐ அமைத்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. ஏடிஎம் கட்டணங்கள் மற்றும் கட்டணங்களின் முழு வரம்பையும் மதிப்பாய்வு செய்ய இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைமை நிர்வாகி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான பரிமாற்ற கட்டமைப்பில் இது குறிப்பிட்ட கவனம் செலுத்துகிறது. இதன்படி, அதிக பரிமாற்றக் கட்டணத்தை வங்கிகளுக்கு ஈடுகட்டவும், பொதுச் செலவுகள் அதிகரிக்கவும், ஒரு பரிவர்த்தனைக்கு வாடிக்கையாளர் கட்டணத்தை ரூ. 21 ஆக அதிகரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications